சாமியாரிடம் எப்படி இவ்வளவு காஸ்ட்லீயான பென்ஸ் கார்? ஏன் யாருக்கும் கேட்க தோன்றவில்லை?
இந்தியாவில் சாமியார்களுக்கு பஞ்சமே இல்லை. தன்னிடம் இந்த சக்தி உள்ளது? நான் கடவுளை சந்தித்தேன் என கூறி கடந்த காலங்களில் இருந்து இலட்சக்கணக்கிலான சாமியார்கள் பொது வெளியில் தெரிந்துள்ளனர். வெளியில் தெரியாதவர்கள் எத்தனை பேரோ... அதேபோல், சாமியார்களுக்கு உறுதுணையாக இருப்பவர்களையும் கணக்கில் எடுத்தால் எண்ணிக்கை கோடியை தாண்டி போகும். அந்த வரிசையில், இங்கு ஒரு சாமியார் அவரது விலையுயர்ந்த பென்ஸ் காரில் சான்ரூஃப் வழியாக காட்சித் தந்தப்படி செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில், இந்த சாமியார் பயன்படுத்தியது எந்த மாதிரியான பென்ஸ் கார் என்பதை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
கடவுளை வெளியில் தேடாமல் தனக்குள் தேடினாலே உலகில் முக்கால்வாசி மத பிரச்சனைகள் இருக்காது. மதங்கள் வேண்டுமா? வேண்டாமா? என்பதே பெரிய விவாதத்திற்குரிய விஷயமாக இருக்கும் போதிலும், தன்னுடைய மதத்தை மற்றவர்கள் மத்தியில் பரப்புவோர் எல்லா மதங்களில் இருந்தும் தொடர்ந்து வந்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நல்ல விஷயங்களை பரப்பவே தேவையில்லை; அது தானாகவே மக்களை சென்றடையும்.

இந்த டாப்பிக்கில் இன்னும் ஆழமாக செல்ல வேண்டாம்... அது பெரிய மேட்டர். குறிப்பாக, இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் சாமியார்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இங்குள்ள சாமியார்கள் மாடர்ன் உலகிற்கு ஏற்ப தங்களை அப்டேட் செய்துக்கொண்டே இருக்கின்றனர். அதாவது, முன்னர் எல்லாம் ஒரு ஆசிரமத்தில் நன்கு சவுகரியமான, பெரிய அளவிலான இருக்கையில் அமர்ந்துக் கொண்டு மக்களுக்கு அருள் அளித்துக் கொண்டு இருந்தனர்.
ஆனால், தற்போதெல்லாம் காலம் மாற, மாற அவர்களது மத பிரச்சார முறைகளும் மாறிவிட்டன. அதாவது, இப்போதெல்லாம் சொகுசு கார்களில்/ வேன்களில் நேரடியாக மக்களின் வசிப்பிடத்திற்கே சென்றுவிடுகின்றனர். வட இந்தியாவில் சாமியார்களின் இவ்வாறான வாகன பேரணிகளை பரவலாக காண முடியும். சமீபத்தில் கூட, பாகேஷ்வர் பாபா என்பவர் தனது விலையுயர்ந்த டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி300 காரில் நின்றுக்கொண்டு மக்களுக்கு காட்சித் தந்தப்படி செல்லும் வீடியோவை பார்த்திருந்தோம்.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி300 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.2.5 கோடி என்கிற அளவில் உள்ளது. பாகேஷ்வர் பாபாவை தொடர்ந்து, பூகி பாபா என அழைக்கப்படும் அனிருதாசார்யா பாபா என்பவர் தனது விலையுயர்ந்த பென்ஸ் காரில் மக்களுக்கு அருள்பாலித்தப்படி சென்றுள்ளார். அதாவது, காரின் சன்ரூஃப் வழியாக பாதி உடலை வெளியே மக்கள் முன் காட்டியப்படி பயணம் செய்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்த வீடியோ ரிதிகா ஸ்கேட்டிங் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பெயருக்கேற்ப இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஸ்கேட்டிங் தொடர்பான வீடியோக்களை பதிவிடுவதை தான் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சில சமயங்களில் பொது மக்களுக்கு ஆபத்தான முறையில் பொது சாலையில் இவர்கள் ஸ்கேட்டிங் செய்வதையும் வீடியோக்களில் பார்க்க முடிகிறது.

அவ்வாறு, பூகி பாபாவின் வாகன பேரணியில் கலந்துக் கொண்டு செல்வதையும் இந்த ஸ்கேட்டர்கள் வீடியோவாக காட்சிப்படுத்தி தங்களது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். இந்த வாகன பேரணியில் பூகி பாபா எனப்படும் அனிருதாசார்யா பாபா பயன்படுத்தி இருப்பது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி என்கிற லக்சரி எஸ்யூவி கார் ஆகும். பாபா இந்த விலையுயர்ந்த காரில் நின்றப்படி செல்ல, அதே காரில் அவருக்கு இருபுறமும் பாதுகாப்பிற்காக இருவர் தொங்கியப்படி செல்கின்றனர்.
மேலும், பாபா செல்லும் பென்ஸ் காரை சுற்றிலும் நிறைய பேர் தங்களது வாகனங்களிலும், ஸ்கேட் போட்களிலும் செல்வதை வீடியோவில் காண முடிகிறது. ஆனால் உண்மையில், இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, இயக்கத்தின் போது காரின் சன்ரூஃப் வழியாக எட்டிப்பார்த்தப்படி பயணம் செய்வது அபராதத்திற்குரிய குற்றமாகும். இருப்பினும், பூகி பாபா மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என எதிர்பார்ப்பது எல்லாம் வீண்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில் பல்வேறு தவறான விஷயங்களை பார்க்க முடிகிறது. அதாவது, பயணத்தின்போது காரின் சன்ரூஃப் வழியாக வெளியே வருவது, காருக்கு இருபுறங்களிலும் தொங்கியப்படி பயணம் செய்வது, காரை பிடித்துக்கொண்டு காருடன் சேர்ந்து ஸ்கேட்டிங் செய்வது, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவது என வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். இத்தனை தவறான செயல்களுக்கு வழிவகுக்கக்கூடிய இவ்வாறான வாகன பேரணிகளை தவிர்க்கலாம்.


Click it and Unblock the Notifications









