16,000 ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்த ஹை-கோர்ட்... 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் உற்பத்தி பணியில் அமர ராஜா!
8 நாட்களுக்கு பிறகு மீண்டும் அமர ராஜா பேட்டரி நிறுவனம் உற்பத்தி பணியில் களமிறங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவின் மிக பிரபலமான பேட்டரி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று அமர ராஜா. இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கார்காம்பாடி மற்றும் நுனெகுண்டலப்பள்ளி ஆகிய இரு பகுதிகளிலும் செயல்பட்டு வருகின்றது.

இவ்விரு ஆலைகளிலும் உற்பத்தி பணியை உடனடியாக நிறுத்துமாறு ஆந்திர மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பத்திருந்தது. கடந்த ஏப்ரல் 30ம் தேதி இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இதனால், அனைத்து பணிகளும் உடனடியாக நிறுத்தும் நிலை உருவாகியது.

ஆகையால், மாநில அரசின் உத்தரவை எதிர்த்து அமர ராஜா நிர்வாகும் அம்மாநில உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இதனை விசாரித்து வந்த நீதிமன்றம், ஆந்திர மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியிருந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருக்கின்றது.

இதனால், கார்காம்பாடி மற்றும் நுனெகுண்டலப்பள்ளி ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள உற்பத்தி ஆலையிலும் மீண்டும் தயாரிப்பு பணிகளை நிறுவனம் தொடங்கியிருக்கின்றது. மே 8ம் தேதியில் இருந்தே நிறுவனம் உற்பத்தி பணிகளை தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உற்பத்தி பணிகளை தொடங்கிய பின்னர் வரும் காலங்களில் மாநிலத்தின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்பட இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது. தொடர்ந்து, ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆர்டர்களுக்கு எந்தவொரு தடையுமின்றி அனைத்து பொருட்களும் சப்ளை செய்யப்படும் என்ற வாக்குறுதியையும் அளித்துள்ளது.

அமர ராஜா நிறுவனம் அதன் பேட்டரிகளை அசோக் லேலேண்ட், ஃபோர்டு இந்தியா, ஹோண்டா, ஹூண்டாய், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுசுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

இதுதவிர, இந்திய பெருங்கடலைச் சார்ந்திருக்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் அதன் பேட்டரியை ஏற்றுமதி செய்து வருகின்றது. வாகனங்களுக்கு பேட்டரி உற்பத்தியை மையமாகக் கொண்டு இயங்கும் அமர ராஜா நிறுவனத்தின்கீழ் 16 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஆந்திர அரசின் திடீர் உத்தரவால் இவர்களின் வேலை பறிபோகும் சூழ்நிலையில் இருந்தது. இந்த நிலையிலேயே கணிசமான கட்டுப்பாட்டுகளுடன் நிறுவனத்தின் உற்பத்தி பணிகளை தொடர ஆந்திர நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








