ஒரு டிவீட் மூலம் டியூவி300 கார் பரிசாக பெற்ற ஸ்ரீகாந்த்..மெய்சிலிர்க்க வைத்த ஆனந்த் மஹிந்திரா!
ஒரு டிவீட் மூலம் டியூவி300 கார் பரிசாக பெற்ற ஸ்ரீகாந்த்.. மீண்டும் மெய்சிலிர்க்க வைத்த ஆனந்த் மஹிந்திரா..!!
ஆஸ்திரேலிய பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் தொடரை வென்ற ஸ்ரீகாந்திற்கு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா புதிய டியூவி300 கார் ஒன்றை பரிசளித்துள்ளார். அதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்ய நிகழ்வுகளை இங்கு காணலாம்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றிருந்த நிலையில் இந்தியாவிற்கு பேட்மிண்டன் மூலம் உலக அரங்கில் பெருமை தேடித்தந்தவர் கிடம்பி ஸ்ரீகாந்த்.

கடந்த ஞாயிறன்று மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் பேட்மிண்டன் போட்டியில் உலகின் 6ம் நிலையில் இருக்கும் சீன வீரர் சென்லாங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்.

45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பரபரப்பான போட்டியில் நேர் செட்டுகளில் வெற்றி பெற்றார் ஸ்ரீகாந்த்.
முன்னதாக அவருடன் 5 ஆட்டங்களில் மோதி அனைத்திலும் தோல்வி பெற்றிருந்த நிலையில் தற்போது இந்த போட்டியில் அவர் வென்றுள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற இந்தோனேசிய ஓபனிலும் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றிருந்த நிலையில், ஆஸ்திரேலிய ஓபனையும் வென்று தொடர்ச்சியாக இரண்டு சூப்பர் சீரீஸ் போட்டிகளில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற அரிய சாதனையை படைத்துள்ளார் அவர்.

இந்த சாதனை மூலம் தரவரிசையில் 22ம் நிலையில் இருந்து 11ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் ஸ்ரீகாந்த்.
இந்த சாதனையை அங்கீகரித்து இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் அவருக்கு 5 லட்ச ரூபாயை பரிசாக அறிவித்துள்ளது.

கிரிக்கெட் வீரர்களுக்கு கோடிகள் பரிசாக குவியும் நிலையில் இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டிய ஸ்ரீகாந்திற்கு வெறும் 5 லட்ச ரூபாய் மட்டுமே பரிசாக கிடைத்திருப்பது சமூக வலைத்தளத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவர் டிவிட்டரில் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவிற்கு ஒரு கோரிக்கையை விடுத்தார்.
"கிரிக்கெட்டை ஒப்பிடும் போது ஸ்ரீகாந்திற்கு கிடைத்துள்ள ரூ.5 லட்சம் ஒன்றுமே இல்லை, ஏதாவது செய்யுங்களேன்" என்ற கோரிக்கையை ஆனந்த் மஹிந்திராவிடன் அந்த டிவிட்டர்வாசி வைத்துள்ளார்.

டிவிட்டரில் மிகவும் ஆக்டிவ் ஆகவும் பொறுப்புடனும் செயல்பட்டு வரும் ஆனந்த் மஹிந்திரா அந்த நபரின் கோரிக்கையை ஏற்று பேட்மிண்டனில் புதிய சாதனை படைத்துள்ள ஸ்ரீகாந்திற்கு தன் கரங்களாலேயே புதிய மஹிந்திரா டியூவி300 கார் ஒன்றை பரிசளிப்பதாக பதிலளித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கிற்கும், பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவிற்கு தார் ஜீப்-பை பரிசாக அளித்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

இதே போல பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த தங்க மகன் மரியப்பனிற்கு 10 லட்ச ரூபாயும், தார் ஜீப் ஒன்றையும் ஆனந்த் பரிசளித்துள்ளார்.

கிரிக்கெட் தவிர்த்து பிற விளையாட்டுகளிலும் சாதிக்கும் வீரர்களுக்கு பரிசளித்து வரும் ஆனந்த் மஹிந்திரா, இம்முறை ஸ்ரீகாந்திற்கு கார் பரிசளிக்க டிவிட்டர்வாசி ஒருவர் காரணமாக இருந்தது சமூக வலைத்தளத்திற்கு கிடைத்துள்ள முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications








