புல்லட் ரயிலில் பயணித்து ஆய்வு செய்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!
ஆந்திராவுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய தலைநகரான அமராவதியிலிருந்து, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு புல்லட் ரயில்களை இயக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர் அங்கு புல்லட் ரயிலிலும் பயணித்து ஆய்வு செய்துள்ளார். இதன்மூலம், ஆந்திராவுக்கு புல்லட் ரயிலை கொண்டு வந்துவிடுவதில் படு முனைப்புடன் இருந்து வருகிறார்.

புல்லட் ரயில்
ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கான தலைநகராக ஹைதராபாத் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆந்திராவுக்கு அமராவதி என்ற பெயரில் புதிய தலைநகர் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தலைநகரை நிர்மாணிப்பதிலும், இந்தியாவிலேயே முன்மாதிரி நகரமாக இருக்கும் விதத்தில், கட்டமைப்பு வசதிகளுடன் உருவாக்குவதிலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக, அமராவதியிலிருந்து புல்லட் ரயில்களை இயக்கும் முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

கோரிக்கை
ஹைதராபாத்திலுள்ள ஆந்திர அரசு அதிகாரிகள், அலுவலர்கள் புதிய தலைநகரான அமராவதிக்கு செல்வதற்கு ஏதுவாக, செகந்திரபாத்- விஜயவாடா இடையே விரைவு ரயில் ஒன்று சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம், அமராவதியிலிருந்து பிற நகரங்களுக்கு புல்லட் ரயில் திட்டங்களை செயல்படுத்தி தருமாறு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்தார்.

விடவில்லை...
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் அரசுமுறைப் பயணமாக சீனா சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது சுற்றுப் பயணத்திற்கு இடையே, புல்லட் ரயிலில் பயணித்து, ஆய்வு செய்தார். அப்போது, புல்லட் ரயில் பயணம் அவரை வெகுவாக ஈர்த்துவிட்டதாம்.

பரம திருப்தி
சீனாவின் தியாஜின் நகரிலிருந்து, அந்நாட்டு தலைநகர் பீஜிங் வரை அவர் புல்லட் ரயிலில் பயணித்தார். இரு நகரங்களுக்கு இடையிலான 140 கிமீ தூரத்தை அந்த புல்லட் ரயில் 31 நிமிடங்களில் கடந்துவிட்டதாம். அந்த ரயில் மணிக்கு 295 கிமீ வேகத்தில் பயணித்ததாம். இந்த ரயில் பயணம் சந்திரபாபுவை வெகுவாக கவர்ந்துவிட்டது.

சொகுசு...
அதிவேகம் மட்டுமின்றி, புல்லட் ரயில் பயணம் மிக சொகுசாக இருந்ததால், அவரை வெகுவாக கவர்ந்துவிட்டதாம். இதையடுத்து, ஆந்திராவுக்கு புல்லட் ரயில் திட்டத்தை கொண்டு வந்துவிட வேண்டும் என்று அவர் முடிவுக்கு வந்துவிட்டார்.

வேட்கை
ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியிலிருந்து சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களை ஒரு சில மணி நேரத்தில் அடைவதற்காக புல்லட் ரயில் இயக்க அவர் கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன், அமராவதியிலிருந்து அம்மாநிலத்தின் முக்கிய துறைமுக நகரான விசாகப்பட்டணத்தையும் விரைவாக இணைக்கும் விதத்தில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தவும் அவர் கோரி இருக்கிறார்.

சீனாவின் நிபுணத்துவம்...
உலகிலேயே அதிக நீளம் கொண்ட புல்லட் ரயில் பாதை கட்டமைப்பை சீனா கொண்டுள்ளது. மேலும், இந்தியாவுக்கு புல்லட் ரயில் திட்டங்களில் பங்களிக்கவும் ஆர்வமாக இருந்து வருகிறது. இந்தநிலையில், சந்திரபாபு நாயுடுவின் ஆவலும், அவரது சீன சுற்றுப் பயணமும் புல்லட் ரயில் திட்டங்களை தென்மாநிலங்களுக்கும் பரவச் செய்வதற்கு பிள்ளையார் சுழி போடுவதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








