கேள்விக் குறியாக மாறிய லட்ச கணக்கான ஒப்பந்த பணியாளர்களின் நிலை... எப்போதுதான் இந்த நிலைமை மாறுமோ!!
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலின் தீவிர தன்மையால் மீண்டும் ஒப்பந்தம் மற்றும் வேற்று மாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உருவாகியிருக்கின்றது. இதுகுறித்த விரிவான தகவலைக் கீழே காணலாம்.

மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்தும் வகையில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் மிகக் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இருப்பினும், நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டு நாடு தழுவிய ஊரடங்கு என்ற பேச்சை எடுக்காமல் மத்திய அரசு மௌனம் காத்து வருகின்றது.

அதேசமயம், நாள்தோறும் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பரவலின் அதி தீவிரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகள் சில தன்னிச்சையாக முழு ஊரடங்கை அறிவித்து வருகின்றன. குறிப்பாக, வைரஸ் பரவல் அதிகம் தென்படும் மாநிலங்களிலான தமிழகம், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தன், மத்திய பிரதேசம், ஹர்யானா, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், மேற்கூறப்பட்ட மாநிலங்களை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் தற்போது முழுமையாக முடங்கியிருக்கின்றன. இதனால், நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் வாகனத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

லாக்டவுண் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்களில் உற்பத்தி மற்றும் தயாரிப்பு என அனைத்து பணிகளையும் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருக்கின்றன வாகன நிறுவனங்கள். இதனால், வாகன உலக சார்ந்து இயங்கி வரும் சிறு-குறு நிறுவனங்களும் பெருமளவில் பாதிக்கத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக, பலர் வேலையை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், வாகன உலகை சார்ந்து இயங்கி வரும் சிறு-குறு நிறுவனங்களில் பணி புரியும் ஒப்பந்த பணியாளர்களின் நிலைமை என்ன ஆகும் என்பதே தெரியவில்லை என வாகனத்துறை வல்லுநர்கள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு மிக விரைவில் முடிவடிந்துவிடும் என எண்ணியநிலையில், அதி தீவிரமாக பரவி வரும் வைரஸ் தொற்றால் இந்த நிலை மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதாவது, கடந்த ஆண்டைப் போன்றே இன்னும் ஒரு சில வாரங்களுக்கு முழு ஊரடங்கு தீவிரப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையால், வாகன உற்பத்தி நிறுவனங்களைச் சார்ந்து இயங்கும் சிறிய நிறுவனங்கள் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இதன் விளைவாக சிறு-குறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நடுத்தெருவிற்கு வரும் நிலை உருவாகியிருக்கின்றது.

ஆனால், தற்போது வரை ஊரடங்கு நீட்டிப்புகுறித்து அறிவிக்கப்படாததால் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டும் குறைந்த பணியாளர்களுடன், குறைக்கப்பட்ட ஷிஃப்ட்டுகளுடன் உற்பத்தி பணிகளைத் தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில் மனேசர் பிளாண்டை மையமாகக் கொண்டு இயங்கும் மாருதி சுசுகி இந்தியா மற்றும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் ஆகிய நிறுவனங்கள் ஆமை வேகத்தில் அதன் உற்பத்தி பணிகளை தொடங்கியிருக்கின்றன.

இதற்காக கணிசமானோருக்கு மட்டுமே கடந்த ஞாயிறு அன்று அழைப்புவிடிக்கப்பட்டிருக்கின்றது. மேலும், பலருக்கு சொந்த ஊருக்கு திரும்ப வேண்டாம் விரைவில் அழைப்பி விடுக்கப்படும் என தங்களின் நிறுவனம் கூறியிருப்பதாக மாருதி நிறுவனத்தின் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த குல்தீப் ஜங்கு கூறியுள்ளார்.

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திற்கு அவர் மேலும் கூறியதாவது, "பிற மாநிலங்களில் இருந்து வந்து பணி புரிபவர்கள் தற்போது தற்காலிக விடுதிகளில் தங்க வைக்குபட்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் முழு ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமானால், மிகப் பெரிய சிக்கல் ஏற்படும். ஊழியர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்படும்" என்றார்.

தற்போது ஷோ-ரூம்கள் பல மூடப்பட்டிருப்பதால், விற்பனை சற்று குறைவாக இருக்கின்றது. இந்த நிலை குறுகிய காலம் வரை காணப்படும். சந்தையில் நிலவும் சூழ்நிலையைப் பொருத்தே உற்பத்தி பணிகள் தீவிரப்படுத்தப்பட இருப்பதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதுமாதிரியான சூழ்நிலையையே அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் சந்தித்து வருகின்றன. இதனால் ஒப்பந்த பணியாளர்கள் எத்தகைய சிக்கலைச் சந்திப்பர் என்பதே பலரின் கவலையாக மாறியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








