விபத்தில் சிக்கினாலும் சேதாரமடையாத 'சூப்பர் மேன்'... ஆஸ்திரேலிய நிபுணர்கள் அசத்தல்!
இந்த செய்தி கொஞ்சம் ஆச்சரியத்தையும், விந்தையை தருவதாகவே இருக்கும். ஆம், உலகம் முழுவதும் வாகனப் பெருக்கம் அதிகரித்து வருவதற்கு ஏற்ப, விபத்துக்கள் என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. சாலை விதிமீறல், பாதுகாப்பு குறைபாடுகள் போன்றவற்றால் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் சாலை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்.
இந்த நிலையில், விபத்தில் சிக்கினாலும் சேதாரமில்லாமல் உயிர் பிழைப்பதற்கான மனிதனின் உடலமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற ருசிகர ஆராய்ச்சி ஒன்றை நடத்தியிருக்கின்றனர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிபுணர்கள். அதில், மனிதனின் உடலமைப்பு எவ்வாறு இருந்தால் சேதாரமின்றி உயிர் பிழைக்க முடியும் என்பதை ஒரு சூப்பர் மனிதனை சிற்பமாக வடித்துக் காட்டியிருக்கின்றனர்.

முயற்சி
ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து துறைதான் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. சாலை விதிகள் மற்றும் விபத்துக்களை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக இந்த விந்தையான மனித சிற்பத்தை பயன்படுத்த இருக்கின்றனர்.

விசேஷ டீம்
அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர், கார்களின் பாதுகாப்பு குறித்து கிராஷ் டெஸ்ட் நடத்தும் நிபுணர் ஆகியோருடன் சேர்ந்து மெல்போர்ன் நகரை சேர்ந்த பிரபல சிற்ப கலைஞர் பேட்ரிசியா பிசினினி இந்த விந்தையான மனித சிறப்பத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

கிரஹாம்
இந்த செயற்கை மனிதனுக்கு கிரஹாம் என்று பெயரிட்டிருக்கின்றனர். இந்த செயற்கை மனிதனின் உடலின் ஒவ்வொரு உறுப்பும், எலும்புகளும் வாகன விபத்தின்போது மோதல்களை தாங்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

விந்தை
தட்டையான முகம், விபத்தின்போது அதிர்வுகளை தாங்கும் வகையில் கழுத்து இல்லாத உடலமைப்பு மற்றும் மூளையை காக்கும் விதத்தில் பெரிய மண்டை ஓட்டு அமைப்புடன் இந்த சிற்பத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

வலிமையான தேகம்
வலிமையான தேக அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மனிதனின் நெஞ்சுக்கூட்டில் காற்று அறைகளுடன் கூடிய எலும்புகளும் உள்ளன. இதன்மூலமாக, இதயத்தை பாதுகாக்க முடியும் என்பதுடன், மோதல் அதிர்வுகளை காற்று அறைகள் உள்வாங்கிக் கொள்ளும் என்கின்றனர். அத்துடன், சிராய்ப்புகளை தவிர்க்கும் தடிமனான தோல் அமைப்பும் உள்ளது.

மூட்டு எலும்புகள்
முழங்காலுக்கும், கணுக்காலுக்கும் இடையில் கூடுதலாக ஒரு மூட்டு எலும்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பாதசாரிகள் விபத்தில் சிக்கும்போது அடிபட்டால்கூட இந்த கூடுதல் மூட்டு எலும்பு தப்பிப்பதற்கு உதவும் என்கின்றனர்.

ஆராய்ச்சி மையம்
ஆஸ்திரேலியாவின் மோனாஷ் விபத்து ஆராய்ச்சி மையத்தில்தான் சிறப்புக் குழுவினர் இந்த செயற்கை மனித உடலமைப்பை உருவாக்கியிருக்கின்றனர். இந்த செயற்கை மனிதனின் மூலமாக சாலை பாதுபாப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ள ஆஸ்திரேலிய போக்குவரத்துத் துறை திட்டமிட்டிருக்கிறது.

என்னை மாதிரி உங்களுக்கு உடம்பு இல்லை. எனவே, கவனமாக வாகனங்களை ஓட்டுங்கள் என்று இந்த கிரஹாமை வைத்து ஆஸ்திரேலிய போக்குவரத்துத் துறை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய இருக்கிறது.


Click it and Unblock the Notifications








