அடுத்த 2 வருஷத்துல நம் நாட்டு வானத்துல பறக்க போவது இந்த வானூர்திதான்.. என்னமா கெத்தா நிக்குது!
பறக்கும் கார்-னும் சொல்ல முடியாத, ஹெலிகாப்டர்-னும் சொல்ல முடியாத, ஏன் தற்போது நடைமுறையில் இருக்கும் எந்தவொரு வானூர்தி வகையிலும் சேராத, முற்றிலும் தனித்துவமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த வானூர்தியே விரைவில் இந்தியாவின் வான்வெளியில் பறக்கும் டாக்சியாக வட்டமடிக்க இருக்கின்றன. இந்த பிரத்யேக பறக்கும் வாகனம்குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
அரபு நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான துபாயில், துபாய் ஏர் ஷோ 2023 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வானூர்திகளுக்கான பிரத்யேக கண்காட்சி இதுவாகும். இந்த ஷோவை பயன்படுத்தி உலக நாடுகளில் உள்ள விமான உற்பத்தியாளர்கள் தங்களின் புதிய மற்றும் எதிர்கால ஏர்கிராஃப்ட்டுகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில், அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆர்சர் ஏவியேஷன் (Archer Aviation) நிறுவனமும் துபாய் ஏர் ஷோ-வில் கலந்துக் கொண்டது. இந்த பங்களிப்பின் ஒரு பகுதியாக மிட்நைட் (Midnight) எனும் ஏர் கிராஃப்டை அது காட்சியப்படுத்தியது. இது இவிடிஓஎல் (eVTOL) ரக ஏர்-கிராஃப்ட் ஆகும்.
அதாவது, செங்குத்தாக தரையிறங்கும் மற்றும் பறக்கும் திறன் கொண்ட மின்சார ஏர்கிராஃப்ட் (Electric Vertical Take-Off & Landing) ஆகும். இந்த வாகனத்தையே அமெரிக்க நிறுவனமான ஆர்சர் ஏவியேஷன் வெகு விரைவில் இந்தியாவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது. பறக்கும் டாக்சியாக இதனை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இதற்காக இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் (InterGlobe Enterprises) எனும் நிறுவனத்துடன் அது கை கோர்த்து இருக்கின்றது. இது, இந்தியாவின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ (IndiGo)வின் ஆதரிப்பில் இயங்கும் நிறுவனம் ஆகும். இந்த இரு நிறுவனங்களும் இணைந்தே இந்தியாவின் பறக்கும் கார் கனவு திட்டத்தை நிறைவேற்ற இருக்கின்றன.
நிறுவனங்களின் ஏர் டாக்சி சேவை இந்தியாவில் வரும் 2026ம் ஆண்டிற்குள் தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், வெகு விரைவில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் அல்லாத புது வகை பறக்கும் வாகனங்களை இந்திய வான்வெளியில் விரைவில் பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆர்சர் ஏவியேஷன், இந்த மிட்நைட்-க்கு விமானம் மற்றும் ஹெலிகாப்படர் ஆகிய இரண்டும் கலந்த தோற்றத்தை வழங்கி இருக்கின்றது. ஆகையால், இது வானில் பறக்கும் போது விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களின் கலவை விமானம் போலவே தென்படும். இத்தகைய ஏர் கிராஃப்டையே தற்போது துபாய் விமான ஷோவில் ஆர்சர் ஏவியேஷன் காட்சிப்படுத்தி இருக்கின்றது.
ஒட்டுமொத்தமாக 12 எலெக்ட்ரிக் புரபெல்லர்கள் றெக்கை மீது வழங்கப்பட்டு இருக்கின்றன. இவையே, மிட்நைட்டை செங்குத்தாக டேக்-ஆஃப் மற்றும் லேண்டாக உதவுகின்றன. விமானி உடன் சேர்த்து ஐந்து பேர் வரை பயணிக்கும் விதமாக இந்த வானூர்தியை தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது. இந்த வானூர்தியே விரைவில் அபுதாபி மற்றும் துபாயிலும் ஏர் டாக்சியாக பயணிக்க இருக்கின்றன.
ஏற்கனவே இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் ஹெலிகாப்டர் சேவை நிறுவனம் ஒன்று சுமார் 100 யூனிட் மிட்நைட் ஏர்கிராஃப்டிற்கான ஆர்டர்களை வழங்கி இருக்கின்றது. இதன் மதிப்பு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இந்த மிட்நைட் ஏர்கிராஃப்டின் எடை தாங்கும் திறன் என்பது 456 கிலோ ஆகும். ஓர் முழு சார்ஜில் இதனால் சூமார் 161கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், அதிகபட்சமாக 2000 அடி உயரத்தில் மணிக்கு 241 கிமீ வேகத்தில் இதனால் பறக்க முடியும். இந்தியாவில் முதல்கட்டமாக நாட்டின் தலைநகரான டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களிலேயே முதல் கட்டமாக மிட்நைட் ஏர் டாக்சி சேவைத் தொடங்கப்பட இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறப்பட்ட நகரங்களுக்கு அடுத்தபடியாகவே நாட்டின் பிற நகரங்களில் ஏர் டாக்சி சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பகா ஏர் டாக்சி சேவை இருக்கின்றது. நகரங்களின் டிராஃபிக்கான சாலைகளில் இருந்து தப்பிக்க மிக சிறந்த வழியாக இந்த பறக்கும் டாக்சிகள் இருக்கப் போகின்றன.


Click it and Unblock the Notifications









