தொடங்கியது விங்ஸ் இந்தியா 2022! ஆசியாவின் மாபெரும் விமான கண்காட்சி... எங்கு? எத்தனை நாட்கள் நடைபெறுகிறது?
ஆசியாவின் மிக முக்கியமான விமான கண்காட்சிகளில் ஒன்றான விங்ஸ் இந்தியா 2022 (Wings India 2022) ஹைதராபாத்தில் இன்று தொடங்கியது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 'விங்க்ஸ் இந்தியா' (Wings India 2022) விமான கண்காட்சி இன்று தொடங்கியிருக்கின்றது. தெலங்கானா மாநிலம், ஹைதரபாத்தில் உள்ள பேகம்பேகட் விமான நிலையத்தில் இதற்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கே 2022ம் ஆண்டிற்கான ஆசியாவின் மிகப் பெரிய சிவில் விமானப் போக்குவரத்து நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வை, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் எஃப்ஐசிசிஐ (Federation of Indian Chambers of Commerce & Indian Industry) ஆகியவை இணைந்தே நடத்த இருக்கின்றன. இந்த நிகழ்வில் விமானப் போக்குவரத்துத் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் தங்களின் புதுமுக விமானங்களை காட்சிப்படுத்தும்.

ஏற்கனவே சில விமான நிறுவனங்கள் தங்களின் புதுமையான தொழில்நுட்பம் மற்றும் எந்திரங்களைக் கொண்ட விமானங்களை விங்ஸ் இந்தியா 2022-வில் காட்சிப்படுத்த இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. அந்தவகையில், பிரபல விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ், அதன் ஏர்பஸ் ஏ350-ஐ காட்சிப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

ஏர்பஸ் ஏ350 நிலையான நீண்ட தூர பயணங்களுக்கு உகந்த விமானம் ஆகும். இத்துடன் சேர்த்து சிங்கிள் ஐசில் விமானமான ஏ220 கான்செப்டையும் அது காட்சிப்படுத்த இருக்கின்றது. 100 முதல் 160 இருக்கைகள் வரை விரும்பும் சந்தைக்கு ஏற்ற விமானமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

அதேவேலையில், ஓர் நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கவும் இந்த விமானம் பெரும் உதவியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, ஏர்பஸ் ஹெலிகாப்டர்களும் விங்ஸ் இந்தியா 2022 நிகழ்வில் காட்சி தர இருக்கின்றன. நிறுவனத்தின் ஏசிஎச்130 ஹெலிகாப்டரின் ஸ்கேல் மாடலும், மல்டி ரோல் வசதிக் கொண்ட எச்160 ஆகியவை காட்சிப்படுத்த இருக்கின்றன.

விமான கண்காட்சி மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற இருக்கின்றது. அதாவது, இன்று (மார்ச் 24) தொடங்கி வரும் ஞாயிறு (மார்ச் 27) வரை நடைபெற இருக்கின்றது. இதில், முதல் இரண்டு நாட்கள் வாங்குவோர்கள், விற்பனையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோரின் வணிக விவாதத்திற்கும், மீதமுள்ள இரண்டு நாட்கள் பொதுமக்கள் பார்வைக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆகையால், மார்ச் 26-27 வெகு விமரிசையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த நாளில் ஏர்பஸ் நிறுவனம் மீட்-அண்ட்-கிரீட் எனும் பெயரில் ஆட்சேர்ப்பு பணியை மேற்கொள்ள இருக்கின்றது. நிறுவனத்திற்கு தேவையான இன்ஜினியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் இதன் வாயிலாக தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

ஏர்பஸ் நிறுவனத்தின் விமானங்கள் மட்டுமின்றி எம்ப்ரேயர் (Embraer) நிறுவனமும் அதன் வர்த்த விமானங்கள் சிலவற்றைக் காட்சிப்படுத்த இருக்கின்றது. அது இ195-இ12 (E195-E2) எனும் விமானத்தைக் காட்சிப்படுத்த இருக்கின்றது. இ ஜெட் எனும் வரிசையில் தயாரிக்கப்படும் மிக முக்கியமான விமானமாக இது காட்சியளிக்கின்றது. இ-ஜெட் விமானங்கள் பிரேசில் சந்தைக்கு உகந்தவாறு 146 இருக்கைகளைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

விங்ஸ் இந்தியா 2022 நிகழ்வில் விமான கண்காட்சி மட்டுமின்றி இந்திய விமானப்படையின் சாரங் குழுவின் விமான சாகச நிகழ்வும் நடைபெற இருக்கின்றது. இத்துடன், பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றது. விங்ஸ் இந்தியா 2022 விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றது.

எனவே இந்த நிகழ்வில் உலக நாடுகள் சிலவற்றின் முக்கிய உயரதிகாரிகள், தூதர்கள், விமான நிறுவனங்கள், விமான நிலைய ஆபரேட்டர்கள், விமான நிலைய ஏஜென்சிகள், சிவில் ஏவியேஷன் அதிகாரிகள், ஆலோசகர்கள், விமானி என விமானத் துறைச் சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனர்.
குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








