மத்திய அரசின் ஃபேம் திட்டத்தின்கீழ் மானியம் பெறும் ஏத்தர் 450: எவ்வளவு மானியம் பெறுகிறது தெரியுமா...
ஃபேம்2 திட்டத்தின் கீழ் ஏத்தர் நிறுவனத்தின் ஏத்தர்450 மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 22,000 முதல் ரூ. 27,000 வரை மானியம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஃபேம் என்ற திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் மின் வாகனங்களுக்கு மானியம் வழங்குதல் உட்பட பல்வேறு சேவைகளை அரசு செய்து வருகின்றது.

இத்திட்டம் முதல் கட்டமாக ஃபேம் 1 என்ற பெயரில் கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது நடப்பாண்டின் மார்ச் மாதத்துடன் நிறைவடைந்தது. இதனால், இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமான ஃபேம் 2 திட்டத்தினை மத்திய அரசு நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்தில் தொடங்கியது.

இந்த முறை செயல்பாட்டுக்கு வந்துள்ள ஃபேம் 2 திட்டத்தின் விதிகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்காரணமாக, சாதாரண பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், அதிகளவிலான பேட்டரி கெபாசிட்டியைக் கொண்டிருக்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், ஃபேம் 2 திட்டத்தின்கீழ் ஏதர் நிறுவனத்தின் 450 ஸ்கூட்டருக்கு மானியம் கிடைப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிறுவனம், இரண்டு வகையிலான மின் ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்து வருகிறது. இருப்பினும், ஃபேம் 2 திட்டத்தின்கீழ் மானியம் பெறுவதற்காக ஏத்தர் 450 மாடலுக்கு மட்டுமே விண்ணப்பித்திருந்தது.

ஏனென்றால், ஏத்தர் நிறுவனத்தின் இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், 450 மாடலுக்கு மட்டுமே மக்களிடையே அமோகமான வரவேற்பு கிடைத்து வருகின்றது. அதேசமயம், 340 மாடலுக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆகையால், அந்த நிறுவனம் 450 மாடலின் விற்பனையை மட்டும் கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அந்தவகையில், ஏத்தர் ஸ்கூட்டரின் விலையில் இருந்து ரூ. 22 ஆயிரம் முதல் ரூ. 27 ஆயிரம் வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏத்தர் 340 மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ. 1.23 லட்சமாக இருக்கின்றது. அதேபோன்று, ஏத்தர் 450 மாடலின் விலை ரூ. 1.28 லட்சமாக உள்ளது. இவை இரண்டின் ஆன்-ரோடு விலையை கணக்கில் கொண்டு மானியம் வழங்கப்பட உள்ளது.

ஏத்தர் நிறுவனத்தின் இந்த இரு ஸ்கூட்டர்களும், வடிவமைப்பு மற்றும் ஃப்ரேம் ஆகியவற்றில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஆனால், இவை சிறப்பம்சங்களிலும், செயல்திறனிலும் வேறுபட்டு காணப்படுகின்றன. இதன்காரணமாகவே, ஏத்தர் 340 மாடலைக் காட்டிலும் 450 மாடலுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

இந்த இரண்டு ஸ்கூட்டர்களிலும் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இத்துடன், ஸ்மார்ட்போன் இணைப்பு, நேவிகேஷன் வசதி, பார்க்கிங் அசிஸ்ட், சார்ஜ் நிலையங்கள் இருக்கும் இடத்தை காண்பிக்கும் வகையில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

ஏத்தரின் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் பிரஷ்லெஸ் டிசி மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஏத்தர் 340 ஸ்கூட்டரில் 1.92 KWh பேட்டரியும், ஏத்தர் 450 மாடலில் 2.4KWh பேட்டரியும் பொருத்தப்பட்டு உள்ளது. அதிக திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டுள்ள 450 மாடலின் ரேஞ்ச் எனப்படும் பயணிக்கும் தூரம் அதிகம் என்பதுடன், அதிகபட்ச வேகமும் கூடுதலாக இருப்பது முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து, ஈக்கோ மோடில் வைத்து ஓட்டினால் 75 கிமீ தூரமும், சாதாரண மோடில் வைத்து ஓட்டும்போது 60 கிமீ தூரமும் பயணிக்க முடியும். ஏத்தர் 340 மாடல் ஈக்கோ மோடில் 60 கிமீ தூரமும், சாதாரண நிலையில் 50 கிமீ தூரமும் பயணிக்கும்.


Click it and Unblock the Notifications








