பென்ஸுக்காக காத்திருப்பதில்லை... ஆட்டோரிக்ஷாவில் பயணிக்கும் அஸிம் பிரேம்ஜி
உல்லாச வாழ்க்கைகாக பல ஆயிரம் கோடிகளை கபளீகரம் செய்து கொண்டு தலைமறைவான விஜய் மல்லையா போன்றோரின் செயல்கள் வெட்கக்கேடாக உள்ளன. மல்லையா போன்ற வேறு சிலரும் தொழிலதிபர் போர்வையில், பல ஆயிரம் கோடிகளை ஏமாற்றி வெளிநாட்டில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பல பில்லியன் சொத்துக்களை வைத்திருந்தும் சிலர் நேர்மையாகவும், எளிமையாகவும் வாழ முற்படுவதோடு, பலருக்கும் முன்னுதாராணமாக விளங்குகின்றனர். அதில் ஒருவர்தான் விப்ரோ நிறுவனத்தின் அதிபர் அஸிம் பிரேம்ஜி. இந்திய சாஃப்ட்வேர் துறை வளர்ச்சியின் மிக முக்கிய நபரும், நம் நாட்டின் மூன்றாவது பெரும் பணக்காரருமான அஸிம் பிரேம்ஜியின் சொத்துக்கணக்கை பார்த்தால், அம்பானி போல் அவரிடம் பல நூறு கார்கள் இருக்கும் என்று எண்ணத் தோன்றுவது இயல்வு. அப்படி நினைத்து அவரது கார் கராஜை அணுகினால் அது பொய்த்து போனது.

விப்ரோ நாயகன்
விப்ரோ எனும் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தின் சூத்திரதாரியான அஸிம் பிரேம்ஜி இயற்கையிலேயே வர்த்தக அனுபவம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவர்தான். ஆனாலும், தனது சொந்த வாழ்விலும், பொது வாழ்விலும் மிக எளிமையான மனிதராக வலம் வருகிறார்.

வாகனங்கள்...
இதற்கு அவர் பயன்படுத்தும் வாகனங்களே உதாரணமாக அமைகின்றன. மல்லையாக்களை பற்றி எழுதுவதை காட்டிலும் இதுபோன்றவர்களின் எளிமையை பார்த்தாவது, ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை அடகு வைக்கும் பலருக்கு பாடமாக அமைகிறது.

ஓல்டு மாடல் சிட்டி
அஸிம் பிரேம்ஜி பல ஆண்டு காலமாக பழைய ஹோண்டா சிட்டி கார் ஒன்றை பயன்படுத்தி வந்தார். அந்த கார் பழமையாகிவிட்டதால், அதனை கொடுத்துவிட்டு, புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி கொள்ளுமாறு அவரது நலம் விரும்பிகள் கேட்டுக் கொண்டனர்.

கரொல்லாவும் உண்டு
ஹோண்டா சிட்டி தவிர்த்து, அவரிடம் டொயோட்டா கரொல்லாவும் இருந்தது. இந்த இரு கார்களையும் அவர் பயன்படுத்துவது வழக்கமாக வைத்திருந்தார்.

செய்த காரியம்
நண்பர்களின் நெருக்குதல் ஒருபுறம், கார் பழமையாகிவிட்ட காரணம் மறுபுறம் என வேறு கார் வாங்க முடிவு செய்த அவர், புதிதாக சொகுசு காரை வாங்கிவிடுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நடந்ததோ வேறு. நேராக சென்று செகண்ட் ஹேண்ட் பென்ஸ் கார் ஒன்றை வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

பென்ஸ் சி கிளாஸ்
செகண்ட் ஹேண்ட்டில் சொகுசு காரை வாங்கியதோடு மட்டுமல்ல, விமானத்தில் பயணிக்கும்போது சாதாரண வகுப்பில்தான் பயணிப்பதை விரும்புகிறார். பெரும்பாலும் எக்கானமி கிளாஸ் வகுப்பிலேயே பயணம் செய்கிறார். இவரைவிட பல மடங்கு குறைவான பணம் படைத்தோர் எல்லாம் உயர் வகுப்புகளில் பயணிக்கும்போது, இவர் பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

ஆட்டோரிக்ஷாவிலும்...
சில வேளைகளில் விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பும்போது, ஆட்டோ ரிக்ஷாவில் கூட பயணிக்க தயங்கியதில்லையாம். அவருக்கு இணையான பெரும் கோடீஸ்வரர்கள், சொகுசு கார் வந்தால்தான் செல்வேன் என்று பல மணிநேரம் விமான நிலையத்தில் காத்திருந்த கதைகள் இங்கு ஏராளம்.

எளிமையான மனிதர்
உயர்வகை பிராண்டட் ஆடைகளையே அணிய வேண்டும் என்று விரும்பமாட்டார். சாதாரண பிராண்டு கோட் ஷூட்டுகளை அவர் அணிவதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், விப்ரோ அலுவலகங்களில் டாய்லெட்டில் வைக்கப்படும் டிஸ்யூ பேப்பரை கூட யாரேனும் அனாவசியமாக பயன்படுத்துவதை கவனிக்குமாறு அட்மின் பிரிவுக்கு அவ்வப்போது அறிவுரை வழங்குவாராம்.

வள்ளல் குணம்
2001ம் ஆண்டில் அறக்கட்டளை ஒன்றை நிறுவியதுடன், ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வியளிப்பதற்காக ஏராளமான நன்கொடையை வழங்கியிருக்கிறார். மேலும், தனது சொத்தில் 25 சதவீதத்தை தனது அறக்கட்டளைக்காக வழங்கியிருக்கிறார். இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் வித்தியாசமானவராக விளங்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications








