ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் காரை குதறி எடுத்து ஒப்படைக்கும் வாடிக்கையாளர்... காரணம் என்ன?
மாசு உமிழ்வு பிரச்னையில் சிக்கிய ஃபோக்ஸ்வேகன் டீசல் கார்களில் உதிரிபாகங்களை கழற்றிக் கொண்டு வாடிக்கையாளர்கள் திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தன் வினை தன்னை சுடும் என்ற நிலையில் இருக்கிறது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம். கடந்த ஆண்டு ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் குறிப்பிட்ட டீசல் கார்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக மாசு வெளிப்படுத்துவதாக கண்டறியப்பட்டது. இதற்காக, பிரத்யேக சாஃப்ட்வேர் ஒன்றையும் அந்த நிறுவனம் பயன்படுத்தி மெகா மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இது உலகமுழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமெரிக்காவில் பிரச்னைக்குரிய கார்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக அந்நாட்டு நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்தது ஃபோக்ஸ்வேகன். தற்போது அதிக மாசு உமிழ்வு பிரச்னையுடைய கார்களை அந்த நிறுவனம் திரும்ப பெற்று வருகிறது.

வாடிக்கையாளர்களை ஃபோக்ஸ்வேகன் நியமித்திருக்கும் சட்ட நிபுணர்கள் தொடர்பு கொண்டு அந்த காருக்கான மதிப்பு குறித்து உடன்படிக்கை செய்து காரை ஒப்படைத்து வருகின்றனர். அதன்படி அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

இந்த நிலையில், சில வாடிக்கையாளர்களுக்கு எதிர்பார்த்தபடி இழப்பீடு மதிப்பு பெற முடியாத நிலை இருப்பதாக தெரிகிறது. இதனால், அவர்கள் காரில் இருக்கும் பல உதிரிபாகங்களை கழற்றிக் கொண்டு காரை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சின்சினாட்டி பகுதியை சேர்ந்த ஜோ மேயர் என்ற வாடிக்கையாளர் ஒருவர் இவற்றையெல்லாம் தாண்டி ஒருபடி மேலே சென்றுள்ளார். அதாவது, ஃபோக்ஸ்வேகன் நியமித்திருந்த சட்ட நிபுணர்களுடன் ஜோ மேயர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.

அதில், ஜோ மேயர் எதிர்பார்த்த அளவு இழப்பீடு கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, காரில் எஞ்சின், ஸ்டீயரிங் வீலை மட்டும் விட்டு வைத்து, பெரும்பாலான பாகங்களை கழற்றி எலும்புக்கூடாக மாற்ரி ஒப்படைத்துள்ளார்.

அந்த காரின் படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டுதான் அந்த கோல்ஃப் ஜிடிஐ காரை ஜோ மேயர் வாங்கியிருக்கிறார். வாங்கி சில நாட்களிலேயே மாசு உமிழ்வில் ஃபோக்ஸ்வேகன் செய்த மோசடி வெளியாகியது.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளார் ஜோ மேயர். அந்த ஆத்திரத்தை தீர்ப்பதற்காக தற்போது திரும்ப ஒப்படைக்கும்போது தனது காரை தோலுரித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மாசு உமிழ்வு பிரச்னைக்குரிய திரும்ப ஒப்படைப்பதற்கான உடன்படிக்கையில், கார் இயங்கும் நிலையில் இருத்தல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பாயிண்ட்டை பிடித்துக் கொண்டு எஞ்சின், ஸ்டீயரிங் வீலை மட்டும் விட்டு விட்டு, காரின் கதவுகள், டெயில்கேட், முன்புற க்ரில், பம்பர்கள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஓட்டுனர் இருக்கையை தவிர பிற இருக்கைகள் என அனைத்தையும் தனியாக கழற்றி எடுத்து விட்டார் ஜோ மேயர்.

ஜோ மேயரின் செயலுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், பலர் ஆமோதிப்பதாக ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், இவரை பின்தொடர்ந்து பலர் தங்களது கார்களை இதே பாணியில் காரில் இருக்கும் பாகங்களை கழற்றிக் கொண்டு திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஒருவர், எப்படியிருந்தாலும் இந்த பிரச்னைக்குரிய கார்கள் உடைக்கப்படுவது உறுதி. இதில், காரில் இருக்கும் பாகங்களை எடுத்துக் கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் அந்நாட்டு ஃபோக்ஸ்வேகன் வாடிக்கையாளர்களிடையை கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

ஜோ மேயரின் செயலைக் கண்டு, இதே பாணியில் பல வாடிக்கையாளர்கள் இறங்கக்கூடும் என்றும் அந்நாட்டு மீடியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, காரை திரும்ப பெறும் விதிமுறையில் ஃபோக்ஸ்வேகன் மாற்றம் செய்யுமா அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications