ஆந்திர புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் அட்டகாசம்... சட்டத்தை மீறுவதால் சர்ச்சை...
ஆந்திர மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த சூழலில் அங்கு சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இமாலய வெற்றியை பெற்றுள்ளது. தனது தந்தையும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மறைவிற்கு பின் பல்வேறு தடைகளை கடந்து முதல்வர் அரியணையை தற்போது கைப்பற்றியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திர மாநிலம் முழுக்க ஜெகன் மோகன் ரெட்டி சூறாவளி சுழன்றடித்திருக்கிறது. அத்துடன் ''ஜெய் ஜெகன்'' கோஷம் பட்டி தொட்டியெங்கும் எதிரொலித்தது. இதன் மூலம்தான் சரித்திர வெற்றியை பெற்று, ஆட்சியை கைப்பற்றியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.

கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவெண்டுலா சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட ஜெகன் மோகன் ரெட்டி 90,110 வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை ருசித்துள்ளார். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாளர்கள் அதிகம். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஜெகன் அண்ணா ஒரு ஹீரோ.

அவர்கள் அனைவரும் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த பிரம்மாண்ட வெற்றி எளிதாக ஒன்றும் கிடைத்து விடவில்லை. இதுவே அவர்களின் கொண்டாட்டத்திற்கு முக்கிய காரணம்.

இந்த சூழலில் ஆந்திராவில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் சிலர் தங்கள் கார்களின் பின் பகுதி நம்பர் பிளேட்களை அகற்றி விட்டு, அதற்கு பதிலாக ''ஜெய் ஜெகன்'' என எழுதப்பட்ட பிளேட்களை பொருத்தியுள்ளனர்.

''ஜெய் ஜெகன்'' (Jai Jagan) என எழுதப்பட்ட பிளேட் பொருத்தப்பட்ட இரண்டு கார்களை நீங்கள் மேலே உள்ள படத்தில் காணலாம். இதில் இடது பக்கம் இருப்பது ஃபோக்ஸ்வேகன் போலோ கார் ஆகும். அதே சமயம் வலது பக்கத்தில் நிற்பது ஹூண்டாய் எலைட் ஐ20.

இந்த 2 கார்களின் பின் பக்க விண்டு ஷீல்டில், ஜெகன் மோகன் ரெட்டியின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. புகைப்படத்தை வைத்து பார்க்கையில், ஹூண்டாய் எலைட் ஐ20 கார் பக்காவாக மாடிபிகேஷன் செய்யப்பட்டிருப்பது தெரியவருகிறது.

இதில், ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் வீல்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சில ஆட்டோமொபைல் ஆர்வலர்களும் ஆதரவாளர்களாக இருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இவை தவிர, நம்பர் பிளேட்டில் பதிவு எண்ணுக்கு பதிலாக ''ஏபி சிஎம் ஜெகன்'' (AP CM Jagan), அதாவது ஆந்திர பிரதேச முதல் அமைச்சர் ஜெகன் என எழுதப்பட்ட ஹூண்டாய் வெர்னா கார் ஒன்றின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. அந்த படத்தை நீங்கள் கீழே காணலாம்.

ஆனால் இத்தகைய நம்பர் பிளேட்களை கார்களில் பொருத்துவதும், அதனை பொது சாலைகளில் ஓட்டுவதும் போக்குவரத்து விதிமுறைகளுக்கு எதிரானது. இது போன்ற செய்தால், உங்கள் கார் பறிமுதல் செய்யப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்ட விதிமுறைகள் படி பார்த்தால், வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள பிளேட்டில் பதிவு எண்கள் தெளிவாக தெரியும்படி இருக்க வேண்டும். பேன்ஸியாக டிசைன் செய்வதும் தவறுதான். இந்த சூழலில் புதிய கார்கள் தற்போது உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களுடன் வர தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்களில் (High Security Registration Plates), பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் வாகன திருட்டு மற்றும் முறைகேடுகள் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் கார்களில் செய்துள்ள விதிமீறல்கள் தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications