இது வெளிநாடு கிடையாதுங்க... நம்ம இந்தியா தான்!! இவ்வளவு பெரிய தொழிலதிபரையே மலைக்க வெச்சுடுச்சு!
மும்பையில் சமீபத்தில் மஹாராஷ்டிரா முதல்வரால் திறக்கப்பட்ட கடலுக்கு அடியில் செல்லும் சுரங்கப்பாதை வாகன ஓட்டிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் நிலையில், ஆனந்த் மஹிந்திரா இந்த கடல் வழி சுரங்க பாதையில் காரில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு கிடைத்த அனுபவங்களை வீடியோவாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் சாலை கட்டமைப்பு முக்கியமான ஒன்றாகும். இந்த விஷயத்தில் நமது மத்திய அரசு மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒருபடி மேலே போய், கடலுக்கு அடியில் சுரங்க சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த மார்ச் 11ஆம் தேதி மஹாராஷ்டிரா முதல்வர் எக்நாத் ஷிண்டே திறந்து வைத்தார்.

தெற்கு மும்பையின் வோர்லி மற்றும் மெரைன் டிரைவ் பகுதிகளை இணைக்கும் விதத்தில் கட்டியெழுப்பப்பட்டு உள்ள இதுதான் இந்தியாவின் முதல் கடலுக்கு அடியில் அமைந்த சுரங்கப் பாதை ஆகும். இதன் காரணமாகவே, வாகன ஓட்டிகள் பலரும் ஆர்வமாக இந்த சுரங்க சாலையில் தங்களது வாகனங்களை ஜாலியாக ஓட்டி பார்த்து வருகின்றனர். இந்த வகையில், மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் தனது காரில் இந்த சுரங்க பாதையில் பயணம் செய்துள்ளார்.
இந்த கடல்வழி சுரங்க பாதையை பிரபலமான லார்சன் & டப்ரோ (L&T) நிறுவனம் வடிவமைத்து கட்டியெழுப்பி உள்ளது. இந்த சுரங்க சாலையை பயன்படுத்தி பார்த்த ஆனந்த மஹிந்திரா எல்&டி -இன் என்ஜினீயரிங் டிசைன் நுட்பத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக ஆனந்த் மஹிந்திராவின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், அவர் மகிழ்ச்சியாக இந்தியாவின் முதல் கடல் சுரங்க சாலையில் கார் ஓட்டுவதை காணலாம்.
இந்த வீடியோவிற்கு, "மும்பையில் புதிய கடற்கரை சாலையின் ஒரு பகுதியாக கடலுக்கடியில் உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதையை இன்று 'சுரங்கப்பாதை-சுற்றுலா'-ஆக சென்றேன்! இந்த பயணத்திற்காக காத்திருந்தேன், இந்த காத்திருப்புக்கு நல்ல மதிப்பு கிடைத்தது" என கேப்ஷனை பதிவு செய்து, லார்சன் டப்ரோ நிறுவனத்துக்கு நன்றியையும் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
இந்த சுரங்க சாலையின் நுழைவாயிலுக்குள் ஆனந்த் மஹிந்திராவின் கார் நுழைவதில் இருந்து இந்த வீடியோ துவங்குகிறது. வீடியோவின் ஆரம்பத்தில், "லார்சன் & டப்ரோவால் கடலுக்கு அடியில் கட்டப்பட்டப்பட்ட இந்தியாவின் முதல் சுரங்கப்பாதைக்குள் நுழைகிறீர்கள்" என்கிற பெயர்பலகையை காண முடிகிறது. சுரங்கப் பாதைக்குள் ஆனந்த் மஹிந்திராவின் காருக்கு அருகே வேறு சில கார்கள் செல்வதையும் காண முடிகிறது.

'தர்மவீர் சம்பாஜி மஹாராஜ் கடற்கரை சாலை' என்கிற பெயரில் திறக்கப்பட்டுள்ள இந்த சுரங்க சாலை மும்பையில் வோர்லி மற்றும் மெரைன் டிரைவ் பகுதிகளுக்கு இடையேயான தொலைவை குறைப்பது மட்டுமின்றி, மும்பை நகரத்துக்கு மேலும் அழகை சேர்த்துள்ளது. 2018ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் துவங்கிய இந்த கடல்வழி சுரங்கப் பாதை பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதாவது, இந்த சுரங்கப் பாதையை மேலும் நீளமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது, தற்சமயம் வோர்லி மற்றும் மெரைன் டிரைவ் பகுதிகளுக்கு இடையே ஏறக்குறைய 11 கிமீ தொலைவிற்கு இந்த சுரங்கப்பாதை கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டு உள்ளது. வோர்லியில் இருந்து மெரைன் டிரைவ் பகுதிக்கு சாலை வழியாக செல்ல முன்னர் 40 நிமிடகள் ஆகும். ஆனால், தற்போது வெறும் 9 நிமிடங்களே போதுமானதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 11கிமீ நீளத்திற்கான இந்த சுரங்கப்பாதை சும்மா டிரெயில் மட்டுமே. ஏனெனில், ஏற்கனவே கூறியதுபோல், சுமார் 53கிமீ தொலைவிற்கு இந்த சுரங்க சாலையை விரிவுப்படுத்த எல்&டி திட்டமிட்டுள்ளது. இத்தகைய சாலையை ஆனந்த் மஹிந்திரா போன்ற பெரும் தொழிலதிபர் நேரில் காரில் சென்று பார்வையிட்டது வாகன ஓட்டிகளை மேலும் இந்த சுரங்கத்தை நோக்கி கவர்ந்திழுக்கும்.


Click it and Unblock the Notifications









