சீட் பெல்ட்... முன்னாள் டாடா தலைவரின் இறப்பிற்கு காரணமான இதை அணிவோம் - ஆனந்த் மஹிந்திராவின் வேண்டுக்கோள்!!
சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததினால் சாலை விபத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி இறந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்த சம்பவத்திற்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களுள் ஒருவரான ரத்தன் டாடா அவர்கள் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து 2012இல் ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த தலைவர் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் சைரஸ் மிஸ்திரி. அதன்பின் அடுத்த 4 ஆண்டுகளுக்கு, அதாவது 2016 வரையில் அந்த பதவி வகித்த சைரஸ் மிஸ்ட்ரி டாடா குடும்பத்தை சேராதவர் ஆவார்.

இவர் சமீபத்தில் இறந்துபோன அவரது உறவினரின் இறுதி சடங்கில் கலந்துக்கொள்வதற்காக குஜராத் மாநிலத்தில் உள்ள உத்வாடா பகுதிக்கு சென்றுவிட்டு கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி தனது நண்பர்களுடன் மும்பைக்கு திரும்பி கொண்டிருந்தார். இந்த பயணத்தில் சைரஸ் மிஸ்த்ரி உடன் அவரது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி காரில் பயணித்த அவரது நண்பர்கள் மூவரும் தொழிலதிபர்களும், முக்கிய பிரமுகர்களும் ஆவர்.

செப்.4ஆம் தேதி அன்று மதியம் 3.15 மணியளவில் கார் மஹாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் உள்ள சூர்யா நதிக்கரைக்கு அருகே மணிக்கு 120கிமீ என்ற அளவிலான வேகத்தில் சென்று கொண்டிருந்த போது சாலைக்கு இடதுபுறம் இருந்த டிவைடரில் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளது. இதில் டிரைவர் உள்பட காரின் முன் இருக்கைகளில் அமர்ந்திருந்த இருவரும் படுகாயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர்.

ஆனால் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி மற்றும் அவரது நண்பர் ஜஹான்கீர் இருவரும் உயிரிழந்துள்ளனர். பொதுவாக, கார் ஒன்று டிவைடரிலயோ அல்லது சாலைக்கு அருகே இருக்கும் கம்பம், மரத்திலேயோ மோதினால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் முன் இருக்கை பயணிகளுக்கே அதிகமாக இருக்கும். ஆனால் இந்த விபத்தில் முன் இருக்கை பயணிகள் உயிர் பிழைத்து, பின் இருக்கை பயணிகள் உயிரிழந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கு முக்கிய காரணம், சீட் பெல்ட் ஆகும். ஏனெனில் இந்த சம்பவத்தில் முன் இருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணிந்திருந்த நிலையில், சைரஸ் மிஸ்திரி உள்பட பின் இருக்கை பயணிகள் இருவரும் சீட்பெல்ட் அணிந்திருக்கவில்லை. இதனாலேயே மோதலின்போது இருவரும் காருக்கு உள்ளேயே தூக்கி வீசப்பட்டுள்ளனர். டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சீட் பெல்ட் அணியாததினால் உயிரிழந்து இருப்பது ஆட்டோமொபைல் துறையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில், "காரின் பின் இருக்கையில் இருக்கும்போது கூட எப்போதும் நான் சீட் பெல்ட்டை அணிய முடிவு செய்கிறேன். மேலும் அந்த உறுதிமொழியை உங்கள் அனைவரையும் ஏற்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் நமது குடும்பங்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம்" என பதிவிட்டுள்ளார்.

விபத்தில் இறந்த சைரஸ் மிஸ்த்ரிக்கு வயது 54. விபத்தின் போது காரை டாடா குழுமத்தின் முன்னாள் இயக்குனர் டாரியஸ் பண்டோலின் மனைவி அனஹித்தா பண்டோல் ஓட்டி வந்துள்ளார். அனஹித்தா பண்டோல் மும்பையில் பிரபல மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றுகிறார். 120kmph வேகத்தில் சென்று கொண்டிருந்த போது இவர், முன்னால் சென்ற வாகனத்தை முந்த நினைத்துள்ளார்.

ஆனால் வலதுப்புறத்தில் முந்துவதற்கு போதிய இடம் கிடைக்காததால், இடதுபுறமாக முந்த முயற்சித்துள்ளார். ஆனால் அது ஆற்று பாலம் இருந்த இடம் என்பதால், இடதுபுறத்தில் டிவைடர் இருந்துள்ளது. இதனை கவனித்து சூதாரித்து காரை திருப்புவதற்குள் கார் டிவைடரில் வேகமாக மோதியுள்ளது. இதில் அனஹிந்தா முற்றிலுமாக கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications