உலோக தடுப்புக்குள் சொருகிய ஆடி ஏ3 சொகுசு கார்... மும்பை அருகே கோர விபத்து!
மும்பை அருகே ஆடி ஏ3 சொகுசு கார் ஒன்று படு கோரமான விபத்தில் சிக்கியிருக்கிறது. பார்ப்போர் மனதை நடுங்க செய்யும் இந்த விபத்தை இளைஞர் ஒருவர் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சாலை ஓரத்தில் இருந்த பாதுகாப்பற்ற முறையில் நீட்டிக் கொண்டிருந்த உலோக தடுப்புக்குள் அதிவேகத்தில் வந்த ஆடி கார் கட்டுப்பாட்டை இழந்து சொருகிவிட்டது.

காரின் முன்புற கண்ணாடியின் நடுவில் புகுந்த அந்த உலோக தடுப்பு கண் இமைக்கும் நேரத்தில் பின்புற கண்ணாடியை உடைத்து நீட்டிக் கொண்டு நிற்கிறது. அதிவேகமாக வந்ததும், அபாயகரமாக இந்த இந்த உலோக தடுப்பு நீட்டிக் கொண்டிருந்ததும் விபத்துக்கு காரணங்களாக கருதப்படுகிறது.

மேலும், அதிக பாதுகாப்பு வசதிகள் நிறைந்த இந்த காரை ஓட்டுனர் கட்டுப்படுத்தி விபத்தை தவிர்த்திருக்க முடியும். ஆனால், ஓட்டுனரின் கவனக்குறைவும், அதிவேகமும் காரணங்களாக இருக்கலாம். இந்த காரில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் இல்லை.

ஏனெனில், விபத்து நடந்து சிறிது நேரத்திற்கு பின்னர் அவ்வழியாக சென்ற இளைஞர்தான் இந்த விபத்தை படமெடுத்து பகிர்ந்து கொண்டிருக்கிறார். எது எப்படியிருப்பினும், இந்திய சாலைகள் எவ்வளவு அபாயகரமானவை என்பதை காட்டும் விதமாக இந்த விபத்து நடந்துள்ளது.

அதேபோன்று, எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரை ஓட்டினாலும், கவனக்குறைவும் இதுபோன்ற கோரமான விபத்துக்களுக்கு காரணமாகிவிடுகின்றது. குறிப்பாக, நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் செல்வோர் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

இமை பொழுதுகூட கவனக்குறைவு இல்லாமல் வாகனங்களை செலுத்துவதும், நிதான வேகத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் இந்த படங்கள் நமக்கு பாடமாக உணர்த்துகின்றன.


Click it and Unblock the Notifications