எப்பேர்பட்ட மனுஷன்! அரசு பஸ்ஸில் நின்னுகிட்டே வந்தது இவரா! கண்களை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே (Anil Kumble). இவரது புகைப்படம் ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக (Viral Pic) பரவி வருகிறது. இதில் அனில் கும்ப்ளே அரசு பஸ் ஒன்றில் நின்று கொண்டே பயணம் செய்வதை நம்மால் காண முடிகிறது.
அனில் கும்ப்ளே தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ட்விட்டர் (Twitter) தளம்தான் தற்போது எக்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். பெங்களூரில் (Bangalore) உள்ள கெம்பேகவுடா விமான நிலையத்தில் (Kempegowda International Airport) இருந்து அனில் கும்ப்ளே அரசு பஸ்ஸில் வீட்டிற்கு செல்லும்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அனில் கும்ப்ளே நின்று கொண்டிருக்க, அவருக்கு பின்னால் பயணிகள் சாதாரணமாக அமர்ந்திருப்பதை இந்த புகைப்படத்தில் நம்மால் பார்க்க முடிகிறது. அனில் கும்ப்ளே போன்ற பிரபலமான நபர் ஒருவர் அரசு பஸ் போன்ற பொது போக்குவரத்து (Public Transport) வாகனத்தில் பயணம் செய்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனில் கும்ப்ளேவின் இந்த நடவடிக்கையை, சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் மனதார பாராட்டி கொண்டுள்ளனர். ஏனெனில் சொந்த வாகனங்களுக்கு பதிலாக மக்கள் பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதுதான் இதற்கு காரணம்.

அத்துடன் சொந்த வாகனங்களுக்கு பதிலாக மக்கள் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய முன்வந்தால், காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னையும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அனில் கும்ப்ளேவின் நடவடிக்கை முன் மாதிரியான ஒன்று என நெட்டிசன்கள் வர்ணித்து வருகின்றனர்.
ஆனால் அனில் கும்ப்ளே பொது போக்குவரத்து வாகனத்தில் பயணம் செய்ததற்கு பின்னால் மற்றொரு காரணம் ஒன்று இருக்கலாம் என கருதப்படுகிறது. அனில் கும்ப்ளே, கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரை சேர்ந்தவர். பெங்களூர் நகரில் இன்று (செப்டம்பர் 11) பந்த் (Bangalore Bandh) நடைபெற்று கொண்டுள்ளது.
கர்நாடக மாநில தனியார் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்புதான் (Federation Of Karnataka State Private Transport Association), பெங்களூர் நகரில் இன்று பந்த்தை நடத்தி கொண்டுள்ளது. கர்நாடக மாநில அரசு கொண்டு வந்த சக்தி திட்டம்தான் (Shakti Scheme) இந்த பந்த்திற்கு முதன்மையான காரணம்.
இந்த திட்டத்தின் கீழ், பெண் பயணிகளுக்கு (Female Passengers) அரசு பஸ்களில் இலவச பயணம் (Free Travel) வழங்கப்படுகிறது. கர்நாடக மாநில முதல் அமைச்சராக சமீபத்தில் பதவியேற்ற சித்தராமையா (Siddaramaiah) இந்த திட்டத்தை கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் மூலம், பெண்கள் அரசு பஸ்களில் மகிழ்ச்சியுடன் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
ஆனால் இந்த திட்டத்தால், ஆட்டோ (Auto) மற்றும் டாக்ஸி (Taxi) தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் தனியார் பஸ்களிலும் (Private Buses) கூட்டம் குறைந்துள்ளதாக தெரிகிறது. எனவேதான் கர்நாடக மாநில தனியார் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு இன்று பந்த் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக பெங்களூர் நகரில் இன்று காலை முதல், ஆட்டோக்கள், டாக்ஸிகள் மற்றும் தனியார் பேருந்துகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இயங்கவில்லை. இதன் காரணமாகவே முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே அரசு பஸ்ஸில் பயணிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனில் கும்ப்ளே பயணம் செய்தது பிஎம்டிசி என சுருக்கமாக அழைக்கப்படும் பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்தின் (BMTC - Bangalore Metropolitan Transport Corporation) வால்வோ பஸ் (Volvo bus) ஆகும். இது குளிர்சாதன வசதி (AC) கொண்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அனில் கும்ப்ளே அரசு பஸ்ஸில் பயணம் செய்ததற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அவரது இந்த செயல், மக்கள் மத்தியில் நிச்சயம் பொது போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும். பெங்களூர் போன்ற நகரங்களுக்கு இந்த விழிப்புணர்வு கண்டிப்பாக அவசியம்.
ஏனெனில் பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசல் (Traffic Jam) உலகப்புகழ் பெற்றது. சாலைகள் குறுகலாக இருப்பதும், வாகனங்களின் எண்ணிக்கை பிரம்மிக்க வைக்கும் வகையில் அதிகரித்து கொண்டே வருவதும்தான் இதற்கு முக்கிய காரணம். எனவே மக்கள் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்தால், போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications