திருடிய காரை திருப்பி கொடுத்துவிடுவோம் என கூறிய திருடர்களின் கதை இப்படிதான் முடிந்தது... போலீஸ்னா இதுதான்!!
3 நாட்களில் காரை திருப்பி கொடுத்து விடுவோம் என கூறிவிட்டு காரை திருடி சென்ற திருடர்களை போலீஸார் பல்வேறு துரத்தல்களுக்கு பிறகு பிடித்துள்ளனர். அசாமில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தை பற்றிய முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
காரை திருடி விட்டு, அதனை விரைவில் 3 நாட்களில் திருப்பி கொடுத்துவிடுவதாக திருடர்கள் எழுதி வைத்துவிட்டு சென்ற செய்தியை சில வாரங்களுக்கு முன் உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள். கேள்விப்படாதவர்களுக்காக மீண்டும் ஒருமுறை அந்த விஷயத்தை கூறுகிறேன். கடந்த ஏப்ரல் மாத இறுதியில், அசாம் மாநிலத்தில் திருடன் ஒருவன் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரை திருடி விட்டு, அதன் உரிமையாளருக்கு கடிதம் ஒன்றை விட்டு சென்றான்.

அதனை பிரித்து படித்த உரிமையாளர், திருடிய காரை சில நாட்களில் திருப்பி கொடுத்துவிடுவதாக திருடன் எழுதி வைத்து விட்டு சென்றதை கண்டு சிரிப்பதா அல்லது அழுவதா என புரியாமல் நின்றார். ஏனெனில் இவ்வாறான கடிதத்தை நிச்சயமாக திருடனிடம் இருந்து அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். இதை விட குழப்பம் என்னவென்றால், இதுகுறித்து போலீஸில் புகார் அளிப்பதா அல்லது சொன்னப்படி திருடன் காரை மீண்டும் கொண்டுவந்து கொடுத்து விடுவான் என நம்பி புகார் வேண்டாமா என்பதுதான்.
ஆனால் அப்துல் அஸிஸ் என பெயர் கொண்ட இந்த பிரெஸ்ஸா கார் உரிமையாளர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துவிட்டார். காருடன் வீட்டில் இருந்த பணமும் காணாமல் போய் உள்ளதாக அஸிஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஸிஸின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார் அடுத்த சில நாட்களிலேயே இந்த கார் திருட்டு செயலில் ஈடுப்பட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்துவிட்டனர்.
இந்த நிலையில் தற்போது, அந்த திருடர்கள் எவ்வாறு போலீஸாரால் சேஸ் செய்யப்பட்டு பிடிப்பட்டனர் என்பதை காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் திரைப்பட காட்சிகளை மிஞ்சும் அந்த கார் சேசிங் காட்சிகளை கீழே வீடியோவில் காணலாம். வீடியோவில், போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக மற்ற வாகனங்களுடன் திருடன் தனது காரை மோதிக் கொண்டு செல்வதையும் காணலாம்.
ஆனால் ஒருவழியாக திருடர்களை கடுமையான முயற்சிகளுக்கு பின் சுற்றி வளைத்து போலீஸார் பிடித்துள்ளனர். ஆனால் ஒன்று, இந்த சேசிங்கில் சேதாரமாகியது, கார் காணவில்லை என புகார் அளித்த அஸிஸின் பிரெஸ்ஸா கார் ஆகும். போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முடியாது என அறிந்த திருடர்கள் தாங்கள் இயக்கி வந்த திருட்டு பிரெஸ்ஸா காரை குப்பை போல் ஓர் புதருக்கு அருகே நிறுத்திவிட்டு தப்பித்து செல்ல முயன்றுள்ளனர்.
ஆனால் அதற்குள்ளாக போலீஸார் காரில் இருந்து தப்பிக்க முயன்ற அனைவரையும் மடக்கி பிடித்துவிட்டனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பிரெஸ்ஸா காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் திருடப்பட்டது, கடந்த 2022ஆம் ஆண்டில் புத்தம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் ஆகும். இதற்கு முன்னர் விட்டாரா பிரெஸ்ஸா மாடல் விற்பனையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: திருடர்களாவது சொன்னப்படி 3 நாட்களில் காரை கொடுத்து இருப்பார்கள், போலீஸாரிடம் சென்றதால் கார் அப்பளம் போல் கிடைத்துள்ளதே என உரிமையாளர் அஸிஸ் மனதிற்குள் குமுறினாலும், காரை திருடர்கள் சொன்னப்படி திருப்பி தரவில்லை என்றால் என்ன செய்திருக்க முடியும்? என தன்னை தானே கேள்வி கேட்டு கொண்டு இந்த விஷயத்தில் இருந்து நகர்ந்து செல்வதுதான் ஒரே வழி.


Click it and Unblock the Notifications