குதிரையுடன் நடந்த பந்தயத்தில் மண்ணை கவ்விய ரயில்... இந்த உண்மையை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க
குதிரையுடன் நடந்த ரேஸில் ரயில் மண்ணை கவ்வியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமானம், கப்பல், பஸ் என பல்வேறு போக்குவரத்து முறைகள் இருந்தாலும் கூட, இன்றைய கால கட்டத்தில் ரயில்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றன. நம்மில் பலர் விமானத்தில் பயணித்திருக்க மாட்டோம். கப்பலிலும் சென்றிருக்க மாட்டோம். ஆனால் நிச்சயமாக ரயிலில் பயணம் செய்திருப்போம். மேற்கண்ட அனைத்து போக்குவரத்து முறைகளை காட்டிலும் ரயிலில் கட்டணம் குறைவு.

மேலும் சௌகரியமாகவும் பயணம் செய்யலாம். எனவே பயணிகளின் முதல் தேர்வாக ரயில்கள் உள்ளன. இது தவிர சரக்கு போக்குவரத்திற்கும் ரயில்கள் இன்றியமையாதவையாக உள்ளன. இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட ரயிலை பற்றி பலருக்கும் தெரியாத ஆச்சரியமான ஒரு விஷயத்தை பற்றிதான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்டு ட்ரீவீதிக் (Richard Trevithick) என்பவர்தான், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற முதல் நீராவி இன்ஜினை அறிமுகம் செய்தார். இந்த நீராவி இன்ஜின் கடந்த 1804ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சராசரியாக மணிக்கு 10 மைல்களுக்கும் குறைவான வேகத்தில்தான் அதனால் பயணிக்க முடிந்தது.

ஆனால் இன்று அதை விட சுமார் 30 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. குறிப்பாக புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் ஜப்பான் தலைசிறந்து விளங்குகிறது. மணிக்கு 360 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்க கூடிய இல்லை... இல்லை... பறக்க கூடிய ரயில்கள் கூட இன்று இயக்கப்படுகின்றன.

ஜப்பான் மட்டுமல்லாது, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளும் இவ்வாறு அதிவேகத்தில் பறக்கும் ரயில்களை இயக்குகின்றன. ஆனால் ஒரு காலத்தில் குதிரையுடன் நடைபெற்ற ரேஸில் ரயில் தோற்றுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும் இது உண்மைதான்.

குதிரையுடன் நடைபெற்ற பந்தயத்தில் அமெரிக்காவின் முதல் நீராவி இன்ஜின் தோல்வியடைந்துள்ளது என்பது வரலாற்று உண்மை. பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக, பால்டிமோர் மற்றும் ஓகியோ ரயில்ரோடு நிறுவனத்திற்கு கடந்த 1827ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியை பெற்ற முதல் அமெரிக்க நிறுவனம் இதுதான்.

ஆனால் குதிரையால் இழுக்க கூடிய ரயில்களுக்கு பதிலாக, கடினமான மற்றும் கரடுமுரடான பாதைகளில் பயணிக்கும் திறன் வாய்ந்த நீராவி இன்ஜினை உருவாக்க முடியாமல் அந்த நிறுவனம் திணறியது. என்னது குதிரையால் இழுக்க கூடிய ரயிலா? என்ற சந்தேகம் இங்கே உங்களுக்கு வரலாம். ஆம், அந்த காலத்தில் அப்படி ஒரு போக்குவரத்து இருந்தது.

அந்த கால கட்டத்தில் குதிரைகள்தான் ரயிலை இழுத்து செல்லும். ஆனால் இதற்கு மாற்றாக திறன் வாய்ந்த நீராவி இன்ஜினை அந்த நிறுவனத்தால் உருவாக்க முடியவில்லை. அப்போதுதான் பீட்டர் கூப்பர் (Peter Cooper) என்ற தொழிலதிபர் உள்ளே வந்தார். பால்டிமோர் மற்றும் ஓகியோ ரயில்ரோடு நிறுவனத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற இன்ஜினை அவர் டிசைன் செய்தார்.

Picture credit: Chris55/Wiki Commons
அவர் அதனை டாம் தம்ப் (Tom Thumb) என அழைத்தார். இந்த சூழலில், கடந்த 1830ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி அந்த இன்ஜின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பால்டிமோருக்கு அருகே இருந்த பால்டிமோர் மற்றும் ஓகியோ ரயில்ரோடு டிராக்கில் வைத்து அந்த இன்ஜின் சோதனை செய்யப்பட்டது. அப்போது அந்த இன்ஜினுக்கும், குதிரையால் இழுக்க கூடிய ரயிலுக்கும் இடையே பந்தயம் வைக்கப்பட்டது.

இந்த பந்தயத்தை பீட்டர் கூப்பர் ஏற்று கொண்டார். ஆரம்பத்தில் பீட்டர் கூப்பரின் நீராவி இன்ஜின்தான் முன்னணியில் இருந்தது. ஆனால் பெல்ட் அறுந்த காரணத்தால், பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் நீராவி இன்ஜினுக்கு ஏற்பட்டது. இறுதியில் 'பினிஷ் லைனை' குதிரை முதலில் கடந்து வெற்றி பெற்றது.

Picture credit: Malyszkz/Wiki Commons
இருந்தபோதும் பீட்டர் கூப்பரின் நீராவி இன்ஜினில் காணப்பட்ட அதிக சக்தி மற்றும் வேகத்தால் பால்டிமோர் மற்றும் ஓகியோ ரயில்ரோடு நிறுவன அதிகாரிகள் வெகுவாக ஈர்க்கப்பட்டனர். இதன்பின் ரயில் போக்குவரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்பட்டது. புதுப்புது தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டன. இதன் விளைவாகதான் இன்று நாம் அதிவேக ரயில்களில் பயணித்து கொண்டிருக்கிறோம்!!


Click it and Unblock the Notifications








