இந்த சாவிய எங்க போட்டேன்!! இனி இப்படி தேடுவதற்கு அவசியமே இருக்காது... உங்க போனே காட்டி கொடுத்துடும்!!
தொலைந்த சாவியை தேடி கொடுக்கும் கருவி விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இக்கருவி குறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

காலை ஆனால் போதும் அலுவலகம் செல்லும் இளைஞர்கள் வீட்டையே ரெண்டா ஆக்கிடுவாங்க. குறிப்பாக, தங்களின் வாகனத்தின் சாவியை எங்கேயோ போட்டுவிட்டு அதனை தேடுவதற்காக அம்மா, அப்பா, தங்கை என அனைவரையும் டிடெக்டீவ் ஏஜென்டாகவே அவங்க மாத்திடுவாங்க.

இந்த மாதிரியான நபர்களுக்கு உதவும் வகையில் ஓர் கருவியை பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் அறிமுகம் செய்துள்ளது. சாவிகளுக்கான டேக்கையே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு 'ஏர் டேக்' (AirTag) எனும் பெயரை நிறுவனம் வைத்துள்ளது.

ப்ளூடூத் வசதி இந்த டேக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதனை வீட்டில் எந்த மூலையில் நாம் போட்டிருந்தாலும் ஐ-போன் வாயிலாக மிக சுலபமாக தேடி கண்டுபிடித்துவிடலாம். ஆகையால், இதுபொருத்தப்பட்ட வாகன சாவியை இரவில் நாம் எங்கு தூக்கி போட்டிருந்தாலும் காலை அதனை மிக சுலபமாக கண்டுபிடித்துவிட முடியும்.

ஐ-போன் 11 மற்றும் 12 ஆகிய இரு மாடல்களிலேயே ஏர் டேக்கினை இணைக்கும் தொழில்நுட்பத்தை ஆப்பிள் வழங்கியுள்ளது. ஆகையால், இவ்விரு லேட்டஸ்ட் ஆப்பிள் போன்களை பயன்படுத்துவோரால் மட்டுமே ஆப்பிளின் புதிய ஏர் டேக்கினை பயன்படுத்த முடியும்.

ஏர் டேக் மற்றும் ஆப்பிள் ஐ-போன் இரண்டையும் இணைக்கும் பட்சத்தில் செல்போனின் திரை வாயிலாக சாவி இருக்கும் இடத்தை துள்ளியமாக கண்டறிய முடியும். அதாவது, மேப்பில் குறிப்பிட்ட இடத்தை தேடி செல்வதுபோல் சாவி இருக்கும் இடத்தை தேடி செல்ல இக்கருவி வழிகாட்டி உதவும்.

ஆகையால் கீ செயின் போன்றிருக்கும் ஏர்டேக்கில் சாவியை இணைத்துவிட்டால் சாவியை எங்கு வைத்திருந்தாலும் எளிதில் தேடி சென்றுவிடலாம். ஆப்பிள் நிறுவனம் செல்போன் தயாரிப்பில் மட்டுமின்றி வாகன தயாரிப்பிலும் களமிறங்க இருக்கின்றது.

அதிக விலைக் கொண்ட செல்போன்களுக்கு பெயர்போன இந்நிறுவனம் விரைவில் மின் வாகன தயாரிப்பில் களமிறங்க இருப்பது அதன் விரும்பிகள் மத்தியில் இப்போதே ஆவலைத் தூண்டியிருக்கின்றது. இந்த நிலையிலேயே டிராக் செய்ய உதவும் கருவியை ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது.

சாவியைக் கண்டுபிடிக்க மட்டுமின்றி தொலைந்து போன வாகனத்தைக் கண்டறியவும் இந்த ஏர்டேக்-ஐ பயன்படுத்தலாம் என நிறுவனம் கூறியுள்ளது. இதுமட்டுமின்றி, பெரிய பார்க்கிங்கில் வாகனம் எங்கு நிறுத்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டறியவும் இந்த டிராக் செய்யும் கருவி உதவியாக இருக்கும்.

ஏப்ரல் 30ம் தேதி முதல் இந்த ஆப்பிள் ஏர்டேக் கருவி விற்பனைக்கு வர இருக்கின்றது. ரூ. 3,190 என்ற விலையில் இந்த கருவி விற்பனைக்கு வர இருக்கின்றது. அதுவே, நான்கு யூனிட் கொண்ட பேக்கினை ரூ. 10,900 என்ற விலைக்கு விற்பனை செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








