ஊழியர்களுக்கு இவ்ளோ விலை உயர்ந்த பரிசா! வேலைக்கு சேர எல்லாரும் போட்டி போட போறாங்க! என்ன மனுஷன்யா இந்த முதலாளி!
பாரத்பே (BharatPe) நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆஷ்னீர் க்ரோவர் (Ashneer Grover). பாரத்பே நிறுவனத்தில் இருந்து வெளியேறியதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆஷ்னீர் க்ரோவர் பரபரப்பாக பேசப்பட்டார். தற்போது புதிய நிறுவனம் ஒன்றை கட்டமைக்கும் பணிகளில், ஆஷ்னீர் க்ரோவர் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிறுவனத்திற்கு 'தேர்டு யுனிகார்ன்' (Third Unicorn) என பெயரிடப்பட்டுள்ளது.
க்ரோஃபர்ஸ் (Grofers) மற்றும் பாரத்பே ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து, இது ஆஷ்னீர் க்ரோவரின் மூன்றாவது முயற்சியாகும். எனவேதான் அவரது புதிய நிறுவனத்திற்கு தேர்டு யுனிகார்ன் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை தவிர, அவரது புதிய நிறுவனத்தை பற்றிய தகவல்கள் எதுவும் இன்னும் பெரிய அளவில் வெளியாகவில்லை. அதாவது இந்த நிறுவனம் எந்த துறையில் செயல்படும்? என்பது போன்ற விபரங்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த மாதிரி கம்பெனியில வேலை செய்யணும்!
ஆனால் வேலை செய்தால், தேர்டு யுனிகார்ன் போன்ற நிறுவனத்தில்தான் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை தற்போது அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது. தனது புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு, ஆஷ்னீர் க்ரோவர் அளித்துள்ள வாக்குறுதிதான் இதற்கு காரணம். ஆம், ஆஷ்னீர் க்ரோவரின் புதிய நிறுவனத்தின் வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு, புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) கார் வழங்கப்படவுள்ளது.
தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றினால், புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாக பெறலாம் என ஆஷ்னீர் க்ரோவர் அளித்துள்ள வாக்குறுதி தற்போது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. நிறுவனங்கள் தங்களை பாடாய்படுத்தி வருவதாக, சமூக வலை தளங்களில் ஊழியர்கள் புலம்புவதை நம்மால் அடிக்கடி காண முடியும். நிறைய நிறுவனங்கள் மீது அத்தகைய குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஆஷ்னீர் க்ரோவரின் வாக்குறுதி அதற்கு நேர்மாறாக ஊழியர்களை உற்சாகப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

என்ன மனுஷன்யா!
மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற பிரபலமான நிறுவனங்களின் விலை உயர்ந்த சொகுசு கார்களை பரிசாக வழங்குவது என்ற அறிவிப்பு கவர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால் ஆஷ்னீர் க்ரோவர் இப்படி செய்வது இது முதல் முறை அல்ல. பாரத்பே நிறுவனத்தில் அவர் இருந்தபோது ஊழியர்களுக்கு விலை உயர்ந்த பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார். பிஎம்டபிள்யூ (BMW), கேடிஎம் (KTM) மற்றும் ராயல் என்பீல்டு (Royal Enfield) போன்ற நிறுவனங்களின் பைக்குகளை அவர் ஊழியர்களுக்கு பரிசளித்துள்ளார்.
சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக, இந்த விலை உயர்ந்த பைக்குகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்த செய்தி வெளியான உடனேயே, இன்னும் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு சொகுசு கார்கள் மற்றும் பைக்குகளை பரிசாக வழங்க தொடங்கின என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இப்படி மற்றவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் ஆஷ்னீர் க்ரோவரும் கார் ரசிகர்தான் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
சொகுசு கார் கலெக்ஸன்!
ஆஷ்னீர் க்ரோவரிடம், மெர்சிடிஸ் மேபேக் எஸ்-க்ளாஸ் (Mercedes Maybach S-Class), மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் எஸ்யூவி (Mercedes Benz GLS SUV) மற்றும் போர்ஷே கேமேன் (Porsche Cayman) மற்றும் ஆடி ஏ6 (Audi A6) ஆகிய கார்கள் இருக்கின்றன. இதுதவிர ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) போன்ற சாதாரண கார்களும் கூட ஆஷ்னீர் க்ரோவரிடம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வெள்ளை நிற கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும்.
தமிழ் நாட்டிலும்!
இதற்கிடையே தீபாவளி போன்ற பண்டிகைகளை முன்னிட்டும் கூட தற்போது நிறைய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு, கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களை பரிசாக வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் வந்த தீபாவளி பண்டிகையின்போதும் கூட, இதுபோன்ற நிகழ்வுகளை நம்மால் காண முடிந்தது. குறிப்பாக தமிழ் நாட்டிலும் இத்தகைய நிகழ்வுகள் அரங்கேறியது சுவாரஸ்யமான ஒரு விஷயம்தான்.


Click it and Unblock the Notifications








