புதிய டொயோட்டா காரில் ஏகப்பட்ட பழுது... கோபத்தில் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா? இது வேற லெவல்
புதிய டொயோட்டா காரில் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டதால், உரிமையாளர் செய்த காரியம் கவனம் ஈர்த்துள்ளது.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஒன்றாக டொயோட்டா பார்ச்சூனர் திகழ்கிறது. எனவே டொயோட்டா பார்ச்சூனர் காருக்கு அறிமுகமே தேவையில்லை. பார்ச்சூனர் எஸ்யூவி காரின் பிரம்மாண்ட வெற்றிக்கு டொயோட்டா நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பகத்தன்மை உள்பட பல்வேறு காரணங்களை சொல்லலாம்.

இந்த சூழலில் டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி காரை வாங்கியதால், வாடிக்கையாளர் ஒருவர் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவர் செய்த காரியம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் புதிய டொயோட்டா பார்ச்சூனர் காரை வாங்கினார். இதற்காக அவர் சுமார் 35 லட்ச ரூபாயை செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் காரை டெலிவரி எடுத்த உடனேயே ஒரு சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. எனவே மற்ற வாடிக்கையாளர்களை போலவே அவரும் காரை சர்வீஸ் சென்டருக்கு எடுத்து சென்றார்.

இதன்பின் சர்வீஸ் சென்டர் மெக்கானிக்குகள் காரை சரிபார்த்து மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். ஆனால் சர்வீஸ் சென்டரில் பழுது பார்க்கப்பட்ட பிறகும் கூட பிரேக்குகள் சரியாக வேலை செய்யவில்லை என்பது அந்த காரின் உரிமையாளருக்கு தெரியவந்தது. பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட புத்தம் புதிய காரில் இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டாதால், அவர் அதிருப்தியடைந்தார்.

இது புத்தம் புதிய கார் என்பதால், அதற்கு பதிலாக தனக்கு வேறு ஒரு காரை மாற்றி தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அதே காரை மீண்டும் பழுது நீக்கி தருவதை அவர் விரும்பவில்லை. இது தொடர்பாக நுகர்வோர் நீதிமன்றத்தில் டீலர்ஷிப்பிற்கு எதிராக அவர் வழக்கும் தொடர்ந்தார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த டீலர்ஷிப், கோர்ட்டிற்கு வெளியே பேசி தீர்த்து கொள்ளலாம் என இறங்கி வந்தது.

மேலும் பழுதடைந்த காருக்கு பதிலாக புதிய கார் ஒன்றை வழங்குவதாக உறுதி அளித்ததாகவும் தெரிகிறது. ஆனால் ஒரு சில வாரங்கள் கடந்த பிறகும் கூட அவர்கள் புதிய காரை அவருக்கு வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாடிக்கையாளர் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் டீலர்ஷிப்பில் இருந்து டொமோ பார்ச்சூனர் காரையும் அவர் கைப்பற்றினார்.

ஆனால் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடந்தது? என்பது உறுதியாக தெரியவில்லை. அதாவது அவருக்கு புதிய கார் வழங்கப்பட்டு விட்டதா? அல்லது அவரது புகார்கள் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு விட்டதா? என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. பாலசோர் பகுதி மட்டுமல்லாது, டொயோட்டா வாடிக்கையாளர்கள் மத்தியிலும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனமாக இருந்தாலும் கூட, ஒரு சில தயாரிப்புகளில் இதுபோல் பழுது ஏற்பட்டு விடுவது வாடிக்கையாகவே உள்ளது. ஆனால் புதிய கார்களில் இவ்வாறு ஏற்படும் பழுதுகளில் இருந்து வாடிக்கையாளர்களை காப்பாற்ற போதுமான சட்டங்கள் இந்தியாவில் இல்லை என்பது வேதனையான ஒரு விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








