டாக்டர்களே அசந்துட்டாங்க! சாதாரண லுங்கி மூலம் இளம்பெண் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்! நாடே பாராட்டுது!
நம் வாழ்க்கையில் நம்முடனே நிறைய ஹீரோக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். சாலை விபத்துக்கள் (Road Accidents) போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்களை, சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து, உயிரை காப்பாற்றும் உன்னதமான பணியை அவர்கள் செய்து வருகின்றனர்.
இதற்காக அவர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து, ஆம்புலன்ஸ்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். இதில், ஒரு சில ஆம்புலன்ஸ் டிரைவர்கள், தேவைப்படும் நேரங்களில் மிகவும் சமயோசிதமாகவும் நடந்து கொள்கின்றனர். கடந்த காலங்களில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மிகவும் சமயோசிதமாக நடந்து கொண்ட சம்பவங்கள் நிறைய நடைபெற்றுள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற ஒரு சம்பவம் இதற்கு ஒரு உதாரணம். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவருக்கு, நோயாளியை அவசரமாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்ற அழைப்பு வந்தது. அந்த சமயத்தில் அவர் சட்டை அணியாமல் இருந்தார்.
சட்டை எல்லாம் அணிந்து கொண்டிருந்தால், நேரம் வீணாகி விடும் என கருதிய அவர், அப்படியே ஆம்புலன்ஸை எடுத்து கொண்டு புறப்பட்டு விட்டார். அவர் சட்டை அணியாமல் நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து வந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் காட்டு தீ போல் பரவியது.

நோயாளிகளின் உயிரை காப்பாற்ற வேண்டுமென்றால், ஒவ்வொரு வினாடியும் முக்கியம். எனவே சட்டை அணியும் நேரத்தை மிச்சப்படுத்தி, நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்த வரிசையில் தற்போது மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டுள்ளன. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் 30ம் தேதி சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. அப்போது கார் மீது லாரி மோதியதால், 19 வயது மட்டுமே நிரம்பிய இளம்பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த சாலை விபத்தில், இளம்பெண்ணின் ஒரு கால் உடைந்தது. இது குறித்த தகவல் கிடைத்ததும், சஜீர் என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
அங்கு சென்றதும் முதல் வேளையாக தனது லுங்கியை கழற்றி, இளம்பெண்ணுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தார். அதாவது இளம்பெண்ணின் உடைந்த காலை, ஆரோக்கியமாக இருந்த மற்றொரு கால் உடன், தனது லுங்கியை பயன்படுத்தி அவர் கட்டி விட்டார். பின்னர் அந்த இளம்பெண்ணை அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
ஆம்புலன்ஸ் டிரைவர் சஜீரின் இந்த சமயோசிதமான செயலை மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர். அவர் இப்படி செய்த காரணத்தால், சாலை விபத்தில் சிக்கிய இளம்பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது இந்த செயல் மூலம் இளம்பெண்ணுக்கு வலி குறைந்தது என்பது மருத்துவர்களின் கருத்து.
அத்துடன் உடைந்த காலில் மேற்கொண்டு பாதிப்புகள் ஏற்படுவதையும், சஜீரின் இந்த செயல் தடுத்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஒருவேளை இளம்பெண்ணின் உடைந்த காலை, மற்றொரு கால் உடன் கட்டாமல், அவரை சஜீர் தூக்கியிருந்தால், கடுமையான பின் விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே சமூக வலை தளங்களிலும் சஜீருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இது தொடர்பான வீடியோ ஒன்றை 24 நியூஸ் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில், லுங்கி இல்லாமல் மருத்துவமனைக்கு வந்த சஜீர் அணிந்து கொள்வதற்காக போர்வை வழங்கப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்களை காப்பாற்ற, ஆம்புலன்ஸ் டிரைவர்கள் எவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகின்றனர் என்பதை இந்த சம்பவம் நமக்கு தெளிவாக எடுத்து காட்டுகிறது. இந்த செய்தியில் நாம் பார்த்த 2 ஆம்புலன்ஸ் டிரைவர்களும், தங்கள் மானத்தை விட, நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு பாராட்டுக்கள்.


Click it and Unblock the Notifications








