தமிழக அரசின் ஆர்டரை தட்டி தூக்கிய அசோக் லேலண்ட் நிறுவனம்! 552 பஸ்கள் ரெடியாகுது!
அசோக் லேலண்ட் நிறுவனம் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்திலிருந்து 552 தாழ்தள சொகுசு பேருந்துகளுக்கான ஆர்டரை பெற்றுள்ளது. இதன்படி இந்த பேருந்துகள் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
அசோக் லேலண்ட் நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக நம்பகத் தன்மை கொண்ட கனரக வாகனங்களை தயாரிக்கும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரித்த ஏகப்பட்ட பஸ்கள் தற்போது இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை தயாரிக்கும் பெயர் பெற்ற நிறுவனமாக இருக்கிறது.

இந்நிலையில் தமிழக அரசு தமிழ்நாடு போக்குவரத்து கழக பயன்பாட்டிற்காக புதிதாக 552 தாழ்தள டீசல் இன்ஜின் கொண்ட ஏசி அல்லாத பஸ்களை வாங்க முடிவு செய்தது. அனைவருக்குமான போக்குவரத்து என்ற திட்டத்தின் கீழ் இந்த பஸ்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதற்காக அறிவிப்பையும் வெளியிட்டு இருந்தது இந்நிலையில் தற்போது அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு இதற்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 18,477 பஸ்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது புதிதாக 525 பஸ்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்த பஸ்களுக்கான வரைமுறைகள், எப்படியாக இந்த பஸ்களை கட்டமைக்கப்பட வேண்டும், என இதில் உள்ள தொழில்நுட்ப அம்சங்கள் எல்லாம் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி போட்டண்ட் எச் சீரிஸ் 6 சிலிண்டர் 4 வால்வு கொண்ட 184 கிலோ வாட் அல்லது 246 எச்பி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்ட பஸ்சாக இது இருக்க வேண்டும், படி அல்லாத தாழ்தள கட்டமைப்பு கொண்ட பஸ்சாக இருக்க வேண்டும். பின்பக்க இன்ஜின் கொண்டதாகவும்,ஆட்டோமேட்டிக் கியர்,
முன்பக்க வீலில் டிஸ்க் பிரேக்,எலெக்ட்ரானிக் மூலம் கண்ட்ரோல் செய்யக்கூடிய முன்பக்க பின்பக்க சஸ்பென்ஷன், இன்டெலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு சிசிடிவி கேமராவுடன் இணைக்கப்பட்ட வசதிகள், ஜிபிஎஸ் மற்றும் லோகேஷன் டிராக்கர் வசதி கொண்ட பஸ்ஸாக இது கட்டமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசோக் லேலாண்ட் நிறுவனம் இந்த பஸ்களை எல்லாம் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திலும் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பஸ்கள் நீண்ட காலம் உழைக்கும் வகையில் தயார் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்நிறுவனம் தயாரிக்கும் பஸ்கள் நீண்ட கால உழைப்பிற்கு பெயர் பெற்றது என்பதால் இந்த ஆர்டர் அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
தாழ்தள பஸ்கள் இந்தியாவில் உள்ள பஸ் துறையின் கட்டமைப்பையே மாற்றி உள்ளது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் சுலபமான வகையில் ஏறி இறங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காகவும் அதே நேரம் பாதுகாப்புக்காகவும் இந்த பஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ரக பஸ் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பஸ் முதன் முதலாக சென்னை நகரப் பேருந்துகளுக்காக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள மற்ற மாநகராட்சி பகுதிகளான சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த பஸ்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது உள்நகர பயன்பாட்டிற்கான பஸ்களாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பஸ்களுக்கான விலை குறித்த விபரங்கள் இதுவரை வெளியில் வரவில்லை. நிச்சயம் பல கோடிக்கணக்கிலான மதிப்பில் தான் இந்த ஆர்டரை அசோக் லேலண்ட் நிறுவனம் பெற்று இருக்கும். இந்த செய்தி வெளியானவுடன் சந்தையில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக போக்குவரத்துக் கழகம் தாழ்தள பஸ்களை உள்நகர பயன்பாட்டுக்காக வாங்குகிறது. இதை டீசல் இன்ஜின் கொண்ட பஸ்களாக வாங்கி பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. டீசல் இன்ஜின் என்பது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. இதற்கு பதிலாக எலெக்ட்ரிக் பஸ்களை தமிழக அரசு தேர்வு செய்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications









