மீண்டும் சாலையில் தீப்பிடித்த டெஸ்லா மின்சார கார்!! விபத்தில் ஒருவர் பலி!
மீண்டும் டெஸ்லா கார் ஒன்று சீனாவில் விபத்தில் சிக்கி எரிந்து சாம்பலாகியுள்ளது. ஒருவரது உயிரையும் பறித்துள்ள இந்த விபத்து குறித்த கூடுதல் விபரங்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டெஸ்லா கார்கள் விபத்தில் சிக்குவது சமீப காலமாக தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை உபயோகப்படுத்த வாடிக்கையாளர்கள் அஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஆளில்லா இயங்கும் டெஸ்லா கார் ஒன்று சாலைக்கு அருகில் இருந்த மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் இருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இது டெக்ஸாஸ் மாகாணத்தில் பெரும் சர்ச்சையை வெடித்தது.

இதற்கு உடனடியாக டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் டுவிட்டரில் பதிலளித்திருந்தார். இருப்பினும் இந்த விபத்திற்கான காரணம் இன்னமும் உறுதியாக தெரியாத நிலையில் தற்போது சீனாவில் இதேபோன்று டெஸ்லா எலக்ட்ரிக் கார் ஒன்று விபத்தில் சிக்கி தீப்பிடித்துள்ளது.

Image Courtesy: Gizmochina
இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து தொடர்பாக இணையத்தில் பரவி வரும் வீடியோவில், தூரத்தில் கார் ஒன்று யாரும் கிட்டவே நெருங்க முடியாத அளவில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது.

முன்னால் சென்று கொண்டிருந்த காரை ஓவர்டேக் செய்யும் போது சாலையின் பக்கவாட்டு சுவரில் டெஸ்லா கார் மோதியதாகவும், சிறிது நேரத்திலேயே தீப்பிடிக்க ஆரம்பித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த விபத்து சீனாவின் ஜெங்செங் மாகாணத்தில் உள்ள மேம்பாலம் ஒன்றில் இரவு 10 மணியளவில் நடைபெற்றுள்ளது. மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் தான் கார் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் என்ஜின் சேதமடைந்து இருக்கலாம், அதுவே நெருப்பு உருவாகுவதற்கு காரணமாக இருந்திருக்கும்.

போலீஸ் விசாரணையில், இந்த விபத்தில் இரு கார்கள் சிக்கி இருக்க வேண்டும். ஆனால் டெஸ்லா கார் மட்டும் தான் தீப்பிடித்துள்ளது. மற்றொரு கார் பெரிய அளவில் எந்தவொரு சேதமும் இன்றி சம்பவ இடத்தில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும்.

மேலும் விபத்து இரவு 10 மணியளவில் நடைபெற்றுள்ளதால் அந்த சமயத்தில் சாலையில் அதிகளவில் வாகனங்கள் இயங்காததினாலும் பெரிய அளவிலான விபத்து நிகழவில்லை என தெரிவித்துள்ளனர்.

டெக்ஸாஸ் மாகாண விபத்தை போல் இந்த சீன விபத்தும் விசாரணையில் உள்ளது. இந்த விசாரணையில் டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகளும் போலீஸாருக்கு உதவியாக தங்களை ஈடுப்படுத்தி கொண்டுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கி இருப்பது எந்த வகையான டெஸ்லா கார் என்பது தெரியவில்லை. அதேபோல் விபத்தில் உயிரிழந்துள்ளவர் குறித்த விபரங்களும் கிடைக்க பெறவில்லை. இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொழிற்சாலையை துவங்க தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








