ஆந்திரா சம்பவத்துக்கு பிறகாவது பெற்றோர் உஷார் ஆகுவார்களா? 4 சின்ன சிறு குழந்தைகளின் உயிர் பரிதாபமா போச்சு!!
காருக்குள் சிக்கிக் கொண்டதால் வெளிவர முடியாமல் 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் ஆசை ஆசையாய் வாங்கிய காரே அந்த குழந்தைகளுக்கு வில்லனாக மாறியுள்ளது. அடிக்குற வெயிலில் ஒரு நாள் முழுக்க காருக்குள் கஷ்டப்பட்டு இந்த சின்ன சிறு குழந்தைகள் பரிதாபமாக இறந்து போய் உள்ளன. என்ன நடந்தது? காருக்குள் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்புள்ளதா? எதனால் இவ்வாறு நடக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகளை பார்ப்போம்.
ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் (Vijayanagaram) மாவட்டத்தில் உள்ள துவாராபுடி கிராமத்தை சேர்ந்த உதய் (8), சாருமதி (8), கரிஷ்மா (6) மற்றும் மானஸ்வி (6) என்கிற நான்கு குழந்தைகள் காலையில் இருந்து காணவில்லை என கடந்த மே 18, ஞாயிற்று கிழமை மாலை துவாராபுடி காவல் நிலையத்திற்கு குழந்தைகளின் பெற்றோரிடம் இருந்து புகார் ஒன்று வந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தைகளை ஊர் மக்களுடன் சேர்ந்து எல்லா இடங்களிலும் தேடியுள்ளனர். பின்னர் வீட்டிற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) காரை சோதனை செய்து பார்த்தனர். அதில் காருக்குள் குழந்தைகள் நால்வரும் மயங்கி நிலையில் இருந்தனர். ஆனால், அவர்களை மீட்க காரின் சாவி இல்லை.
அது உள்ளே இருந்த குழந்தைகளின் கையில் இருந்தது. பின்னர் வேறு வழியில்லாமல் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து குழந்தைகளை மீட்டனர். இருப்பினும், குழந்தைகள் அனைவரும் மயங்கிய நிலையில் இருந்ததால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் நால்வரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூற குழந்தைகளின் பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
இந்த சம்பவத்தினால் மொத்த துவாராபுடி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. உயிரிழந்த குழந்தைகளில் சாருமதி மற்றும் கரீஷ்மா என்கிற சகோதரிகள் காரின் உரிமையாளரின் மகள்கள் ஆவர். மற்றவர்கள் இருவரும் இவர்களது நண்பர்கள். விளையாட்டாக வீட்டில் இருந்த காரின் சாவியை கொண்டு சென்று காரின் கதவை அன்லாக் செய்து காருக்குள் விளையாடியுள்ளனர்.
அப்போது கார் தானாக லாக் ஆகியதில், குழந்தைகள் நால்வரும் உள்ளேயே மாட்டிக் கொண்டதால் மூச்சு இன்றி உயிரிழந்துள்ளதாக போலீசார் தங்களது விசாரணையில் தெரிவித்துள்ளனர். மின்விசிறியை ஆன் செய்யாமல், ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்ட காருக்குள் இருந்தால் ஒரு கட்டத்திற்கு மேல் ஆக்ஸிஜனின் அளவு குறையும். அதேநேரம், நாம் சுவாசித்து வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரித்துக் கொண்டே வரும்.
மனிதன் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான ஆக்ஸிஜனின் அளவு குறைவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆக்ஸிஜன் முற்றிலுமாக கிடைக்காத நேரத்தை எட்டிய பிறகே மரணம் ஏற்படும். அதுவரையில் ஆக்ஸிஜனின் அளவு குறைவதால் கடுமையான தலைவலி, வாந்தி போன்றவை ஏற்படும். பெரியவர்களால் சில மணிநேரத்திற்கு தாக்குப்பிடிக்க முடியும்; ஆனால் குழந்தைகளுக்கு மிக விரைவாகவே ஆபத்தில் சென்று முடிகிறது.

ஆதலால், முடிந்தவரையில் குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத தொலைவில் காரின் சாவியை வைக்க பாருங்கள். குழந்தைகளுக்கு காரின் சாவியை எவ்வாறு கண்ட்ரோல் செய்வது என்பதை சொல்லிக் கொடுக்காமல் இருத்தலே நல்லது. காரை பார்க் செய்த பின் கவர் மூலமாக காரை முழுவதுமாக மூடிவிடுவது இன்னும் நல்லது. அதேபோல், இவ்வாறு காருக்குள் சிக்கிக் கொள்வதினால் என்னென்ன நடக்கும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆந்திராவில் நடந்துள்ள இந்த சம்பவத்திற்கு குழந்தைகளை காட்டிலும் அவர்களது பெற்றோர் மீதுதான் குற்றஞ்சாட்ட வேண்டும். ஏனெனில், குழந்தைகளின் கைக்கு எட்டும் அளவிற்கு கார் சாவியை வைத்தது தவறு. ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 4 குழந்தைகள் காலையில் இருந்து காணவில்லை எனும்போது அவர்களை இன்னும் முன்கூட்டியே தேடி கண்டுப்பிடித்து இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








