மஹிந்திராவில் நீரில் ஓடக்கூடிய காரா? நம்ம சென்னைக்கு சரியாக இருக்கும்!! ஆனந்த் மஹிந்திராவுக்கு யோசனை
ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) எப்போதுமே புதியது புதியதாக யோசிக்க கூடியவர் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். இதனால்தான், மஹிந்திரா கார்கள் நல்ல தரத்தில் உள்ளன என்கிற கருத்தும் உள்ளது. இந்த நிலையில், ஆனந்த் மஹிந்திராவுக்கே ஒருவர் தனது ஆலோசனையை வழங்கியுள்ளார். ஆலோசனையை வழங்கியவர் ஒன்றும் சாதாரண மனிதர் கிடையாது; அவர் ஒரு பெரும் தொழிலதிபர் ஆவார். யார் அவர் என்பதையும், ஆனந்த் மஹிந்திராவுக்கும், மஹிந்திரா நிறுவனத்துக்கும் என்ன மாதிரியான ஆலோசனையை வழங்கியுள்ளார் என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஹர்ஷ் கோயங்கா (Harsh Goenka), இப்படியொரு பெயரை உங்களில் நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், தொழிலதிபர்கள் பெரும்பாலானோர் மிகவும் சைலண்டாக செயல்படுவர்களாவர். அதிலிலும் இவர் வட இந்தியாவை சேர்ந்தவர். ஹர்ஷ் கோயங்கா, மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராம பிரசாத் கோயங்கா க்ரூப்பின் தலைவர்.

இவர்தான் தற்போது, வெளிநாட்டில் விற்பனையில் இருக்கும் கார் ஒன்றை இந்தியாவில் மஹிந்திரா அறிமுகம் செய்யலாம் என ஐடியா கொடுத்துள்ளார். வெளிநாட்டில் பிரபலமாக மற்றும் பார்ப்பதற்கு கவர்ச்சிக்கரமாக இருக்கும் காரை இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யலாம்; மாருதி சுஸுகி அறிமுகம் செய்யலாம் என நம்மில் நிறைய பேருக்கு ஐடியா தோன்றும். ஆனால், நாம் கூறுவதை எல்லாம் யார் கேட்பார்கள்.
அதுவே, ஹர்ஷ் கோயங்கா போன்ற தொழிலதிபர்கள் கூறினால், சம்பந்தப்பட்ட நிறுவனம் கேட்கிறதோ, இல்லையோ... குறைந்தப்பட்சம் அவர்களது கருத்துகளாவது வெளியே தெரியவரும். ஹர்ஷ் கோயங்கா தற்போது மஹிந்திரா க்ரூப்பின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவுக்கு கூறியிருக்கும் ஆலோசனை என்னவென்றால், சீனா உள்பட வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள பிஒய்டி யாங்வாங் யு8 (BYD Yangwang U8) என்கிற எஸ்யூவி காரை மஹிந்திரா இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என்பதாகும்.

பிஒய்டி யாங்வாங் யு8 ஆனது ஓர் பிரம்மாண்டமான ஹைப்ரீட் எஸ்யூவி கார் ஆகும். அதாவது, எரிபொருள் மற்றும் எலக்ட்ரிக் என இரண்டிலும் இயங்கக்கூடியதாக உள்ளது. அளவில் பெரியதாக, கம்பீரமான தோற்றத்தில் இருக்கும் இந்த காரில் அதிகப்பட்சமாக சுமார் 1,000 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது. இதைவிட இந்த காரின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இதனை நீரிலும் ஓட்ட முடியும்.
இத்தகைய பிரம்மாண்டமான எஸ்யூவி காரை தான் இந்தியாவில் மஹிந்திரா அறிமுகம் செய்யலாம் என தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ உடன் தெரிவித்துள்ளார். சீனாவில் காட்சிப்படுத்தப்பட்ட பிஒய்டி யாங்வாங் யு8 காரின் வீடியோ உடன் ஹர்ஷ் கோயங்கா தனது எக்ஸ் பதிவில், "பிஒய்டி எஸ்யூவியின் அனைத்து நிலப்பரப்பு, அனைத்து வானிலை பதிப்பை அறிமுகப்படுத்துகிறோம் - இந்திய மழைக்கால ஆறுகள், பள்ளங்கள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளுக்கு ஏற்றது!

இது இந்தியாவுக்காக கட்டப்பட்டது! எனது நண்பர் ஆனந்த் மஹிந்திரா இந்த காரை நம் நாட்டில் அறிமுகப்படுத்துவார் என நம்புகிறேன்" என குறிப்பிட்டு, ஆனந்த் மஹிந்திராவின் எக்ஸ் பக்கத்தை மென்ஷன் செய்துள்ளார். இந்த சீன கார் நீரிலும் இயங்கக்கூடிய திறனை கொண்டிருப்பதால்தான், இதனை இந்தியாவிற்காக ஆனந்த் மஹிந்திராவிடம் ஹர்ஷ் கோயங்கா பரிந்துரைத்துள்ளார் என நினைக்கிறோம்.
இந்த காரில் இயக்க ஆற்றல்கள் பின் சக்கரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும், இந்த காரால் ஒரே இடத்தில் இருந்துக் கொண்டு 360-டிகிரிக்கு சுழல முடியும். இது எவ்வளவு நெரிசலான பகுதிலும் இந்த காரை எளிதாக பார்க் செய்ய அனுமதிக்கிறது. இதுவும் ஹர்ஷ் கோயங்காவை பெரிதும் கவர்ந்துள்ளது. இருப்பினும், இப்போதுவரையில் ஹர்ஷ் கோயங்காவின் எக்ஸ் பதிவுக்கு ஆனந்த் மஹிந்திரா பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பிஒய்டி நிறுவனமும் செயல்படுவது தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவுக்கு தெரியவில்லையா என்று தெரியவில்லை. எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி சப்ளைக்காக இரு நிறுவனங்களும் கூட்டணியில் உள்ளதே தவிர்த்து, மஹிந்திராவுக்கும் பிஒய்டி நிறுவனத்துக்கும் வேறெந்த தொடர்பும் இல்லை. ஆதலால், ஹர்ஷ் கோயங்கா கூறுவதை போல் பிஒய்டி காரை மஹிந்திரா நிறுவனத்தால் அறிமுகம் செய்ய இயலாது.


Click it and Unblock the Notifications









