இது நம்ம ஊரு தானா? ஆச்சரியத்தில் மூழ்க வைத்த மிசோரம் மக்கள்! ஆனந்த் மஹிந்திராகூட வாழ்த்து தெரிவிச்சிருக்காரு!
மிசோரம் வாகன ஓட்டிகள் ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கின்ற வகையில் செயல்பட்டிருக்கின்றனர். இந்நிகழ்வுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

ஆச்சரியங்களும், சுவாரஷ்யங்களும் நிரம்பி வழியும் ஓர் இடமே இணையம். எண்ணற்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் நாள்தோறும் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சமீபத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஓர் புகைப்படமே தற்போது ஒட்டுமொத்த இந்தியர்கள் மத்தியிலும் பேசு பொருளாக மாறியிருக்கின்றது.

மேலும், காட்டு தீ போல மிக வேகமாக வைரலாகியும் கொண்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவையும் அந்த படம் ஈர்த்துள்ளது. இணையத்தில் மிகவும் துடிப்பான ஓர் நபராக ஆனந்த் மஹிந்திரா வலம் கொண்டிருக்கின்றார். இவரின் கண்களில் படும் சுவாரஷ்யங்கள், பாராட்டைப் பெறாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

அந்தவகையில், தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் படமும் ஆனந்த் மஹிந்திராவின் வாழ்த்துக்கும், பாராட்டுக்களுக்கும் ஆளாகி இருக்கின்றது. அப்படி என்ன படங்க அது?, மிசோரம் மாநிலத்தின் போக்குவரத்து ஒழுங்கு குறித்த படமே அது.

மிசோரம் மக்கள் போக்குவரத்து விதியை முறையாகக் கடைபிடிப்பதை வெளிக்காட்டும் வகையில் ஓர் புகைப்படம் வெளியாகி இருக்கின்றது. ஒரு பக்கம் சாலை வெறிச் சோடி இருக்கின்ற நேரத்தில், அது எதிர்திசை வாகனங்களுக்கான பாதை என்பதை உணர்ந்து, தங்களுக்கான பாதையிலேயே சிக்னலுக்கு காத்திருப்பதை அந்த படம் காட்டுகின்றது.

சிக்னலில் நின்றுக் கொண்டிருந்த அனைவரும் சாலையின் நடுவில் வரையப்பட்டிருக்கும் வெள்ளைக் கோட்டைக் கூட தாண்டாமல் கண்ணியமாக நடந்துக் கொண்டு இன்னும் ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கின்றது. இதுவே, அநேகரின் மனதைக் கவரக் காரணமாகவும் அமைந்திருக்கின்றது.

எனவேதான் இணையத்தில் இந்த படம் அதிகளவில் பகிரப்பட்டு, வைரலாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, இணைய வாசிகள் மத்தியில் இந்த படம் இது நம்ம ஊருதானா, மிசோரம் இந்தியாவில்தான் இருக்கின்றதா?, என்றெல்லாம் கேள்வி எழுப்ப செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

இந்தியாவின் பிற சில மாநில வாசிகளைப் பார்த்தோமேயானால், எதிர்திசையில் வருபவர்களுக்கு வழி இருக்கிறதோ, இல்லையோ நாம் போய்விட வேண்டும் என்ற மன நிலையில் வாகனங்களை இயக்குவதை நம்மால் பார்க்க முடிகின்றது. சிக்னலில் நிற்கும்போது கூட தடுப்பை மீறி சென்று வாகன ஓட்டிகள், எதிர்திசையில் வரும் வாகனங்களுக்கு வழியை விடாமல் அடைத்தவாறு நிற்பர்.

இந்த நிலை சிக்னலில் மட்டுமின்றி, ரயில்வே கேட்டுகளிலும் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த மாதிரியான மன நிலைக் கொண்ட வாகன ஓட்டிகள் இருக்கின்ற இந்த நாட்டிலேயே உரிய வகையில் போக்குவரத்தைக் கடைப்பிடிக்கும் மக்களாக மாறியிருக்கின்றனர் மிசோரம் மாநில வாசிகள்.

எனவேதான் இந்த படம் ஆனந்த் மஹிந்திராவை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றது. மேலும், அவரை இந்நிகழ்வு குறித்து டுவிட்டரில் பதிவிடவும் தூண்டியிருக்கின்றது. அந்த பதிவில், "என்ன ஒரு அற்புதமான படம். சாலையில் உள்ள வெள்ளைக் கோட்டை ஒரு வாகனம் கூட கடக்கவில்லை. இது ஊக்கத்தையும், மிக வலுவான தகவலையும் வழங்கும் வகையில் இருக்கின்றது.

நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது நமது கடமை. விதிகளின்படி சாலையில் விளையாடுங்கள் (பயணியுங்கள்)... மிசோரமுக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள்" இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆனந்த் மஹிந்திராவை போலவே பலரும் மிசோரம் மக்களின் இந்த செயலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சாலை விதியைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது
ஒவ்வொரு வாகன ஓட்டியும் சாலை விதியைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமானது. இது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மட்டுமல்ல விபத்து போன்ற தேவையற்ற கசப்பான அனுபவங்களைத் தவிர்க்கவும் உதவும். நாம் அவசரமாக செல்ல வேண்டும் என்பதற்காக செய்யக் கூடிய ஒவ்வொரு விதிமீறலும் ஏதாவது ஓர் வழியில் பிற பாதிக்கச் செய்துவிடுகின்றது.

குறிப்பாக, சில நேரங்களில் மிக நீண்டமான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்த இது வழி வகுக்கின்றது. எனவேதான் சிறந்த போக்குவரத்தையும், விபத்தில்லா பயணத்தை உருவாக்கவும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

இதுமட்டுமின்றி, வாகன ஓட்டிகள் முறையாக சாலை விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதில் காவல்துறை சற்றே அதிக கவனத்துடன் செயல்பட தொடங்கியுள்ளது. விதிகளை மீறுவோர்மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றது. சிசிடிவி வாயிலாகவும் மிக தீவிரமான கண்கானிப்பு மேற்கொள்ளப்பட்டு, அதன் வாயிலாகவும் அபராத செல்லான் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. ஆகையால், அனைத்தில் இருந்தும் தப்பிக்க வேண்டும் என்றால் சாலை விதியைக் கட்டாயம் கடைபிடித்தே ஆக வேண்டும்.


Click it and Unblock the Notifications