விமானமும் போச்சு, வாழ்க்கையும் போச்சு... பார்வையாளர்களுக்கு ஆசைப்பட்டு சிறையில் கம்பி எண்ணும் அமெரிக்கர்!
இளைஞர்கள் மத்தியில் யுட்யூப் மோகம் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, யுட்யூப் வாயிலாக காசு சம்பாதிக்க முடியும் என்பது தெரிந்த பின்னர் பலர் எப்படியாவது அதில் சாதித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். சிலர் தங்களுடைய தனித் திறமையின் வாயிலாக பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துக் கொண்டிருக்கின்றனர்.
அதேவேளையில், ஒரு சிலர் முரண்பாடான செயல்களைச் செய்து பார்வையாளர்களைக் கவர திட்டமிட்டு சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர். அந்தவகையில், பார்வையாளர்களைக் கவரபோய் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ஓர் 29 வயதான இளைஞர் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் ட்ரெவர் ஜேக்கப். யுட்யூபில் அதிகம் ஆக்டிவாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். வித்தியாசமான வீடியோக்களை பகிர்வதில் இவர் பெயர்போனவர் ஆவார். இதன் வாயிலாக கிடைத்த பார்வையாளர்கள் அவருக்கு போதியதாக தெரியவில்லை. இந்த நிலையிலேயே, அவராகவே வேண்டுமென்றே விமானத்தை அழித்து அதுகுறித்த வீடியோவை யுட்யூபில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
இந்த குற்றத்திற்காகவே அவர் தற்போது சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கின்றார். முன்னதாக ட்ரெவர் ஜேக்கப்பிடம் விமான விபத்து குறித்து விசாரித்தபோது, அவர், அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகக் கூறினார். அதிர்ஷ்டவசமாக அப்போது தான் பாராசூட் அணிந்திருந்த காரணத்தினாலேயே தான் தப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், ஜேக்கப்பின் இந்த கருத்தில் உடன்பாடில்லாத அமெரிக்க காவல்துறை, தீவிர விசாரணையில் களமிறங்கியது. இந்த நிலையிலேயே அவர் யுட்யூப் வீடியோவிற்காக வேண்டும் என்றே அந்த விமானத்தை பறக்கவிட்டு அழித்தார் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஜேக்கப் அனைத்துக் கோணங்களிலும் விமானம் விபத்துக்குள்ளாவதை படமெடுத்து யுட்யூப் சேனலில் பதிவிட்டிருந்தார்.
எதிர்பாராத விதமாக நேரிடும் விபத்தை எப்படி இந்த அளவு துள்ளியமாக அவரால் படமெடுக்க முடிந்தது என்கிற கோணத்தில் ஜேக்கப் இடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் வாயிலாகவே அவர் குற்றம் செய்ததுக் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, அவர் விமானம் விபத்துக்குள்ளாகப் போக இருப்பதை உணர்ந்த பின்னர், அதைக் காப்பாற்றும் விதமாக எந்த முயற்சியையும் ஜேக்கப் மேற்கொள்ளவில்லை என்பதையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.

எனவே இந்த மோதல் திட்டமிட்டே செய்யப்பட்டது என்பது துள்ளியமாக தெரிய வந்திருக்கின்றது. ஆனால், யுட்யூபரோ தான் ஓர் மிக சிறந்த விமானி மற்றும் ஸ்கை டைவர் என கூறி, நானே எப்படி என்னுடைய விமானத்தை அழிப்பேன் என்றும் சாமர்த்தியான வாதத்தை முன் வைத்திருக்கின்றார்.
ஆனால், விமானத்திலும், உடல்களிலும் ஜேக்கப் கேமிராவைப் பொருத்தியிருந்த விதம் அவரை போட்டுக் கொடுத்துவிட்டது. இதுதவிர, தான் எந்த சிக்கலிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக விமானம் தானாக விபத்தைச் சந்தித்ததைப் போல காவல்துறையிடம் ஜேக்கப் கட்டுக்கதைகளை கூறியிருக்கின்றார். மேலும், தனக்கு விமானம் எங்கு விழுந்து நொருங்கியது என்பதும் தெரியாது என்றும் அவர் கூறி இருக்கின்றார்.
அதேவேளையில், விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் 24 நவம்பர் 2021-க்கு பின்னர் மீண்டும் 10 டிசம்பர் 2021 அன்று விமானம் விபத்தைச் சந்தித்த பகுதிக்கு சென்று அதன் உதிரிபாகங்களைச் சேகரித்திருக்கின்றார். அதிகாரிகளை குழம்பச் செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் விமானத்தின் நொறுங்கிய பாகங்களை குப்பைத் தொட்டியிலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் தூக்கி வீசி இருக்கின்றார்.
இதுவும் போலீஸாரின் விசாரணைக்கு பின்னர் தெரிய வந்தது. இத்தகைய முரண்பாடான செயல்களில் ஈடுபட்டதன் காரணத்தினாலேயே ஜேக்கப்பிற்கு தற்போது உச்சபட்ச தண்டனையாக 20 ஆண்டுகள் சிறைக் காவல் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஒட்டுமொத்த யுட்யூப் பயனர்களையும் திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக ட்ரெவர் ஜேக்கப் செய்த இந்த செயலே இப்போது அவருக்கே வினையை ஏற்படுத்தியிருக்கின்றது.
அவர் அழித்தது ஒற்றை எஞ்ஜின் கொண்ட தனிநபர் பயன்பாட்டு விமானம் ஆகும். விமானத்தை தனி ஆளாக இயக்கிய அவர் குறிப்பிட்ட உயரத்திற்கு சென்ற பின்னர், அந்த விமானத்தை தரையில் மோதி அழித்திருக்கின்றார். அது தரையில் வந்து மோதுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே பாராசூட் வாயிலாக அவர் வெளியேறினார்.
ட்ரெவரின் இந்த செயல் சினிமாக் காட்சிகளையே மிஞ்சும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும் பார்ப்போரையும் பதைபதைக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. ட்ரெவர் ஜேக்கப் இந்த விமானத்தை கலிஃபோர்னியாவின் லாஸ் பட்ரஸ் தேசிய வனப் பகுதிக்கு மேலே எடுத்துச் சென்றே விபத்தில் சிக்க வைத்தார். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேவேளையில், அந்த வனப் பகுதியில் சுற்றித் திரிந்த வன உயரினங்கள் பாதிப்பைச் சந்தித்தாக கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: யுட்யூபில் ஃபேமஸாக வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் ஒரு சிலர் கார்களை அழித்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், அந்த சம்பவங்கள் அனைத்தும் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் பாதுகாப்பான மைதானங்களில் வைத்தே நிகழ்த்தப்பட்டது. ஆனால், ஜேக்கப் நிகழ்த்தியிருக்கும் சம்பவம் அப்படியானது அல்ல. எனவேதான் அவர்மீது தற்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









