இனி டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக பயணிக்கலாம்! மத்திய அரசு தாராளம்! யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?
மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக வைத்துள்ள அனைத்து வாகனங்களுக்கும், இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இலவசமாக பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இந்த சலுகையை பயன்படுத்தி கொள்வதற்கு, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் இருந்து பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக்கை (Zero Transaction FASTag) மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனங்களுக்கு பெற்று கொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக வைத்துள்ள அனைத்து வாகனங்களுக்கும், டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பதற்கான நடவடிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தற்போது வரை மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதாவது மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் இத்தகைய வாகனங்கள் 'Invalid Carriage' என வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக வைத்துள்ள அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2.7 கோடி மாற்றுத்திறனாளிகள் இருந்தனர். ஆனால் மாற்றுத்திறனாளிகளில் சிலர் மட்டுமே வாகனங்களை ஓட்டுகின்றனர். அவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கலாம்.

டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட வாகனங்களில் பயன்படுத்துவதற்காக பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் என்ற ஏற்பாட்டை அரசு செய்துள்ளது. அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், தலைமை செயலாளர்கள், மத்திய அரசின் செயலாளர்கள் போன்றோரின் வாகனங்களில் பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் பயன்படுத்தப்படுகிறது.

அத்துடன் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாகனங்களிலும் பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் பயன்படுத்தப்படுகிறது. டோல்கேட் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படாத பிரிவை சேர்ந்தவர்கள் சலுகையை தவறாக பயன்படுத்தாமல் இருப்பதை பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் உறுதி செய்கிறது.

இதற்கிடையே 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னும் பலர் பாஸ்டேக்கிற்கு மாறாத காரணத்தால், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை தற்போது கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்படும்.


Click it and Unblock the Notifications








