மத்திய அமைச்சர் அமித் ஷாவின் காரை வழிமறித்த நபருக்கு நடந்த கதி!! ஹைதராபாத்தில் அரங்கேறிய சம்பவம்
ஹைதராபாத்திற்கு வருகை தந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வாகனத்தை மறித்து தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சியின் பிரமுகர் ஒருவர் தனது காரை நிறுத்தி சற்று நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். யார் அந்த பிரமுகர்? அதன்பின் என்ன நடந்தது என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியா பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து 1947இல் விடுதலையை பெற்றாலும், நிஜாம் ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்த ஹைதராபாத் 1948இல் தான் இந்தியாவுடன் இணைந்தது. ஹைதராபாத் விடுதலை பெற்ற செப்டம்பர் 17ஆம் தேதி ஹைதராபாத் விடுதலை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வருடமும் ஹைதராபாத் விடுதலை தினத்திற்கு மாநில பாஜக அரசு பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (செப்.17) ஹைதராபாத்திற்கு வருகை தந்திருந்தார். செகந்திராபாத்தில் உள்ள இராணுவ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு அமைச்சர் வந்து கொண்டிருந்த போது அவரது வாகன படையை மறிக்கும் விதமாக கோசூலா ஸ்ரீனிவாஸ் என்ற தெலுங்கானா ராஷ்டிரியா சமீதி (TRS) கட்சியின் பிரமுகர் ஒருவர் தனது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரை நிறுத்தியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சரின் காரையே நிறுத்தியதால், இந்த சம்பவம் சற்று நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

இதில் சிறிது அதிர்ச்சியடைந்த அமைச்சரின் பாதுகாவலர்கள் உடனடியாக கோசூலா ஸ்ரீனிவாஸின் காரை நோக்கி ஓடிவந்து, அவரை அங்கிருந்து நகர வற்புறுத்தியுள்ளார். இதில் வாக்குவாதங்கள் ஏற்பட, ஒரு கட்டத்தில் டிஆர்எஸ் பிரமுகரின் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் பின்பக்க ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவரை வலுக்கட்டாயப்படுத்தி அந்த இடத்தில் இருந்து அமைச்சரின் பாதுகாவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர். பிறகு இதுகுறித்து ஊடகங்களுக்கு சம்மந்தப்பட்ட டிஆர்எஸ் பிரமுகர் கோசூலா ஸ்ரீனிவாஸ் அளித்த பேட்டியில், "என் கார் அப்படியே நின்றது. இதனால் நான் பதற்றத்தில் இருந்தேன். நான் அவர்களிடம் (போலீஸ் அதிகாரிகள்) பேசுவேன்.

அவர்கள் எனது காரை சேதப்படுத்தி உள்ளனர். நான் போவேன், இது தேவையில்லாத பதற்றம்" என்றார். தெலுங்கானா மாநில பாஜக நிர்வாகிகளால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் டிஆர்எஸ் தலைவரும், தெலுங்கானா மாநில முதலமைச்சருமான கே சந்திரசேகர் ராவ் உள்பட டிஆர்எஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

ஏனெனில் தெலுங்கானா மாநில அரசால் செப்.17ஆம் தேதி தெலுங்கானா தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது. அப்படியிருக்கையில், டிஆர்எஸ் கட்சியின் நிர்வாகி கோசூலா ஸ்ரீனிவாஸ் உள்துறை அமைச்சரின் வாகன படை செல்லும் இடத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது தெரியவில்லை. அதேபோல் இந்த சம்பவம் சரியாக ஹைதராபாத்தில் எந்த பகுதியில் நடைபெற்றது என்பதையும் அறிய முடியவில்லை.

இந்த நிகழ்ச்சியில் மஹாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் கர்நாடக மாநில போக்குவரத்துதுறை அமைச்சர் பி ஸ்ரீராமுலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வாகன படையை இடைமறித்ததால் சேதமாக்கப்பட்ட டிஆர்எஸ் பிரமுகர் கோசூலா ஸ்ரீனிவாஸின் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் ஆனது கடந்த ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட பழைய வெர்சனாகும்.


Click it and Unblock the Notifications








