தமிழ் மொழி ஆற்றல் மிக்கது... வைரலான தமிழ் மொழி பற்றிய ஆனந்த் மஹிந்திரா ட்வீட்
பொங்கல் திருநாளன்று தமிழ் மொழியின் திறன் குறித்து ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட் ஒன்று வைரலாகி இருக்கிறது. அவர் தான் கற்றுக் கொண்ட முதல் தமிழ் வார்த்தை குறித்த அந்த ட்வீட் சமூக வலைதளங்களிலும் வைரலானதுடன், பல்வேறு மொழிகளை சேர்ந்தோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யங்களில் ஒன்றாக விளங்கும் மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக, ட்விட்டரில் அவரது நகைச்சுவையும், சிந்தனையும் கலந்த ட்வீட்டுகளுக்கு பெரிய அளவிலான ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில், தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையான நேற்று அவர் தமிழ் மொழியின் திறனை வெளிப்படுத்தும் வகையில் போட்ட ஒரு ட்வீட் வைரலாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் கல்வி பயிலும்போது அவர் கற்றுக்கொண்ட முதல் தமிழ் வார்த்தை குறித்து அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். அதில், நான் தமிழகத்தில் படிக்கும்போது போடா டேய் என்ற வார்த்தையைத்தான் முதலில் கற்றுக் கொண்டேன்.

இந்த வார்த்தையை எனது வாழ்நாளில் பல சமயங்களில் நான் பயன்படுத்தி உள்ளேன். சில சமயங்களில் உரக்கவும், சில சமயங்களில் மனதிற்குள்ளே இந்த வார்த்தையை சொல்லி இருக்கிறேன்.

தமிழ் ஒரு ஆற்றல் வாய்ந்த மொழி. ஆங்கிலத்தில் யாரிடமாவது உங்களது பேச்சை கேட்பதற்கோ அல்லது உங்களது கருத்தை அறிவதற்கோ நேரமில்லை. என்னை தனியாக விட்டுவிட்டீர்கள் என்றால், உங்களுக்கு பாராட்டுக்கள் என்று சொல்வதற்கு பதிலாக தமிழில் ஒரே வார்த்தையில் 'போடா டேய்' என்று சொல்லிவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துமட்டுமில்லாமல், இந்த ட்வீட்டில் ஒருவர் வந்து கேட்ட கேள்விக்கும் நகைச்சுவையுடன் ஒரு பதிலை அளித்துள்ளார். ரெங்கசாமி ராஜா என்பவர், எந்தவொரு புதிய மொழியை கற்றுக்கொள்ளும்போது சில கெட்ட வார்த்தைகளையும் சேர்த்தே கற்றுவிடுவோம். அதேபோன்று, நீங்கள் சில கெட்ட வார்த்தைகளையும் கற்றுக் கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று கமென்ட் செய்துள்ளார்.

இதற்கு தனக்கே உரித்தான பாணியில் நகைச்சுவையுடன் ஆமோதித்துள்ளார். சென்னையில் எனது தார் எஸ்யூவி காரில் செல்லும்போது யாராவது இடித்துவிட்டால் அவர்களை திட்டுவதற்கு நிறைய தமிழ் கெட்டவார்த்தைகளை கற்று வைத்துள்ளேன் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலை செல்லும் பாதை குறித்து அவர் பகிர்ந்த படமும், தகவலும் பெரிய அளவில் வைரலானது. இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிற்கும் அவருக்கும் உரிய பந்த பாசத்துடன் ஒரு புதிய ட்வீட்டை போட்டு எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆட்டோமொபைல் துறை மற்றும் வாகனங்கள் குறித்தும் அவர் ஏராளமான ட்வீட்டுகளை நகைச்சுவை கலந்து தனது பாணியில் பதிவிட்டு வருகிறார்.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்டுகள் நகைச்சுவையும், சிந்தனை உணர்வும் எல்லோராலும் சிலாகித்து கூறப்படுகிறது. பல லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் ஆனந்த் மஹிந்திராவின் ட்வீட்டிற்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








