“கை, கால்கள் இல்லையென்றால் என்ன? நான் வேலை தருகிறேன்” - மாற்றுத்திறனாளிக்கு உதவிகரம் நீட்டும் ஆனந்த் மஹிந்திரா
கை, கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, ஆனந்த் மஹிந்திரா வேலை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தொழிலதிபர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பது கொஞ்சம் அரிதானதுதான். ஆனால் வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாட, அவர்களது கருத்துகளை கேட்க சமூக வலைத்தளங்கள் போன்ற சிறந்தவை வேறெதுமில்லை என்பதை உணர்ந்த பிறகு ஃபேஸ்புக், டுவிட்டர் & இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்க பலர் முயற்சிக்கின்றனர்.

சிலர் இதற்காகவே தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவுகளை பதிவிட அட்மின்களை பணிக்கு அமர்த்துகின்றனர். இந்த வகையில் மஹிந்திரா & மஹிந்திரா க்ரூப்பின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் செயல்பாட்டுடன் இருக்கக்கூடியவர் என்பது நமக்கு நன்றாக தெரிந்ததே.

இணையத்தில் வைரலாகும் வீடியோக்களுக்கும், படங்களுக்கும் அவ்வப்போது தனது கருத்துகளை பதிவிடக்கூடியவர், ஆனந்த் மஹிந்திரா அவர்கள். இதில் பெரும்பான்மையான வைரல் விஷயங்கள் ஆட்டோமொபைல் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். உதாரணத்திற்கு, வாகனம் ஒன்றின் செயல்படுதிறனால் விபத்து தவிர்க்கப்படுவது, வாகனங்களை சமயோஜிதமாக யோசித்து மாடிஃபை செய்வது உள்ளிட்டவற்றை கூறலாம்.

இந்த வகையில் தற்போது, டெல்லியில் கைகால்களை இழந்த மாற்றுத்திறனாளி ஒருவர் தனது உடலமைப்பிற்கு ஏற்ப தனது மூன்றுசக்கர வாகனத்தை மாடிஃபை செய்து பயன்படுத்தி வருவது ஆனந்த் மஹிந்திராவை வெகுவாக கவர்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தினையும் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தினை பதிவிட்ட ஆனந்த் மஹிந்திரா அதில் பணியாற்றும் அதிகாரி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, இவரை (மாற்றுத்திறனாளி) லாஸ்ட்-மைல் டெலிவிரி பணியில் உதவியாளராக இணைத்து கொள்ள முடியுமா? என கேட்டுள்ளார். மேலும், "இவர் எங்கிருக்கிறார்? இந்த வீடியோ எவ்வளவு பழையது என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை. இவர் சில குறைப்பாடுகளை எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும் இவரிடம் அருமையானது (மாற்றுத்திறனாளி வாகனம்) உள்ளது" எனவும் ஆனந்த் மஹிந்திரா இந்த டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

வீடியோவில், இந்த மாற்றுத்திறனாளி இந்த வீடியோவை காட்சிப்படுத்தியவர் கேட்கும் சில கேள்விகளுக்கு பதிலளிப்பதை பார்க்க முடிகிறது. இந்த கஸ்டமைஸ்ட் வாகனத்தில் ஸ்கூட்டர் ஒன்றின் என்ஜினை பொருத்தியுள்ளனர். என்ஜின் மட்டுமின்றி இந்த கஸ்டமைஸ்ட் மாற்று திறனாளி வாகனமானது பல வாகனங்களில் இருந்து எடுக்கப்பட்ட பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சில பாகங்களை கையால் தயாரித்து பொருத்தியுள்ளதையும் பார்க்க முடிகிறது.
"நான் இந்த வாகனத்தை கடந்த 5 வருடங்களாக இயக்கி வருகிறேன். எனக்கு இரு குழந்தைகள், மனைவி மற்றும் வயதான தந்தை ஒருவர் உள்ளார். இதனால்தான் நான் வெளியே சென்று சம்பாதிக்கிறேன்" என இந்த மாற்றுத்திறனாளி நபர் இந்த வீடியோவில் தெரிவிக்கிறார். உங்களது டிரைவிங்கை காட்டும்படி வீடியோவை காட்சிப்படுத்தியவர் கேட்ட உடனே ஒரு சிறு புன்னகை உடன் அவர் அந்த இடத்தை விட்டு தனது வாகனத்தில் செல்கிறார்.

அப்போதும் இதனை பதிவிட்டவர்கள் அவரை விடாமல் காரில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது அவரது டிரைவிங்கையும், வாகனத்தின் செயல்பாட்டையும் நெருக்கமாக காட்சிப்படுத்தி உள்ளனர். உண்மையில் இந்த மாடிஃபை வாகனம் சாலையில் எந்தவொரு தடங்கலும், அதிர்வும் இன்றி மென்மையாக இயங்குவதை காண முடிகிறது.

ஆனந்த் மஹிந்திரா மட்டுமின்றி, தலைநகர் டெல்லியில் இருந்து வெளியாகியுள்ள இந்த வீடியோ நெட்டிசன்கள் பலரது மனதை கரைய வைத்துள்ளது. டுவிட்டரில் மட்டும் இந்த வீடியோவினை தற்போது வரையில் 4.19 லட்ச பேர் பார்த்துள்ளனர். ஏற்கனவே கூறியதுதான், இவ்வாறான வீடியோக்கள் எப்படியோ ஆனந்த மஹிந்திராவின் கண்களில் பட்டுவிடுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டிலும் இதேபோன்று, பயன்படுத்த முடியாது என ஒதுக்கப்பட்ட உலோகங்களில் இருந்து மஹாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் 4-சக்கர வாகனத்தை உருவாக்கி அசத்தியிருந்ததை ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை உருவாக்க ரூ.60,000 வரையில் செலவானதாக அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தன.


Click it and Unblock the Notifications








