சூப்பர் கண்டுபிடிப்பு... சிக்கன் கழிவுகளில் இருந்து பயோ டீசல்... விலை எவ்ளோனு தெரியுமா?
சிக்கன் கழிவுகளில் இருந்து பயோ டீசல் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சுமார் 7 ஆண்டு கால காத்திருப்பிற்கு பிறகு, கால்நடை மருத்துவரான ஜான் ஆபிரகாம் என்பவர், இறுதியாக சிக்கன் கழிவுகளில் இருந்து கண்டறியப்பட்ட பயோ டீசலுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இந்த பயோ டீசல் ஒரு லிட்டருக்கு 38 கிலோ மீட்டருக்கும் மேல் மைலேஜ் தரும். தற்போதைய நிலையில் விற்பனை செய்யப்படும் டீசலின் விலை 40 சதவீதம் மட்டுமே இந்த பயோ டீசலின் விலை இருக்கும்.

இந்த பயோ டீசல் சுற்றுச்சூழலை மாசுபாட்டை குறைக்கும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். சுமார் 7 ஆண்டு காலம் போராடிய பிறகு, இந்திய காப்புரிமை அலுவலகம், சிக்கன் கழிவுகளில் இருந்து கண்டறியப்பட்ட பயோ டீசலுக்கு காப்புரிமை வழங்கியுள்ளது. கடந்த ஜூலை 7ம் தேதி காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

கேரளா கால்நடை பல்கலைகழகத்திற்கு உட்பட்ட வயநாடு கால்நடை கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி வரும் ஜான் ஆபிரகாம் என்பவர்தான் இந்த பயோ டீசலை கண்டறிந்துள்ளார். இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், தமிழ்நாடு கால்நடை பல்கலைகழகத்திற்கு உட்பட்டு நாமக்கல்லில் இயங்கி வரும் கால்நடை கல்லூரியில் இருந்துதான் இந்த கண்டுபிடிப்பு வந்துள்ளது.

ஆம், ஜான் ஆபிரகாம் தனது ஆராய்ச்சி படிப்பை அங்கு மேற்கொண்ட போதில் இருந்தே இந்த கண்டுபிடிப்பை உருவாக்கி வந்தார். கடந்த 2009-12 காலகட்டத்தில், நாமக்கல்லில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டபோதில் இருந்தே, ஜான் ஆபிரகாம் இந்த பயோ டீசலை உருவாக்கி வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆராய்ச்சி படிப்பிற்கு பிறகு, கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள கால்நடை கல்லூரியில் அவர் சேர்ந்தார். இதை தொடர்ந்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கொச்சி பிரிவு, இந்த பயோ டீசலுக்கு தர சான்றிதழ் வழங்கியது. இதன்பின் கல்லூரியின் வாகனம் ஒன்று இந்த பயோ டீசலிலேயே இயக்கப்பட்டது. ஜான் ஆபிரகாமும் அவரது மாணவர்கள் மூன்று பேரும் தற்போது பன்றி கழிவுகளில் இருந்து பயோ டீசலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பயோ டீசல் இன்ஜின் செயல்திறனையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயோ டீசல் சைவ எண்ணெய் வாசத்தை கொண்டிருக்கும் எனவும், தற்போது விற்பனை செய்யப்படும் டீசலை போன்ற நிறத்தில் இருக்கும் எனவும் ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார். இந்த செய்தி வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் இந்தியாவில் தற்போது டீசலின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் குறைந்த விலையில் டீசல் கிடைத்தால் அது நிச்சயம் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கும். அத்துடன் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும் இந்த பயோ டீசல் உதவி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடும், சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் பயன்பாடும் தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








