தீயணைப்பு நடவடிக்கையில் ரோபோவை ஈடுபடுத்தும் ஆஸ்திரேலியா!
இனி தீயணைப்பு நடவடிக்கையில் ஆஸ்திரேலியா ஹை-டெக் யுகத்திற்கு மாறுகிறது. தீயணைப்பு நடவடிக்கையில், மனிதர்களுக்கு பதில், ரோபோக்களை ஈடுபடுத்தும் முயற்சியை அந்நாடு அறிமுகம் செய்துள்ளது.
அந்நாட்டின் நியூ சவுத் லேல்ஸ் மாகாணத் தலைநகர் சிட்னியில் நடந்த நிகழ்ச்சியில், தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுத்துவதற்கான ரோபோவை அந்நாட்டு அவசர சேவை மற்றும் மீட்புப் பணிகளுக்கான துறை அமைச்சர் டேவிட் எலியாட் அறிமுகம் செய்தார். இந்த ஹை-டெக் ரோபோ குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

உயிரிழப்பு
தீயணைப்பு மற்றும் தீயில் சி்க்கியவர்களை மீட்கும் நடவடிக்கையின்போது, மீட்புப் படையினரின் உயிருக்கு அதிக ஆபத்து எழுகிறது. இதனை தவிர்க்கும் விதத்தில், இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர்.

வடிவமைப்பு
இந்த ரோபோவை தீப்பிடிக்காத பொருட்களை கொண்டு வடிவமைத்துள்ளனர். எனவே, தீப்பிடித்த பகுதிகளில் மிக நெருக்கமாக சென்று தீயணைப்புப் பணிகளில் ஈடுபடுத்த முடியும்.

திறன்
இந்த ரோபோவில் பொருத்தப்பட்டிருக்கும், கம்ப்ரஸர் மூலமாக 295 அடி தூரத்துக்கு தண்ணீரை பீய்ச்சி அடிக்க முடியும். அதேபோன்று, 197 அடி தூரத்துக்கு நுரையை பாய்ச்சி தெளிக்க முடியும்.

டர்பைன்
இந்த ரோபோவில் மேலே பொருத்தப்பட்டிருக்கும் டர்பைன் ஃபேன் மூலமாக, தீயணைப்பு பவுடர்களை அறைக்குள் செலுத்தி, தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

புகையை போக்கும்
தீ விபத்தின்போது அறைகளில் பரவும் புகை மூட்டத்தை ஒரே மூச்சில் போக்கிவிடும் திறன் கொண்டது. இதன்மூலமாக, அறைகளில் சிக்கியிருப்பவர்கள், மூச்சுத் திணறி உயிரிழப்பதை தவிர்க்க முடியும்.

ரிமோட் கன்ட்ரோல்
இந்த ரோபோவை 500 மீட்டருக்கு அப்பால் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலமாக இயக்க முடியும். எனவே, தீயின் வேகத்துக்கு ஈடுகொடுத்து மனிதர்கள் நெருங்க முடியாத பகுதிகளுக்குள் இந்த ரோபோவை செலுத்த முடியும்.

முக்கிய பயன்பாடு
தீ விபத்துக்களின்போது, பொருட்கள் வெடித்து சிதறும் இடங்களில் தீயணைப்பு செய்வதற்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கும் என்று நியூ சவுத் வேல்ஸ் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தடைகளை தாண்டும்...
இந்த ரோபோவின் முன்புறத்தில் புல்டோசர் போன்ற பிளேடு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக, வெடித்து சிதறிக் கிடக்கும் பொருட்களையும், தடைகளையும் மிக எளிதாக அகற்றிக்கொண்டே முன்னேறிச் செல்லும்.

இதர சிறப்பம்சங்கள்
30 டிகிரி சரிவான தளங்களில் கூட ஏறக்கூடிய திறன் பெற்றது. இந்த ரோபோவில் 75 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உள்ளது. 3.7 டன் எடை கொண்ட இந்த ரோபோவில் இருக்கும் அனைத்து வசதிகளையும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

விளக்குகள்
இந்த ரோபோவில் 4 ஹெட்லைட்டுகள், 2 ஸ்பாட் லைட்டுகள், எச்சரிக்கை விளக்குகள், டெயில் லைட்டுகள் உள்ளன. இதன்மூலமாக, இரவு மற்றும் இருள் சூழ்ந்த பகுதிகளிலும் எளிதாக தீயணைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

முதலீடு
இந்த புதிய தீயணைப்பு ரோபோவை தயாரிப்பதற்காக, அந்நாட்டு அரசு 3.10 லட்சம் டாலர்களை முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








