திரைப்பட ஹீரோக்களை மிஞ்சிய ஆட்டோ ஓட்டுநர்.. ஒரு குடும்பத்தையே காப்பாற்றிய நிஜவாழ்க்கை ஹீரோ இவர்தான்!
காருடன் ஆற்றில் மூழ்கிய ஐந்து பேரை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆபத்தில் இருக்கும் மக்களை காப்பாற்றுவது போன்ற காட்சிகளையெல்லாம், நாம் திரைப்படங்களில் வரும் ஹீரோக்கள் செய்வதை மட்டுமே நாம் பார்த்திருப்போம். அந்தவகையில் பல ஹீரோக்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோவைக் காண்பதுகூட மிக கடினமாக இருக்கின்றது. ஏன்... நம்மில் பலர், ஆபத்தில் இருப்பவருக்கு உதவி புரியாமல், செல்போனில் படம் பிடித்து, அதனை வாட்ஸ்-அப்பிலும், பேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸாக வைக்கின்ற அளவிற்கு கல் நெஞ்சம் படைத்தவர்களாகவும், சுயநலம் கொண்டவர்களாகவும் உள்ளோம்.

இந்நிலையில், தன் உயிரை சுத்தசமென நினைத்து ஆபத்தில் இருந்த ஒரு குடும்பத்தையே, ஆட்டோ ஓட்டும் இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
இந்த சம்பவமானது, கேரள மாநிலம், மலப்புறம் ஜில்லாவில் உள்ள பொன்னணி என்ற பகுதியில் நடைபெற்றுள்ளது.

கேரளாவைப் பூர்விமாகக் கொண்டவர் வினோத். பொன்னணி பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகின்றார். இவர், வழக்கம்போல் சவாரிக்காக கர்மா சாலையில் உள்ள பாரதபுழா ஆற்று பகுதியில் நேற்று சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன்பாக கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அந்த கார் திடீரென, பாலத்திலிருந்த சுவற்றில் மோதி ஆற்றுக்குள் தவறி விழுந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வினோத், உடனடியாக ஆட்டோவை நிறுத்திவிட்டு, சிறிதும் யோசிக்காமல், ஆற்றுக்குள் குதித்து காருக்குள் இருந்த அனைவரையும் பத்திராமாக காப்பாற்றியுள்ளார். காரில், ஆறாம் வகுப்பு பயிலும் சிறுவனுடன் சேர்த்து, மொத்தம் ஐந்து பேர் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரையும், ஒவ்வொருவராக வினோத், காப்பாற்றி கரை சேர்த்துள்ளார்.

இந்த காரில், அதேப் பகுதியைச் சேர்ந்த நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணித்ததாகக் கூறப்படுகின்றது. காரை நவாஸ் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக காட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் சுவற்றின்மீது மோதி, ஆற்றுக்குள் விழுந்துள்ளது. மேலும், அப்போது காரின் கதவுகள் திறக்கவில்லை என காரில் இருந்த பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பாலத்திலிருந்து ஆற்றுக்குள் கார் விழுந்த சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேசமயம், தன் உயிரை சற்றும் பொருட்படுத்தாது, இரண்டு முறைக்கும் மேலாக பாலத்தின் மேலிருந்து குதித்து, ஐவரைக் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர் வினோத்துக்கு பாராட்டு மழை குவிந்து வருகின்றது. நேரத்தை வீணடிக்காமல் அவர் செய்த செயலால், நீரில் மூழ்கிக்கொண்டிருந்த ஐவரின் உயிர் காப்பற்றப்பட்டது.

தொடர்ந்து, சம்பவம் குறித்து வந்த போலீஸார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காரில் பயணித்த அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது விபத்து நிகழ்ந்த அதே பகுதியில் ஏற்கனவே பலமுறை விபத்துகள் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. அந்த பாதையானது சற்று ஆபத்தான, குறுகலான பாதையாகவே இருப்பதே இவ்வாறு விபத்துகள் அரங்கேறக் காரணமாக இருப்பதாக சொல்லப்படுகின்றது.

பெரும்பாலான விபத்துகளில், காரின் கதவுகள் திறக்காமல் ஸ்ட்ரக் ஆகிவிடுகின்றது. இது, இந்த விபத்து மட்டுமல்லாமல், பல விபத்துகளில் இவ்வாறே நடைபெறுகின்றது. இதன்காரணமாகவே பலர், காரை விட்டு வெளியேற முடியாமல், அதனுள்ளேயே சிக்கி பெரும் ஆபத்தைச் சந்திக்கின்றனர். இதுபோன்ற, சூழ்நிலையில் காரின் ஜன்னல்களை உடைத்துவிட்டு வெளியேறலாம்.

அதேபோன்று, நீரில் மூழ்கிய காரின் கதவுகளை திறப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஏனென்றால், நீரின் அழுத்தத்தால், காரின் கதவுகள் இருக்கமானதாக மாறிவிடுக்கின்றன. ஆகையால், நீரில் மூழ்கிய காரின் கதவுகள் விரைவில் இருக்கமடைந்துவிடும். ஆகையால், நீரில் மூழ்காத கண்ணாடி பகுதியை உடைத்து வெளியேற முயற்சிக்க வேண்டும். அதேசமயம், ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பதற்கு ஏதுவான கருவிகள் சந்தையில் விற்கின்றன. அதனை எப்போதும் கைவசம் வைத்திருப்பது அவசியமாகும். இது ஆபத்து காலங்களில் உதவும்.


Click it and Unblock the Notifications








