கேன்சர் பாதித்த குழந்தைக்கு இப்படி ஒரு ஆசையா! யோசிக்காமல் நிறைவேத்திய மருத்துவமனை! எல்லாரும் கண் கலங்கீட்டாங்க
குழந்தைகளுக்கு எண்ணற்ற ஆசைகள் இருக்கும். அந்த ஆசைகள் நிறைவேறும்போது, குழந்தைகளின் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியை வெறும் வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. குறிப்பாக உடல் நலம் குன்றிய குழந்தைகளின் ஆசைகள் நிறைவேறும்போது, அவர்கள் தங்கள் வலியை மறப்பார்கள். சந்தோஷத்தில் துள்ளி குதிப்பார்கள்.
இதற்கு கார்த்திக் சிங் ஒரு உதாரணம். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் (Apollo Hospital), கார்த்திக் சிங் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இளம் வயதிலேயே கார்த்திக் சிங்கிற்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது வருத்தமான ஒரு விஷயம்.

கேன்சருக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வரும்போதெல்லாம், கார்த்திங் சிங் மஹிந்திரா தார் (Mahindra Thar) காரை பற்றி பேசி கொண்டே இருப்பார். ஆம், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களை போல், கார்த்திங் சிங்கும் மஹிந்திரா தார் காரின் மிகப்பெரிய ரசிகர் ஆவார்.
மருத்துவமனையில் உள்ள டாக்டர்களிடம், வளர்ந்து பெரிய ஆளாக ஆன பிறகு மஹிந்திரா தார் காரை வாங்குவேன் என கார்த்திங் சிங் சொல்லி கொண்டே இருப்பாராம். மஹிந்திரா தார் மீது கார்த்திங் சிங்கிற்கு இருக்கும் காதலை புரிந்து கொண்ட மருத்துவமனை நிர்வாகம், அவரது ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தது.
அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், இது போன்ற நோயாளிகளுக்காக, 'சிறிய ஆசைகள்' என்ற பெயரில் திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகிறது. நோயாளிகளின் சிறிய சிறிய ஆசைகளை நிறைவேற்றுவதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் கீழ், கார்த்திக் சிங்கிற்கு 'சர்ப்ரைஸ்' கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டது.
இதற்காக லக்னோ நகரில் உள்ள மஹிந்திரா ஷோரூம் (Mahindra Showroom) ஒன்றை மருத்துவமனை நிர்வாகம் அணுகியது. அவர்களிடம் சிறுவன் கார்த்திக் சிங்கின் ஆசையை, மருத்துவமனை நிர்வாகம் எடுத்துரைத்தது. இதைக்கேட்ட மஹிந்திரா டீலர்ஷிப், கார்த்திக் சிங்கின் ஆசையை நிறைவேற்ற மகிழ்ச்சியுடன் ஒப்பு கொண்டது.
இதன்பின் கார்த்திங் சிங் அடுத்த முறை சிகிச்சைக்கு வர வேண்டிய நாள் வந்ததும், அவரது வீட்டிற்கு மஹிந்திரா தார் கார் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த காரின் உள்ளே பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தனக்கு மிகவும் பிடித்த மஹிந்திரா தார் கார், வீட்டிற்கு முன்பு நிற்பதை பார்த்ததும் கார்த்திக் சிங் ஆச்சரியத்தில் உறைந்து போனார்.
இதன்பின் அந்த காரில் ஏறி கார்த்திங் சிங் மருத்துவமனைக்கு சென்றார். லக்னோ அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இந்த நிகழ்வுகளை எல்லாம் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளது. அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மஹிந்திரா குழும தலைவரான ஆனந்த் மஹிந்திராவும் (Anand Mahindra), தனது எக்ஸ் (X) பக்கத்தில், அதாவது ட்விட்டர் (Twitter) பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த முயற்சி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. நோயாளிகள் தங்கள் வலியை மறந்து மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு இந்த முயற்சி உதவி செய்யும் என்பதில் சந்தேகமில்லை. எனவே மற்ற மருத்துவமனை நிர்வாகங்களும் கூட, இது போன்ற முயற்சிகளை எடுக்கலாம் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








