சாதாரண பள்ளி ஆசிரியரை உலகளவில் பிரபலமாக்கிய பெரும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா... எதற்காக தெரியுமா?
சாதாரண பள்ளி ஆசிரியர் ஒருவரை, இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா புகழ்ந்து தள்ளியுள்ளார்.

போக்குவரத்து விதிகளை மீறுவதில் இந்தியர்களை அடித்து கொள்ள உலகத்தில் ஆளே இல்லை என்ற நிலை காணப்படுகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்வது, அதிவேகத்தில் பறப்பது, ஓவர்லோடு ஏற்றி செல்வது என இந்தியர்கள் செய்யும் விதிமீறல்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இதன் விளைவாக சாலை பாதுகாப்பு என்ற விஷயத்தில் இந்தியா மிகவும் பின்தங்கி காணப்படுகிறது. இங்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் சாலை விபத்துக்கள் காரணமாக சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். எனவே சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க தீவிரமான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எடுத்து வருகின்றன.

ஆனால் என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், ஒரு சில வாகன ஓட்டிகள் தொடர்ச்சியாக விதிகளை மீறி கொண்டேதான் உள்ளனர். இந்திய வாகன ஓட்டிகளிடம் காணப்படும் மற்றொரு மோசமான பழக்கம் என்னவென்றால், பாதசாரிகளுக்கான நடைபாதையில் வாகனங்களை இயக்குவதுதான். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் நடைபாதையில் அதிகம் பயணிக்கின்றனர்.

இது இந்திய சாலைகளில் தற்போது பொதுவாக காணப்படும் ஒரு விஷயமாகி விட்டது. இது போன்ற வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை. ஆனால் போலீசார்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்ன? என நினைத்த நிர்மலா கோகலோ என்ற பெண்ணும், மேலும் சில முதியவர்களும் சமீபத்தில் களத்தில் இறங்கி அதிரடி காட்டினர்.

அவர்களில் நிர்மலா கோகலே மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரை சேர்ந்தவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, புனே எஸ்என்டிடி கல்லூரிக்கு அருகே உள்ள கேனல் ரோடு பகுதியில், நடைபாதையில் வந்த வாகன ஓட்டிகளுக்கு அருமையான பாடத்தை புகட்டினார். நடைபாதையில் ஏறி வந்த டூவீலர்களை நிறுத்தி, சாலையில் பயணிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

அத்துடன் நடைபாதைகள் என்பது பாதசாரிகளுக்கானது என்பதையும், அதன் மேல் வாகனங்கள் பயணிக்க கூடாது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இதை பார்த்த மேலும் சில முதியவர்களும் அவருடன் ஒன்று சேர்ந்தனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரல் ஆனதையடுத்து, நிர்மலா கோகலேவை நெட்டிசன்கள் பாராட்டு மழையில் நனைய வைத்தனர்.

இதன் உச்சகட்டமாக ஆனந்த் மஹிந்திராவிடம் இருந்து தற்போது நிர்மலா கோகலேவிற்கு பாராட்டுக்கள் வந்துள்ளன. மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் மிகவும் ஆக்டிவ்-ஆக இருக்க கூடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். நடைபாதையில் வந்த வாகன ஓட்டிகளை நிர்மலா கோகலே தடுத்த வீடியோவை ஆனந்த் மஹிந்திரா பார்த்துள்ளார்.

இதனால் ஆனந்த் மஹிந்திரா அவரை பாராட்டி பதிவிட்டுள்ளார். பாதசாரிகளின் உரிமைகளுக்கு வாகன ஓட்டிகள் அனைவரும் மதிப்பு கொடுக்க வேண்டும். சாலையில் பாதசாரிகள் திடீரென குறுக்கே வந்து விட்டால், வாகன ஓட்டிகளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வருகிறது என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் பாதசாரிகளை பற்றி நினைக்காமல், அவர்கள் நடைபாதையில் பயணிக்கின்றனர்.

குறிப்பாக சென்னை மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களில், இந்த பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் இத்தகைய வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட முடியும். இல்லாவிட்டால் பாதசாரிகளின் நிலைமை திண்டாட்டம்தான்.

இதனிடையே விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு பாடம் நடத்திய நிர்மலா கோகலே, புனே நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது துணிச்சலுக்கு நாமும் நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.
முன்னதாக சமூக வலை தளங்களில் வீடியோ வைரல் ஆனதன் காரணமாக, புனே பள்ளி ஆசிரியை நிர்மலா கோகலே இந்தியா முழுக்க பிரபலமாகி விட்டார். தற்போது பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திராவின் பாராட்டு பதிவின் மூலம் அவர் உலக அளவில் பிரபலமாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications








