பெட்ரோல் கதை ஓவர்... எல்லா வண்டியும் இனி இந்த எரிபொருளில் ஓடப்போகுது... ஒன்றிய அமைச்சர் சொன்ன சூப்பரான தகவல்!
ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி சூப்பரான தகவல் ஒன்றை கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அனைத்து வாகனங்களும் கூடிய விரைவில் எத்தனாலில் (Ethanol) இயங்க கூடிய வகையில் இருக்கும் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவில் கூடிய விரைவில் எத்தனால் பம்ப்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பெட்ரோலின் விலையை விட பயோ-எத்தனாலின் விலை மிகவும் குறைவு என்பதால், வாகன ஓட்டிகள் பணத்தை சேமிக்க முடியும் எனவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பணத்தை சேமிக்கலாம் என்பதுடன், பயோ-எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது அவர் பேசியுள்ளார்.

ஆட்டோ ரிக்ஸாக்கள் முதல் விலை உயர்ந்த கார் வரை அனைத்து வாகனங்களும் கூடிய விரைவில் எத்தனாலில் இயங்கும் திறனை பெற்றிருக்கும் என அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். இந்தியாவில் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் நிதின் கட்காரி மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் விவசாயிகள் எத்தனால் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியா எரிபொருள் இறக்குமதிக்காக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் கோடி ரூபாயை செலவிட்டு வருகிறது. எனவே வாகனங்களில் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் இன்ஜின்களை (Flex Fuel Engines) அறிமுகம் செய்வது அவசியம் எனவும் அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் இன்ஜின்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டால், நாம் இறக்குமதி செய்யும் எரிபொருளின் அளவு குறையும் எனவும், இதன் மூலம் எரிபொருளுக்காக நாம் செலவிடும் தொகை குறையும் எனவும் அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளார். இது நடக்கும்பட்சத்தில், இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்று மாசுபடுவதும் குறையும். ஆனால் இந்த இலக்கை அடைய வேண்டுமென்றால், எத்தனாலின் உற்பத்தியை அதிகமாக்குவது அவசியம் என அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். 6 மாத காலத்திற்குள் வாகனங்களில் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் இன்ஜின்களை அறிமுகம் செய்ய வேண்டும் என கார் நிறுவனங்களுக்கு அமைச்சர் நிதின் கட்காரி கடந்த வாரம் அறிவுரை வழங்கியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

பசுமை மற்றும் மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஒன்றிய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மேலும் டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனங்கள் தங்களது இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் இன்ஜின்களை ஏற்கனவே தயாரிக்க தொடங்கி விட்டதாகவும் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

பெட்ரோலுடன் மெத்தனால் அல்லது எத்தனால் கலந்து உருவாக்கப்படுவதுதான் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் அல்லது ஃப்ளக்ஸிபல் ஃப்யூயல் என அழைக்கப்படுகிறது. பெட்ரோலுடன் ஒப்பிடுகையில் ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. எனவேதான் ஒன்றிய அரசு தற்போது ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் இன்ஜின்களின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.

இந்த ஃப்ளக்ஸ்-ஃப்யூயல் இன்ஜின்கள் பெட்ரோல் மற்றும் பயோ எரிபொருள் என இரண்டிலும் இயங்கும் திறனை பெற்றிருக்கும். இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டையும் ஒன்றிய அரசு தற்போது ஊக்குவித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமும் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் காற்று மாசுபாடு ஆகிய 2 முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்காரி ஆகியோர் இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே இந்தியாவில் வழக்கமான பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாடு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் மற்றும் மாற்று எரிபொருட்களின் பயன்பாடு அதிகரிக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications








