5 மாத குழந்தையின் உயிருக்காக போராடிய ஆம்புலன்ஸ் டிரைவருக்கு நடந்த கதி!! ஓவர்டேக் செய்தது குற்றமா?
ஆம்புலன்ஸ் (Ambulance) வாகனத்திற்கு வழிவிட வேண்டும் என்பது உலக வழக்கம். அதாவது, இந்தியா மட்டுமின்றி எந்தவொரு நாட்டிலும் சாலையில் ஆம்புலன்ஸை கண்டால் ஒதுங்கி வழிவிடும் பழக்கம் அனைத்து வாகன ஓட்டிகளிடமும் உள்ளது. சில நாடுகளில் ஆம்புலன்ஸுக்கு என்றே பிரத்யேகமான பாதைகள் கூட உள்ளன. அந்த அளவிற்கு இல்லையென்றாலும், குறைந்தது சாலையில் ஒதுங்கி வழிவிடும் பழக்கமாவது நம் அனைவரிடத்தில் இருக்க வேண்டும். ஆனால், பெங்களூரில் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் இன்னோவா காரில் வந்தவர்கள் நடந்துக் கொண்ட விதம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது. அப்படி என்ன நடந்தது? வாருங்கள் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட சில அவசர கால வாகனங்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளில் விலக்கு உள்ளது. அதாவது, விபத்து ஏற்படாது எனில் சிவப்பு சிக்னலில் ஆம்புலன்ஸ் நிற்க வேண்டியதில்லை (அவசரம் எனும் பட்சத்தில்). அதேபோல், பாதிப்பு ஏற்படாத அளவிற்கு ஆம்புலன்ஸை மிக வேகமாக இயக்க முடியும்.

ஆனால், இதற்கெல்லாம் தனி திறன் வேண்டுமென்பதால், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு கடுமையான பயிற்சிகளும், வழிக்காட்டுதல்களும் கொடுக்கப்படுகிறது. ஆம்புலன்ஸுக்கு எந்தவொரு வாகன ஓட்டியும் ஒதுங்கி வழிவிட வேண்டும், அது நாட்டின் பிரதமர்/ அதிபர் வாகனமாக இருந்தாலும் சரி. வழிவிடாத வாகனங்களை அதிவேகமாக சென்று ஓவர்டேக் செய்வதற்கு ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு அனுமதி உள்ளது.
ஆனால், ஓவர்டேக் செய்வதற்கு முன்னர் ஹார்ன் மற்றும் சைரன் மூலமாக ஓவர்டேக் செய்யப்படும் வாகன ஓட்டியை எச்சரிக்க வேண்டும். எச்சரிக்கையை கொடுக்காமல் சென்றால், ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் அதனுள் இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்த விஷயங்களில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் எப்போதும் மிகுந்த கவனமுடன் இருப்பார்கள். அதையும் தாண்டி வேறு எதாவது வாகனத்துடன் ஆம்புலன்ஸ் மோத நேர்ந்தால், அதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துவிட்டு தொடர்ந்து ஆம்புலன்ஸை இயக்கலாம்.

இந்த அளவிற்கு பல்வேறு சலுகைகளை கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர்களுள் ஒருவர் மீது, தங்களது டொயோட்டா இன்னோவா காரை வேகமாக ஓவர்டேக் செய்ததாக 3 பேர் ஆம்புலன்ஸை வழிமறித்து தாக்கி உள்ளனர். பெங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில், சம்பவத்தின்போது ஆம்புலன்ஸினுள் 5 மாத குழந்தை உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளது. இதை பற்றி அந்த மூவரிடத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் எடுத்து கூறியும் அவர்கள் தொடர்ந்து டிரைவரை தாக்கியுள்ளனர். உடனடியாக அந்த இடத்திற்கு போலீஸ் ஒருவர் வந்து அந்த மூவரை தடுத்து நிறுத்தி ஆம்புலன்ஸை செல்ல அனுமதித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய யுவராஜ் சிங், மஞ்ச்நாத் மற்றும் லதீஷ் ஆகிய மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வீடியோவின் இறுதியில், சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படும் 5 மாத குழந்தையையும், அவரது தாயையும் காணலாம். குழந்தைக்கு ஆக்ஸிஜன் உதவிக்காக பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து சென்றுள்ளனர்.
All three Arrested pic.twitter.com/ptD0gPVlqG
— Drunk Journalist (@drunkJournalist) June 11, 2024
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விஷயத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் மீது கூட தவறு இருக்கலாம். ஆனால், ஆம்புலன்ஸ் ஒன்று 100 மீட்டர் தொலைவில் வருகிறது என்றாலே அதன் சைரன் சத்தம் காதை கிழிக்கும். அப்படியிருக்கையில், இந்த டொயோட்டா இன்னோவா கார் பயணிகளுக்கு மட்டும் எப்படி கேட்காமல் போனது. ஆம்புலன்ஸின் சைரன் சத்தம் கேட்டாலே உடனடியாக அலார்ட் ஆக வேண்டியது அவசியமாகும். ஆதலால், இந்த விஷயத்தில் இந்த மூவரை போலீசார் கைது செய்திருப்பதில் எந்த தவறும் இல்லை.


Click it and Unblock the Notifications









