அம்பானியிடம் இருக்கும் பணத்துக்கு விமானங்களை சொந்தமாக கூட வாங்கியிருக்க முடியுமே... மகனுக்காக செய்த காரியம்!!
ஒட்டுமொத்த இந்தியாவும் தற்சமயம் உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பது அம்பானி வீட்டு திருமணத்தை தான் என சொன்னால் அது மிகையில்லை. மும்பை மாநகரமே விழாக் கோலம் பூண்டதுபோல் எங்கு பார்த்தாலும் விஐபி-களின் சொகுசு கார்களாக சீறிப்பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவைவும் கடந்து, உலகின் பெரும் பணக்காரர்களுள் ஒருவராக விளங்கும் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரென் மெர்சண்ட்டின் மகள் ராதிகா மெர்சண்ட்டிற்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணம் நடைபெற்றது என்னமோ இன்று (ஜூலை 12) தான் என்றாலும், கடந்த 1 மாத காலமாகவே திருமணத்திற்கு முந்தைய பல்வேறு நிகழ்ச்சிகள் குஜராத்திலும், மஹாராஷ்டிராவின் மும்பையிலும் நடைபெற்று வருகின்றன.
திருமணம் முடிந்த பின்பும் இந்த நிகழ்ச்சிகள் இத்தோடு நின்றுவிட போவதில்லை. திருமணத்திற்கு பிந்தைய நிகழ்ச்சிகள் என ஏகப்பட்டவை நடக்கும் என்பது உறுதி. ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு இந்தியாவில் இருந்து மட்டுமில்லாமல், உலகின் பல நாடுகளில் இருந்து பிரபலங்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பிரபல டபிள்யூ.டபிள்யூ.இ வீரர் ஜான்சீனாவில் இருந்து நம் ஊர் அட்லி வரையில் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் சில விஐபி-களை அழைத்து வருவதற்கு தனியாக விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக இந்த போக்குவரத்துக்காக ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால், அவை எத்தனை? என்பது தெரியாமல்தான் தலையை பீய்த்துக் கொண்டிருந்தோம். தற்போது அந்த விபரங்களும் வெளிவந்துள்ளன.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு விருந்தினர்களை உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்துவர சுமார் 100 விமானங்களை முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளார். இந்த விபரங்களை வெளியிட்டு இருப்பவர் வேறு யாரும் இல்லை, ஏர்சாட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ராஜன் மிஷ்ரா ஆவார்.

இந்த 100 விமானங்களில், ஃபால்கன் 2000 என்கிற அல்ட்ரா-லக்சரி விமானங்களும் மூன்று அடங்குகின்றன. ஃபால்கன் 2000 ஆனது பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பிரபலமான டஸ்ஸால்ட் அவியேஷன் நிறுவனம் உருவாக்கும் அகலமான வணிக விமானம் ஆகும். வணிக விமானம் என்பதால், இது முழுக்க முழுக்க பெரிய பெரிய செல்வந்தர்களின் போக்குவரத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
அதாவது, அந்த அளவிற்கு ஃபால்கன் 2000 விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஏகப்பட்ட சொகுசு வசதிகள் வழங்கப்படுகின்றன. அதற்கேற்ப இந்த விமானத்தில் டிக்கெட் கட்டணமும் அதிகம். சுமார் 20 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்படும் இந்த விமானத்தில் வெறும் 19 இருக்கைகள் மட்டுமே உள்ளன என சொன்னால் நம்ப முடிகிறது. இத்தகைய விமானத்திலும் மூன்றை மகனின் திருமணத்திற்காக முகேஷ் அம்பானி வாடகைக்கு எடுத்துள்ளார்.

இவ்வாறு வாடகைக்கு எடுக்கப்பட்ட விமானங்களை விருந்தினர்களை அழைத்து வருவதற்காகவும் மற்றும் மீண்டும் கொண்டுப்போய் சேர்ப்பதற்காகவும் பலமுறை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமான போக்குவரத்துக்காக மட்டும் நிச்சயமாக பல நூறு கோடிகள் செலவிடப்பட்டு இருக்கும். இதேபோன்றதான விமான சேவையை இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற 3-நாள் நிச்சயதார்த நிகழ்ச்சிக்கும் முகேஷ் அம்பானி விருந்தினர்களுக்கு வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த சமயத்தில் குஜராத்தின் ஜாம்நகர் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு பகுதியை கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு முகேஷ் அம்பானி பயன்படுத்தி வந்தார். அதேபோல் தற்போது, ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு மும்பை மாநகரில் நிறைய பகுதிகளில் சாலைகள் தற்காலிகமாக வேறு திசைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. ஒரு சில சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மும்பை போக்குவரத்தில் இந்த கட்டுப்பாடுகள் யாவும் ஜூலை 12 முதல் 15ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் பெரும் பணக்காரராக விளங்கும் முகேஷ் அம்பானிக்கு இவ்வாறு விமானங்களை வாடகைக்கு எடுப்பது எல்லாம் பெரிய விஷயமே கிடையாது. அவரிடம் உள்ள பணத்திற்கு 3 ஃபால்கன் 2000 விமானங்களை சொந்தமாக கூட வாங்க முடியும். திருமணத்திற்கு பிறகு அந்த விமானங்களை எல்லாம் என்ன செய்வது என்கிற கேள்வி எழுந்த காரணத்தினால் தான் விமானங்களை வாடகைக்கு எடுக்கும் முடிவுக்கு முகேஷ் அம்பானி வந்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









