5வருட போராட்டத்திற்கு பின் கிடைத்த ஓட்டுநர் உரிமம்.. கைகள் இல்லாத காரணத்தினால் தட்டி கழிக்கப்பட்ட கோரிக்கை!
நம்மில் சிலருக்கு விண்ணப்பித்த சில தினங்களிலேயே ஓட்டுநர் உரிமம் கிடைத்திருக்கலாம். ஆனால், கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இது மிக சவாலான ஒன்றாக அமைந்திருக்கின்றது. சொல்லப்போனால் ஐந்தாண்டுகளாக அவர் போராடி வாகனங்களை இயக்குவதற்கான உரிமத்தை அதிகாரப்பூர்வமாக அரசிடம் இருந்து பெற்றிருக்கின்றார்.
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜிலுமோல் தாமஸ். பிறவிலேயே கைகள் இல்லாமல் பிறந்தவர் இவர் ஆவார். கைகள் இல்லாமல் பிறந்ததை ஓர் தடையாக நினைத்து தன்னை முடக்கிக் கொள்ள விரும்பாத ஓர் இளம் பெண்ணும் இவர் ஆவார். இதற்கு சான்றாகவே பல ஆண்டுகளாக போராடி அவர் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றிருக்கின்றார்.

சாதாரணமாக அவர் ஓட்டுநர் உரிமத்தைப் பெறவில்லை, ஆர்டிஓ-வின் அனைத்து டெஸ்ட்டுகளிலும் தேர்ச்சி பெற்றே அவர் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றிருக்கின்றார். இந்தியாவில் மாற்று திறனாளிகளால் அவ்வளவு எளிதில் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்று முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் வாயிலாக ஓட்டுநர் அந்த இளம் பெண்ணுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
பெரும் கனவு மற்றும் முயற்சிக்கு கிடைத்த பரிசாக இது அமைந்திருக்கின்றது. ஆகையால், ஜிலுமோலால் இனி கார்களை அதிகாரப்பூர்வமாக ஓட்டிக் கொள்ள முடியும். தன்னுடைய கால்களையே அவர் கார் ஓட்ட பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். ஜிலுமோல், தனியார் நிறுவனம் ஒன்றில் கிராஃபிக் டிசனைராக பணியாற்றி வருகின்றார்.

மேலும், இவர் மிக சிறந்த கலை படைப்பாளியும் ஆவார். இந்த நிலையிலேயே அவருக்கு நீண்ட காலமாக காரை அவரே அதிகாரப்பூர்வமாக ஓட்டிச் செல்ல வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டு இருக்கின்றது. இதன் அடிப்படையில் ஓட்டுநர் உரிமத்திற்காக அவர் கேரளா எம்விடி-யை நாடி இருக்கின்றார்.
ஆனால், ஜிலுமோலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓட்டுநர் உரிமத்தைப் பெற அவர் தொடர்ச்சியாக விண்ணப்பித்த வண்ணமே இருந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையத்தை அவர் அணுகி இருக்கின்றார். ஜிலுமோலின் வழக்கை கவனத்தில் கொண்ட ஆணையம், இப்பிரச்னைக்கு தீர்வு காணுமாறு மாநில போக்குவரத்து ஆணையரிடம் கேட்டுக் கொண்டது.

இதனை அடுத்து, எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மோட்டார் வாகனத் துறை அதிகாரிகளை இந்த வழக்கை விரிவாக ஆய்வு செய்து உரிய தீர்வு காணுமாறு போக்குவரத்து ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கேரளா எம்விடி அதிகாரிகள் ஜிலுமோலின் கோரிக்கையை ஆய்வுச் செய்தனர்.
மேலும், அவருக்கு ஏற்ப, அதாவது, ஜிலுமோல் கால்களால் காரை இயக்குவதற்கான வசதிகளைக் கொண்ட காரை வடிவமைக்க பரிந்துரைத்தனர். அந்த மாற்றங்களை செய்யக் கூடிய நிறுவனத்தைக் கண்டவறிதில் பெருத்த சிக்கல் நிலவியது. இந்த நிலையிலேயே ஓராண்டு முயற்சிக்கு பின்னருக்கு ஜிலுமோலுக்கான வாகனம் தயார் செய்யப்பட்டது.

கொச்சியை தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றே 2018 மாருதி சுஸுகி செலிரியோ காரை, ஜிலுமோலுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்து தற்போது வழங்கி இருக்கின்றது. காரின் முக்கிய கன்ட்ரோல்கள் அனைத்தும் கால்களால் கட்டுப்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, சில கன்ட்ரோல்களை குரல் கட்டளையால் கட்டுப்படுத்தும் வகையிலும் அவர்கள் மாற்றிக் கொடுத்திருக்கின்றனர்.
இந்த அம்சங்களை தீவிர ஆய்விற்கு உட்படுத்திய கேரளா எம்விடி அதிகாரிகள், பின்னர் அதனை ஜிலுமோலை இயக்க வைத்தும் பார்த்தனர். அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்த பின்னரே அவருக்கான ஓட்டுநர் உரிமத்தை அதிகாரிகள் அங்கீகரித்தனர். காரின் ஆர்சி புத்தகத்திலும் மாடிஃபிகேஷன் ஏற்ற மாற்றங்களை எம்விடி செய்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அரசின் இந்த நடவடிக்கை தன்னுடைய 5 ஆண்டு கால கோரிக்கைக்கு கிடைத்த பரிசு என ஜிலுமோல் தெரிவித்து இருக்கின்றார். மேலும், ஜிலுமோலின் போராட்டத்தால் இனி வரும் நாட்களில் மற்ற மாற்றுத் திறனாளிகளால் எளிதில் ஓட்டுநர் உரிமத்தைப் பெறும் சூழல் உருவாகி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









