இந்த மனுஷன் எளிமையில் ரத்தன் டாடாவிற்கே டஃப் கொடுப்பாரு போலையே.. சொகுசு கார்களை விரும்பாத ஆனந்த் மஹிந்திரா!
எளிமையின் மறு உருவமாக அறியப்படுகின்றார் தொழிலதிபர் ரத்தன் டாடா. டாடா மோட்டார்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்யத்தைக் கட்டியாண்ட இந்த நபர் ஆடம்பரமில்லாத வாகனங்களிலேயே இப்போதும் பயணித்துக் கொண்டிருக்கின்றார். உதாரணமாக, இவரிடத்தில் ஏழைகளுக்கான வாகனம் என்றழைக்கப்படும் டாடா நானோ பயன்பாட்டில் இருக்கின்றது. இதனை மின்சார காராக மாற்றியே ரத்தன் டாடா பயன்படுத்தி வருகின்றார். இதுமட்டுமில்லைங்க, சில பழைய வாகனங்களையும் ரத்தன் டாடா பயன்படுத்தி வருகின்றார் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. இந்த நிலையிலேயே எளிமையில் ரத்தன் டாடாவிற்கே டஃப் கொடுக்கக் கூடிய நபராக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வலம் வந்துக் கொண்டிருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது.
இவர் தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கு ஆடம்பரமற்ற வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றார் என்பதே தற்போது தெரிய வந்துள்ளது. மேலும், இந்திய தயாரிப்புகளுக்கு மட்டுமே அவர் முக்கியத்துவம் வழங்கி வருகின்றார் என்பதும் தெரிய வந்திருக்கின்றது. மஹிந்திரா மற்றும் மஹிந்திரா எனும் மாபெரும் சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வரும் நபராக இருந்து வரும் ஆனந்த் மஹிந்திரா, உள்ளூர் தயாரிப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கி வருவது மிகப் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

ஆனந்த் மஹிந்திரா இடத்தில் பல்வேறு வெளிநாட்டு வாகனங்களும், ஆடம்பர வகை விலை உயர்ந்த கார்களும் பயன்பாட்டில் இருப்பதாக ஓர் தகவல் உலா வந்த வண்ணம் இருக்கின்றது. ஆனால், இது அனைத்தும் கட்டுக் கதை மட்டுமே என்று கூறி அதற்கு மறுப்பு தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா, தான் மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்தி வருவதாக தெரிவித்திருக்கின்றார்.
சமீபத்தில் எக்ஸ் (டுவிட்டர்) தள பயன்பாட்டாளர் ஒருவர், மேக்-இன் இந்திய தயாரிப்புகளை பயன்படுத்த மற்றவர்களை வலியுறுத்தும் நீங்கள் ஏன் பிஎம்டபிள்யூ, பென்ஸ் கார்களை வைத்திருக்கின்றீர்கள் என்கிற கேள்வியை முன் வைத்தார். இந்த கேள்வியுடன் சேர்த்து ஆனந்த் மஹிந்திரா ஓர் விலை உயர்ந்த வெளிநாட்டு கார் முன் அமர்ந்திருக்கும் படத்தை அவர் வெளியிட்டிருந்தார்.
எக்ஸ் பயனரின் இந்த பதிவிற்கு, நீண்ட காலமாக ஆனந்த் மஹிந்திராவை பின் தொடர்ந்து ஓர் ஊடகவியலாளரும், அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கின்றார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனந்த் மஹிந்திரா நான் பார்த்து வருகின்றேன். அவர் மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பை தவிர வேறு எந்த நிறுவனத்தின் தயாரிப்பையும் பயன்படுத்தவில்லை என்றே அவரும் கூறியிருக்கின்றார்.
இந்த நிலையிலேயே தான் என்ன மாதிரியான கார்களை ஆரம்ப கட்டத்தில் இருந்து இப்போது வரை பயன்படுத்தி வருகின்றேன் என்பதை ஆனந்த் மஹிந்திரா தெரிவித்து இருக்கின்றார். முதன் முதலில் ஃபியட் ப்ளூ பேர்டு காரையே அவர் ஓட்டியிருக்கின்றார். இது அவருடைய அம்மாவுடைய வாகனம் என கூறப்படுகின்றது.
இந்த காரிலேயே அவர் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டிருக்கின்றார். இதற்கு அடுத்தபடியாக அவர் மஹிந்திரா சிஜே3 யுவி ரக காரை பயன்படுத்தி இருக்கின்றார். இந்த நிலையிலேயே 1991 ஆம் ஆண்டில் அவர் மஹிந்திரா நிறுவனத்தில் இணைந்திருக்கின்றார். அப்போது அவருக்கு நிர்வாகமே ஹிந்துஸ்தான் கான்டெஸா காரை ஒதுக்கி இருக்கின்றது.
நீண்ட காலமாக இந்த கார் அவருடைய பயன்பாட்டில் இருந்த நிலையில், மஹிந்திரா நிறுவனம் ஹார்ட்-டாப் வசதிக் கொண்ட அர்மதா காரை தயாரிக்கத் தொடங்கி இருக்கின்றது. ஆகையால், பின்னாளில் இந்த காரின் பயன்பாட்டிற்கு அவர் மாறியிருக்கின்றார். இதைத்தொடர்ந்து, பொலிரோ கார் பயன்பாட்டிற்கும், ஸ்கார்பியோ கிளாசிக் பயன்பாட்டிற்கும் அவர் அடுத்தடுத்து மாறியிருக்கின்றார்.
இதுதவிர, எக்ஸ்யூவி 500 மற்றும் சிவப்பு நிற ஸ்கார்பியோ என் ஆகிய கார் மாடல்களையும் இப்போது பயன்படுத்தி வருகின்றார். மேலும், தன்னுடைய மனைவியின் காரான எக்ஸ்யூவி 700 காரையும் அவர் பயன்படுத்தி வருவதாக தெரிவித்திருக்கின்றது. இதன் வாயிலாக ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய நிறுவனத்தின் தயாரிப்பைத் தாண்டி வேறு எந்த பிராண்டின் வாகனத்தையும் பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்திருக்கின்றார்.
தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் படமானது தான் ஒறு வாகன கண்காட்சியில் கலந்துக் கொண்டபோது எடுத்துக் கொண்டது என்கிற விளக்கத்தையும் அவர் முன் வைத்திருக்கின்றார். பட்டிஸ்டா எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் (Battista electric hypercar)-ஐ அறிமுகம் செய்தபோதே இந்த நிகழ்வில் தான் கலந்துக் கொண்டதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.
மேலும், தனக்கு பின்னால் இருப்பது விண்டேஜ் சிஸிடலியா (vintage Cisitalia) என்றும், அது பினின்ஃபரினா (Pininfarina)-வால் வடிவமைக்கப்பட்ட வாகனம் என்றும் அவர் கூறியுள்ளார். இது மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனம் என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே ஆனந்த் மஹிந்திரா இந்திய தயாரிப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கக் கூடியவர் என்பது இதன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் மேக்-இன் இந்தியா தயாரிப்பை பயன்படுத்துமாறு வலியுறுத்தினாலும் பெரும்பாலும் அதை கடைப்பிடிப்பது இல்லை. ஆனால், ஆனந்த் மஹிந்திரா போன்ற முன்னணி தொழிலதிபர்கள் தாங்களே முன்னுதாரணமாக இந்த மாதிரியான விஷயங்களில் இருக்கின்றனர். இதனால்தான் சக மக்களும் இந்திய தயாரிப்புகளுக்கு அதிக முக்கியத்துவத்தை வழங்க ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








