இந்திய விமானப்படையை பற்றிய மெய்சிலிர்க்க வைக்கும் உண்மைகள்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்...
இந்திய விமானப்படை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் வல்லமைமிக்க விமானப்படைகளில் ஒன்றாக, இந்திய விமானப்படை (IAF - Indian Air Force) கருதப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது மிகப்பெரிய விமானப்படையாக இந்திய விமானப்படை திகழ்கிறது. இந்திய விமானப்படை சட்டத்தின் கீழ், கடந்த 1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது.

இடைப்பட்ட ஆண்டுகளில் போர்களில் மட்டுமல்லாது, மீட்பு பணிகளிலும், அமைதி நடவடிக்கைகளிலும், மிக சிறப்பாக செயல்பட்டு இந்திய விமானப்படை தன்னை நிரூபித்து காட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ம் தேதி, இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய விமானப்படை குறித்து பெருமைப்பட வைக்கும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

'நபா ஸ்பர்ஸம் தீப்தம்' (Nabha Sparsham Deeptham) என்பதுதான் இந்திய விமானப்படையின் நீதி வாக்கியம். 'புகழுடன் வானத்தை தொடுவோம்' என்பதே இதன் அர்த்தம். பகவத் கீதையின் 11வது அத்தியாயத்தில் இருந்து இது எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் முதல் பெண் ஏர் மார்ஷல் (Air Marshal) என்ற பெருமைக்குரியவர் பத்மாவதி பண்டோபாத்யாய். கடந்த 1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரின்போது, சிறப்பாக செயல்பட்டதற்காக, பத்மாவதி பண்டோபாத்யாயிக்கு, விஷிஷ்த் சேவா மெடல் ( VSM - Vishisht Seva Medal) வழங்கப்பட்டது.

இந்திய விமானப்படையின் சிறப்பு படையான 'கருடா கமாண்டோ படை' கடந்த 2004ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. கருடா கமாண்டோ படையில் தற்போதைய நிலையில், 2,000க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற வீரர்கள் உள்ளனர். தேடுதல், மீட்பு மற்றும் பேரிடர் கால நிவாரண பணிகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான நான்கு போர்களிலும், சீனாவிற்கு எதிரான ஒரு போரிலும் இந்திய விமானப்படை தனது பலத்தை காட்டியுள்ளது. கடந்த 1947, 1965, 1971 மற்றும் 1999ம் ஆண்டுகளில், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றுள்ளது. அதே சமயம் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே கடந்த 1962ம் ஆண்டு போர் நடந்துள்ளது.

1971ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, பாகிஸ்தானுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட ஏபிசிகளையும் (APC - Armoured Personnel Carrier), 29 டாங்கிகளையும் இந்திய விமானப்படை அழித்தது.

இந்திய விமானப்படை கடந்த 1932ம் ஆண்டு வெறும் 25 வீரர்களுடன் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் இன்றோ ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களுடன் மிக பிரம்மாண்டமானதாக உருவெடுத்துள்ளது. கடந்த 1945ம் ஆண்டு முதல் 1950ம் ஆண்டு வரை, ராயல் இந்திய விமானப்படை (RIAF - Royal Indian Air Force) என்றுதான், இந்திய விமானப்படை அழைக்கப்பட்டது.

அதன்பின்பு 1950ம் ஆண்டு இந்தியா குடியரசு நாடாக உருவெடுத்தபோது, இந்திய விமானப்படையில் இருந்த 'ராயல்' என்ற வார்த்தையை இந்திய அரசு நீக்கியது. உலக அளவில் நான்காவது பெரிய விமானப்படையாக இருந்தாலும், வலிமை என்ற அளவில் பார்த்தால், உலகின் 7வது வலுவான விமானப்படையாக இந்திய விமானப்படை திகழ்கிறது.


Click it and Unblock the Notifications








