அம்மா மானிய விலை ஸ்கூட்டர்: விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு! என்னென்ன ஆவணம் தேவை தெரியுமா?
அம்மா மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தின்கீழ், ஸ்கூட்டர் வாங்குவதற்காக விண்ணப்பிக்கும் தேதியை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பணிக்கு செல்லும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு உதவும் விதமாக 'மானிய விலை ஸ்கூட்டர்' என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அம்மா ஸ்கூட்டர் என பெயர் வைக்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ், ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பெண்களுக்கு மானிய விலையின்கீழ் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகின்றது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, அதிமுக சார்பில் வெளியிடப்பட்டிருந்த தேர்தல் அறிக்கையில் இந்த திட்டம் இடம்பெற்றிருந்தது. பின்னர், ஆட்சியைக் கைப்பற்றிய அதிமுக அரசு, அதன் வாக்குறுதியை நிவர்த்தி செய்யும் விதமாக, கடந்த ஆண்டு முதல் மானிய விலையில் ஸ்கூட்டர்களை வழங்கி வருகின்றது.

அவ்வாறு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மானிய விலை ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்மூலம், ரூ. 25 ஆயிரம் அல்லது ஸ்கூட்டரின் விலையில் இருந்து 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகின்றது. அதேசமயம், இந்த மானியமானது, கியர்லெஸ் அல்லது ஆட்டோமேடிக் கியர்கொண்ட ஸ்கூட்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நடப்பாண்டிற்கான அம்மா ஸ்கூட்டருக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது ஆண்டாவது செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்திற்கு, இன்று முதல் தொடங்கி அடுத்த மாதம் 7ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மானிய விலை ஸ்கூட்டர்களைப் பெறுவதற்கான விண்ணப்பத்தை http://www.tamilnadumahalir.org/tnatws.html என்ற இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். இல்லையெனில், அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அலுவலகங்களில் நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகின்றது. அதேபோன்று, கூடுதல் விபரங்களுக்கு மேற்கூரிய இணையதளம் அல்லது அலுவலகங்களை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், முன்னதாக வழங்கப்பட்ட அதே மானிய தொகைத்தான் வழங்கப்பட உள்ளது. அவ்வாறு, ரூ. 25 ஆயிரம் அல்லது ஸ்கூட்டரின் விலையில் இருந்து 50 சதவீதம் வழங்கப்பட உள்ளது. இதில், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மட்டும் ரூ. 31,250 வழங்கப்பட உள்ளது.

அதேசமயம், அம்மா திட்டத்தின்கீழ், மானிய விலை ஸ்கூட்டருக்காக விண்ணப்பிக்கும் பெண், தமிழகத்தைச் சேர்ந்தவராகவும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், அவர்கள் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்ற உள்ளிட்ட விதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

இத்துடன், மானிய விலையில் ஸ்கூட்டரைப் பெற சமர்பிக்க வேண்டிய ஆவணங்களைக் கீழே பார்ப்போம்.
01. ஓட்டுநர் உரிமம் அல்லது எல்எல்ஆர் எனப்படும் பயிற்சி பெறுபவர்களுக்கான சான்று.
02. ஆதார் அட்டை.
03. சாதி சான்றிதழ்.
04. கல்வி சான்றிதழ்.
05. பணிபுரிவதற்கான சான்றிதழ்.
06. பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள அட்டை.
07. ஊதியச் சான்றிதழ் / சுய தொழில்மூலம் வருவாய் சான்றிதழ்.
08. ஸ்கூட்டருக்கான விலை பட்டியல் (Quotation)
09. வங்கி கணக்கு புத்தகத்தின் முகப்பு பகுதி அட்டை.


Click it and Unblock the Notifications








