அவசரமாக போக வேண்டிய ஆம்புலன்ஸை எடுத்து ஜாலியாக ஓட்டிய ரோஜா... வீடியோ எடுக்க சொல்லி அலப்பறை...
அவசரமாக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸை எடுத்து ஜாலியாக ஓட்டி ரோஜா அலப்பறை செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை, பெண்கள் ஓட்டுவதை இன்று நம்மால் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது. ஆனால் லாரி மற்றும் பஸ் போன்ற கனரக வாகனங்களையோ அல்லது ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களையோ பெண்கள் ஓட்டுவதை பார்ப்பது என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.

இந்தியாவில் மிகவும் அரிதாக ஒரு சில பெண்கள்தான் பெரிய வாகனங்களை துணிச்சலாக ஓட்டுகின்றனர். அந்த வகையில் முன்னாள் தென் இந்திய நடிகையும், தற்போதைய ஆந்திர பிரதேச அரசியல்வாதியுமான ரோஜா, ஆம்புலன்ஸ் ஓட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஆனால் இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் வருவதற்கு பதில், விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை போல், ஆந்திர பிரதேசத்திலும் தற்போது கொரோனா வைரஸ் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த பிரச்னையை கையாள அதிக ஆம்புலன்ஸ் தேவைப்படும் நிலையில், அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன், கடந்த சில நாட்களுக்கு முன், நூற்றுக்கணக்கான புதிய ஆம்புலன்ஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இதில், சில ஆம்புலன்ஸ்கள் சித்தூர் மாவட்டம் நகரி சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவை நகரி தொகுதிக்கு நேற்று (ஜூலை 7ம் தேதி) வந்து சேர்ந்தன. இதற்காக அங்கு சிறிய அளவில் ஒரு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில், ஆந்திர பிரதேச மாநிலத்தை ஆட்சி செய்து வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், நகரி தொகுதியின் எம்எல்ஏ-வுமான ரோஜா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், பல்வேறு பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ்கள் அவசரமாக சென்றாக வேண்டிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஆம்புலன்ஸ்கள் புறப்படுவதை, எம்எல்ஏ ரோஜா தாமதம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஒரு ஆம்புலன்ஸின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து, கொஞ்ச தூரம் அதனை ஓட்டி சென்றார்.

அத்துடன் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுக்கும்படியும் அங்கிருந்தவர்களை அவர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர் கட்சியான தெலுங்கு தேசம், ரோஜாவின் இந்த செயல்பாடுகளை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

ஆனால் அங்கிருந்த டிரைவர்கள் சிலர் விடுத்த அன்பு கோரிக்கையின் பேரில்தான், ரோஜா ஆம்புலன்ஸை ஓட்டினார் என அவரின் ஆதரவாளர்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரும் இந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுத்து வருகின்றனர். எம்எல்ஏ ரோஜா ஆம்புலன்ஸ் ஓட்டும் இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதே சமயம் ஆம்புலன்ஸ்களின் சேவை தொடக்க நிகழ்ச்சியின்போதும், ஆம்புலன்ஸை ஓட்டும்போதும் ரோஜா மாஸ்க் அணியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில், டூவீலர்களை ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் அனைத்து சமயங்களிலும் மாஸ்க் அணிவதும் முக்கியம்.

குறிப்பாக பொது இடங்களுக்கு வரும்போது முக கவசங்களை அணிவதன் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை குறைத்து கொள்ள முடியும். ஆனால் ஒரு எம்எல்ஏ-வாக இருந்து கொண்டு, ரோஜாவே மாஸ்க் அணியாமல் அலட்சியம் காட்டுவது, பொதுமக்கள் மத்தியில் தவறான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications








