இந்தியாவின் புதிய நீர்மூழ்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் கல்வாரியின் சிறப்புகள்!
இந்திய கடற்படையிடம் வெறும் 13 நீர்மூழ்கி போர்க்கப்பல்களே இருக்கின்றன. அதிலும், பெரும்பாலானவை 30 ஆண்டுகள் ஆயுளை கடந்துவிட்டதால், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றன.
இதையடுத்து, புதிதாக 6 நீர்மூழ்கி போர்க்கப்பல்களுக்கு இந்திய கடற்படை ஆர்டர் கொடுத்தது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டிசிஎன்எஸ் நிறுவனத்திடமிருந்து தயாரிப்பு உரிமம் பெற்று மும்பை, மத்கானில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இந்த நீர்மூழ்கி கப்பல்கள் கட்டப்படுகின்றன.
அதில், கட்டப்பட்டிருக்கும் முதலாவது நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் கல்வாரியை கடலில் செலுத்தி சோதனைகள் மேற்கொள்வதற்கான நிகழ்ச்சி நேற்ரு நடந்தது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் கடற்படையில் இணைக்கப்பட உள்ள இந்த புதிய நீர்மூழ்கி போர்க்கப்பல், இந்தியாவின் கடற்பகுதி பாதுகாப்பையும், பலத்தையும் அதிகரிக்கும். இந்த நீர்மூழ்கி கப்பல் பற்றிய சில கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

01 ஒப்பந்தம்
2005ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டிசிஎன்எஸ் நிறுவனத்தின் உரிமத்தை பெற்று 6 நீர்மூழ்கி கப்பல்களை கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.20,000 கோடி. புராஜெக்ட் 75 என்ற குறியீட்டுப் பெயரில் இந்த திட்டம் அழைக்கப்படுகிறது.

02. முதல் கப்பல்
ஸ்கார்ப்பின் க்ளாஸ் [ஸ்கார்ப்பின் என்பது ஒரு வகை கடல் மீனின் பெயர்] என்ற பெயரில் அழைக்கப்படும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் 6 புதிய நீர்மூழ்கி போர்க்கப்பல்களில் முதலாவதாக கட்டப்பட்டிருக்கும் நீர்மூழ்கி போர்க்கப்பல்தான் ஐஎன்எஸ் கல்வாரி. ஒவ்வொரு 9 மாத இடைவெளிகளில் ஒரு நீர்மூழ்கி போர்க்கப்பலை கட்டமைத்து கொடுக்க மத்கான் கப்பல் கட்டும் தளம் திட்டமிட்டுள்ளது. இதில், 5 கப்பல்கள் சாதாரண ரகத்திலும், ஒன்று பிற கப்பல்களை விட நீண்ட நாட்கள் தண்ணீருக்குள் இருக்கும் தொழில்நுட்பத்தையும் கொண்டிருக்கும்.

03. வடிவம்
ஐஎன்எஸ் கல்வாரி 66 மீட்டர் நீளமும், 6.2 மீட்டர் விட்டமும் கொண்ட நீர்மூழ்கி போர்க்கப்பல். இந்த நீர்மூழ்கி போர்க்கப்பல் 1,550 டன் எடை கொண்டது.

04. உள்நாட்டு பாகங்கள்
ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கி போர்க்கப்பலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 30 சதவீத உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை.

05. எஞ்சின்
டீசல் எஞ்சின் மற்றும் பேட்டரியில் இயங்கும் மின் மோட்டார்கள் மூலமாக இயக்கப்படும். நீரில் மூழ்கி செல்லும்போது மணிக்கு 37 கிமீ வேகத்திலும், நீர் மட்டத்தில் செல்லும்போது மணிக்கு 22 கிமீ வேகத்தில் செல்லும்.

06. சிறப்பம்சங்கள்
அதிகபட்சமாக 350 மீட்டர் வரையிலான ஆழத்திலும், 40 நாட்கள் வரை தண்ணீரில் இருக்கும் வசதிகள் உள்ளன.

07. ஆயுதங்கள்
எதிரிகளின் ஏவுகணை தாக்குதல்களை முறியடிப்பதற்கான ஏவுகணைகளும், இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான ஏவுகணைகளையும் இதிலிருந்து செலுத்த முடியும்.

08. பரிசோதனைகள்
ஐஎன்எஸ் கல்வாரியை கடலில் செலுத்தி, அதன் திறன்களை சோதிக்கும் நடவடிக்கைகள் துவங்கியிருக்கின்றன. அடுத்த 10 மாதங்கள் கடலில் செலுத்தி சோதனைகள் நடத்தப்படும். அடுத்த ஆண்டு செப்டம்பரில் இந்திய கடற்படையில் முறைப்படி சேர்க்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








