சாதாரண இந்திய விவசாயியின் அரிய கண்டுபிடிப்பை உலக அளவில் பிரபலமாக்கிய மஹிந்திரா... வைரல் வீடியோ
சாதாரண இந்திய விவசாயி ஒருவரின் அரிய கண்டுபிடிப்பு, ஆனந்த் மஹிந்திராவின் ஒரு டிவிட் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் டூவீலர், கார் மற்றும் டிராக்டர் உள்பட பல்வேறு வகையான வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் வாகனங்கள் உலகம் முழுக்க பிரபலமாக திகழ்ந்து கொண்டுள்ளன.

வாகன உற்பத்தி மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் மஹிந்திரா குழுமம் கொடி கட்டி பறந்து வருகிறது. இதற்கு மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஒரு காரணம் என்றால் மிகையல்ல. சாதிக்க துடிக்கும் பல கோடி இளைஞர்களுக்கு இவர் ஒரு ரோல் மாடல்.

சமூக வலை தளங்களில் ஆனந்த் மஹிந்திரா மிகவும் ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர். குறிப்பாக டிவிட்டரில் இவர் போடும் டிவிட்கள் லைக்ஸ் அள்ளும். பல கோடிகளுக்கு அதிபதி என்றாலும், சாதாரண மனிதர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் குணம் இவருக்கு உண்டு.

இந்த சூழலில் ஆனந்த் மஹிந்திரா தற்போது டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் விவசாயி ஒருவர், அறுவடைக்கு பின் தனது நிலத்தில் இருந்த தானியங்கள் உள்ளிட்டவற்றை டிராக்டர் மூலமாக இடம் மாற்றி கொண்டுள்ளார்.

வழக்கமாக இதுபோன்ற பணிகள் கைகளால் மட்டுமே மேற்கொள்ளப்படும். பெரும்பாலான இந்திய விவசாயிகளுக்கு, அதிநவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இயந்திரங்கள் இன்னும் சென்று சேரவில்லை. இந்திய விவசாயிகளை பொறுத்தவரை டிராக்டர்தான் அதிநவீன இயந்திரம், வாகனம் எல்லாம்.

இந்திய விவசாயிகள் பலர் உழவு பணிகளுக்கு டிராக்டரை பயன்படுத்துகின்றனர். டிராக்டரை தவிர சொல்லி கொள்ளும்படியாக வேறு இயந்திரங்கள் எதையும் விவசாயிகள் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள வீடியோவில் நாம் காணும் விவசாயி, தனது டிராக்டரை மாடிஃபிகேஷன் செய்திருந்தார். இதன்படி அவர் தனது டிராக்டரின் முன்பகுதியில் செயற்கையான இயந்திர கை ஒன்றை பொருத்தியிருந்தார். அதனுடன் கட்டில் இணைக்கப்பட்டிருந்தது.

ஆம், கட்டில்தான். இதன்மூலமாக பொருட்களை மிக எளிதாக அந்த விவசாயி இடம்மாற்றி கொண்டிருந்தார். இது பார்ப்பதற்கு எக்ஸ்காவேட்டர் (Excavator) போலவே உள்ளது. ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டை நீங்கள் கீழே காணலாம்.
''தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்ற சொற்தொடர் இந்தியர்களால்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என நான் நினைக்கிறேன். நமது பண்ணை மற்றும் கட்டுமான துறைகள் எக்ஸ்காவேட்டருக்கு மாற்றாக இந்த புதிய தயாரிப்பை கருத்தில் கொள்ள வேண்டும்'' எனவும் ஆனந்த் மஹிந்திரா அந்த பதிவில் கூறியுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த டிவிட்டர் பதிவால் பலரும் ஈர்க்கப்பட்டனர். இந்த கட்டுரை எழுதப்பட்டு கொண்டிருந்த நேரத்தில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரீ-டிவிட்களை ஆனந்த் மஹிந்திராவின் டிவிட் குவித்திருந்தது.

ஆனால் இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது? என்பது தெளிவாக தெரியவில்லை. இதே வீடியோவை சாதாரண நபர்கள் யாரேனும் பதிவிட்டிருந்தால் இவ்வளவு அதிகமான பேரை சென்றடைந்திருக்குமா? என்பதும் சந்தேகமே.


Click it and Unblock the Notifications








