ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி இதுதான்... அனைவரும் பாராட்ட வேண்டிய விஷயம்
அனைவரும் பாராட்டத்தக்க வகையில் மேலும் சில அதிரடியான நடவடிக்கைகளை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மேற்கொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களை போல் எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களை காட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கான செலவும் கூட மிகவும் குறைவுதான்.

எனவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலம் ஆக்குவதற்கான முயற்சிகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இன்னும் பல்வேறு சலுகைகளை வழங்குவது குறித்து ஆலோசனையும் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசு மட்டுமல்லாது பல்வேறு மாநில அரசுகளும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. இதில், ஆந்திர பிரதேச மாநிலமும் ஒன்று.

ஆந்திர பிரதேச முதல்வராக இருந்து வந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் அதிக ஆர்வம் காட்டினார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியடைந்தது.

ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றுள்ளார்.

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். அவரது அறிவிப்புகள் அனைத்தும் நாட்டின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்த சூழலில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், செலவை குறைக்கும் விஷயத்திலும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு போலவே இந்நாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு ( APSRTC - Andhra Pradesh State Road Transport Corporation) வெகு விரைவில் 350 எலெக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்படவுள்ளன.

இதற்காக 764 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது. ஒவ்வொரு எலெக்ட்ரிக் பஸ்ஸின் விலையும் தலா 2.18 கோடி ரூபாய். விஜயவாடா, அமராவதி, விசாகப்பட்டிணம், திருப்பதி மற்றும் காக்கிநாடா உள்ளிட்ட நகரங்களில் இந்த பஸ்கள் சோதனை முயற்சியாக இயக்கப்படவுள்ளன.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பொது போக்குவரத்து முறையை ஊக்குவிக்கும் ஒரு பெரும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. போக்குவரத்து துறை அமைச்சர் பெர்னி வெங்கட்ராமையா (நானி) இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''350 எலெக்ட்ரிக் பஸ்களை வாங்க 764 கோடி ரூபாயை செலவிட அரசு முடிவு செய்துள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் செயல்திறனை பார்த்த பிறகு டீசல் வாகனங்களின் பயன்பாடு குறைக்கப்படும்'' என்றார்.

இதற்காக ஃபேம் திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் இருந்து 187.5 கோடி ரூபாயை பெறவும் ஆந்திர பிரதேச மாநில அரசு முயற்சி செய்து வருகிறது. முன்னதாக டீசல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், ஏபிஎஸ்ஆர்டிசி நஷ்டத்தை சந்தித்து கொண்டுள்ளது.

எனவே எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட சீர்திருத்தங்களை அறிமுகம் செய்வதன் மூலம் ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தை லாப பாதைக்கு திருப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையிலான கோப்பு ஒன்றிலும் போக்குவரத்து துறை அமைச்சர் பெர்னி வெங்கட்ராமையா (நானி) கையெழுத்திட்டுள்ளார். ஏபிஎஸ்ஆர்டிசி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு ''பஸ் பாஸ்'' வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் மாற்றுத்திறனாளிகள் இதனை ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்க வேண்டும். ஆனால் புதிய விதிமுறைப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் புதுப்பித்தால் போதுமானது. இதன் மூலம் சுமார் 2.5 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயனடைவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








