ஆட்டோ கண்ணாடியை சுக்குநூறாக நொறுக்கிய கார் டிரைவர்! ஒட்டுமொத்த பெங்களூரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த வீடியோ!
இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையே பிரச்னை (Road Rage) ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது என கடந்த காலங்களில் நாங்கள் எழுதிய செய்திகளில் நீங்கள் படித்திருக்கலாம். இது தற்போது சற்று சுருங்கி பெங்களூர் சாலைகள் என்றாகி விட்டது. ஆம், பெங்களூர் நகர சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையே பிரச்னைகள் ஏற்படுவது என்பது தற்போது மிகவும் சாதாரணமான ஒரு விஷயமாக மாறி விட்டது.
பெங்களூரின் வர்த்தூர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரில் வந்த ஒரு குடும்பத்தினரை, ஒரு சில டூவீலர்களில் கும்பலாக வந்த சிலர் மிரட்டினர். இந்த வீடியோ வெளியாகி பெங்களூர் பெருநகரவாசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

இந்த சூழலில் வர்த்தூருக்கு அருகே உள்ள மாரத்தஹள்ளி பகுதியில் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம், மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்த ஒரு குடும்பத்தினரும், ஆட்டோ டிரைவர் ஒருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொள்வதை இச்சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது.
இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கார் டிரைவரிடம் இருந்து ஆட்டோ டிரைவர் எதையோ பறித்து செல்கிறார். அனேகமாக அது, கார் டிரைவரின் செல்போனாக இருக்கலாம் என தெரிகிறது. கார் டிரைவர் எவ்வளவோ முயன்றும், அவரால் செல்போனை திரும்ப பெற முடியவில்லை.

இதற்கிடையே ஆட்டோ டிரைவர் செல்போனுடன் அங்கிருந்து சென்று விட்டார். ஆட்டோ அங்கேயேதான் நின்று கொண்டிருந்தது. செல்போனுடன் ஆட்டோ டிரைவர் தப்பியதால், கார் டிரைவர் கோவத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார். இதன் வெளிப்பாடாக ஆட்டோவின் முன் பக்க விண்டுஷீல்டின் வைப்பரை உடைத்து, அதன் மூலம் கண்ணாடியையும் அவர் உடைக்க நேரிட்டது.
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், கார் டிரைவர், ஆட்டோ கண்ணாடியை உடைப்பதை நம்மால் மிகவும் தெளிவாக காண முடிகிறது. ஆட்டோவின் கண்ணாடியை உடைத்த கையோடு, அவர் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். அதன் பிறகு, அங்குள்ள ஒரு சந்திப்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரிடம், அவர் நடந்த சம்பவங்களை புகாராக தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதன்பேரில் காவலர் நிகழ்விடத்திற்கு வர, செல்போனுடன் தப்பிய ஆட்டோ டிரைவரும் அங்கு வந்து சேர்ந்தார். இதன்பின் ஆட்டோ டிரைவர் மற்றும் கார் டிரைவர் ஆகிய இருவரிடமும் காவலர் விசாரணை நடத்தியுள்ளார். ஆனால் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டதா? யாரேனும் கைது செய்யப்பட்டார்களா? என்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை.அதேபோல் இந்த மோதலுக்கு அடிப்படையாக அமைந்தது? எது என்பதும் உறுதியாக தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெங்களூர் நகரில் இவ்வாறான மோதல் சமீப காலமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சாலையில் மற்ற வாகன ஓட்டிகளுடன் மோதல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டுமென்றால், நாம் ஒரு சில விஷயங்களை மனதில் வைக்க வேண்டும்.
முதலில் எங்கு செல்வதாக இருந்தாலும், சற்று முன் கூட்டியே புறப்பட வேண்டும். அப்போதுதான் பரபரப்பு இல்லாமல் நிதானமாக செல்ல முடியும். இல்லாவிட்டால் பரபரப்பு கோபமாக மாறி, மற்றவர்கள் மீது வெளிப்படலாம். அது இத்தகைய மோதல்களுக்கு வழிவகுக்கும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
இதுதவிர நல்ல மனநிலையில் வாகனங்களை ஓட்டுவது, தேவைப்படும் சமயங்களில் மட்டும் ஹாரன்களை பயன்படுத்துவது, போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றுவது மற்றும் மற்ற வாகன ஓட்டிகளின் சூழல்களை புரிந்து கொள்வது ஆகியவற்றின் மூலமும் சாலையில் தேவையில்லாத பிரச்னைகளை நம்மால் தவிர்க்க முடியும்.
பெங்களூரில் தற்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தை பொறுத்தவரை முதல் தவறு யார் மீது என்பது நமக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் 2 பேர் மீதும் தவறு இருப்பதாகவே கருத தோன்றுகிறது. ஒருவேளை ஆட்டோ டிரைவர் செல்போனை பறித்தது தவறு என்றால், கார் டிரைவர் பொறுமை காத்திருக்கலாம். எனவே எந்தவொரு சூழலிலும் பொறுமை காக்க வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications








