சூப்பர்... கொரோனா வைரஸிடம் இருந்து உலகை காக்க களமிறங்கிய கார் நிறுவனங்கள்... எப்படினு தெரியுமா?
கொரோனா வைரஸிடம் இருந்து உலகை காப்பாற்றுவதற்கு, கார் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கோவிட்-19 வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது உலக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ் தாக்கி, உலகம் முழுவதும் தற்போது வரை 64,973 பேர் உயிரிழந்துள்ளனர். சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கோவிட்-19 வைரஸால், உலகம் முழுவதும் தற்போது வரை 12,05,801 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வரும் நாட்களில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதே சமயம் 2,47,954 பேர் கோவிட்-19 வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இது ஒன்றுதான் உலகிற்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. ஆனால் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே வருவதால், உலகின் பெரும்பாலான நாடுகள் தற்போது முடங்கியுள்ளன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை.

கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய, உலகின் முன்னணி தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் முன்வந்துள்ளனர். அதேபோல் கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில், உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ளன.

கோவிட்-19 வைரஸ் எதிரொலியால், தற்போது வாகன விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. மேலும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டு, வாகன உற்பத்தி முடங்கியுள்ளது. ஆனால் வாகன உற்பத்திக்கு பதிலாக, மருத்துவ உபகரணங்களை தயாரித்து வழங்குவதற்கு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

குறிப்பாக வென்டிலேட்டர்களை அதிகளவில் தயாரிப்பதில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. நோயாளிகளின் சுவாச மண்டலத்தில், கோவிட்-19 வைரஸ் பாதிப்பை ஏற்படுத்துவதால், தற்போது வென்டிலேட்டர்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், வென்டிலேட்டர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.

உலக வல்லரசான அமெரிக்காவிலேயே வென்டிலேட்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே டெஸ்லா, ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு ஆகிய ஆட்டோமொபைல் உலகின் ஜாம்பவான்கள் உயிர் காக்கும் வென்டிலேட்டர் கருவிகளை தயாரிக்கும் பணியில் களமிறங்கியுள்ளன. அத்துடன் தேவைப்படும் மற்ற மருத்துவ உபகரணங்களை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணியில் களமிறங்கியுள்ளன. உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிகவும் முக்கியமான வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரித்து அரசுகளுக்கு உதவி வருவதுடன், கொரோனா வைரசுக்கு எதிரான போருக்கு, நிதியுதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன.

இதன்படி லக்ஸரி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஆடி, கோவிட்-19 வைரசுக்கு எதிரான போருக்கு, 5 மில்லியன் யூரோவை நன்கொடையாக அள்ளி கொடுத்துள்ளது. கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்கு, உலக அளவில் அரசாங்கங்கள் மற்றும் சுகாதார துறையினருக்கு உதவும் வகையில், 5 மில்லியன் யூரோவை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஆடி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆடி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. இந்தியாவை பொறுத்தவரை டாடா குழுமத்தின் சார்பில், 1,500 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர முன்னணி தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்பட மக்கள் பலரும் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








